கலைஞர் தமிழ்
வாழ்த்து சொல்வோம் கலைஞருக்கு
தமிழ் காலந்தோறும் மாறி வந்திருக்கிறது பல்லாயிரம் வருச பழமையினூடு புத்தாயிரத்தின் சவால்களையும் எதிர் கொண்டு தன்னை தகவமைத்துக் கொண்ட மொழி நம் தமிழ்.


இறையனார் களவியல் உரை முக்கியமான மடை மாற்றம் அதன் பின் திராவிட அடுக்கு மொழி நடை.
சங்க இலக்கியம் முதல் பல் வேறு வடிவ மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.அவற்றின் வழி மாற்றங்கள் கவிதை உரைநடை என இரு பெரும் வகையினூடு நுண் வடிவங்களாக பிரிந்து தமிழ் மரபு பயணிக்கிறது.
உரையாசிரியர்கள் மூலம் அறிமுகமான உரை நடை மரபு இன்று புதிய பரிணாமங்களின் வழி பயணிக்கிறது.19ம் நூற்றாண்டில் மணிப்பிரவாள நடை முக்கியப்பட்டு தமிழ் தன் தனித்துவத்தை இழக்கும் நிலை ஏற்பட்டது.
தனித் தமிழ் இயக்கமும் திராவிட இயக்கமும் இதனை தடுத்து நிறுத்தும் முயற்சியில் பெரும் வெற்றி கண்டன இன்று திராவிடத்துக்கு எதிராக குரல் எழுப்புவோர் இதனை மறந்து விடுகின்றனர்.இந்த இயக்கங்களின் முயற்சிக:ள் இருந்திருக்காவிட்டால் இன்று சமஸ்கிருதம் கலந்த வேறொரு வடிவத்தை தமிழ் பெற்றிருக்கும்.

கலைஞர் தமிழ் நடை தனித்துவமானது. மேடைப் பேச்சு ,எழுத்து என இரண்டிலும் கலைஞரின் வீச்சு முக்கியப் படுகிறது.அறுபதுகளில் அவர் எழுத்து அன்றய இழைஞர்களை வெகுவாக கவர்ந்தது.பல நூறு இளைஞர்கள் அவர் எழுத்தில் மயங்கினர் என்று சொல்லலாம்.கலைஞரைப் போல் எழுத்தால் பேச்சால் ஈர்த்தவர் வேறு யாரும் இல்லையென்றெ சொல்லலாம்.பேரறிஞர் அண்ணா அவருக்கான இடம் இருந்தது.
கலைஞர் தமிழ் என நாம் பிரித்து பாற்பதற்கு அதனை நிய்யாயப் படுத்துவதற்க்கான காரணங்கள் நிறையவே உள்ளன.தனக்கான தமிழ் நடையயை கவிதை,கட்டுரை,சிறுகதை.நாவல் ,சினிமா ,மேடைப் பேச்சு என எல்லா தளத்திலும் அவர் முத்திரை பதித்தவர்
கையெழுத்து பத்திரிகையாக தொடங்கப் பட்ட முரசொலி கலைஞரின் எழுத்தை தாங்கி இன்றுவரை தொடர்கிறது கிட்டத்தட்ட எண்பது வருடங்கள் இது ஒரு உலக சாதனையே.உடன்பிறப்புக்கான கடிதங்கள் தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றை கூறும் ஆவணம்.உலகில் வேறு எந்த அரசியல் தலைவருக்கும் இல்லாத சிறப்பு இங்கு வெளிப்படுகிறது
19 வயதில் அவர் எழுதிய முதல் நாடகமான நச்சுக் கோப்பையில் இப்படி கூறுவார்.
''உபயோகமற்ற சமூகமே! உழுத்துப் போன பிசாசே!கொன்று விட்டாயா பழனியப்பனை?அவன் என்ன தவறு செய்தான்?ஏன் இந்தப் பழிகார வேல?பள்ளந்தனில் வீழும் பழமைச் சமூகமே!சாகப் போகும் சாதிக் கட்டுப்பாடே!பொட்டுப் பூச்சியே!புன்னைத் தேரையே!அழு,இளி,அங்சு!குனி பிதற்று!..இது ஒரு உலகம்!இது ஒரு வாழ்வு!இதற்கொரு சமுதாயம்!கட்டியாள ஒரு கடவுள்!தூ..வெட்கமில்லை!நின்று தடை புரிந்த சமூகமே!நீ..நிச்சயம் தோல்வி கொள்வாய்''
இன்றைக்கும் எவ்வளவு பொருத்தமாக உள்ளது.
கலைஞரின் நாடக மொழி மக்களிடம் பெரும் பாதிப்பை உண்டாக்கியது.திராவிடர்கழக மகாநாடுகள் ,தி.மு.க மகாநாடுகள் கூட்டங்கள் எல்லாவற்றிலும் சமூக பிரச்சினைகளை ,சமூக சீர்திருத்த கருத்துக்களை,பகுத்தறிவு சிந்தனைகளை கொண்டு சேர்த்தன.பழந் தமிழ் நினைவுகளை மீட்டு தந்தன.
கலைஞர் தமிழ் என வகைப்படுத்துவதற்கான சான்றாதாரங்கள் அவர் நாடகங்களில் மிகுதியாகவே வெளிப்படுகிறது.தமிழ் நாடக வரலாற்றில் கலைஞரின் தமிழ் முக்கிய பங்கு வகிக்கிறது.
கலைஞரின் நடகங்கள்
1.நச்சுக்கோப்பை
2.தூக்குமேடை
3.மகான் பெற்ற மகன்
4.இரதக் கண்ணீர்
5.பரப் பிரம்மம்
6..மணிமகுடம்
7.உதய சூரியன்
8.ஒரே முத்தம்
9.காகிதப் பூ
10.திருவாளர் தேசியம் பிள்ளை
11.சிலப்பதிகார நாடக காப்பியம்
12.அனார்க்கலி
13.சாக்ரட்டிஸ்
14.நானே அறிவாளி
15.பாரதாயணம்
16.சேரன் செங்கூட்டுவன்
17.புனித இராச்சியம்
18.நான்மணி மாலை(குறு நாடகங்கள்)
19.உன்னைத்தான் தம்பி
இலங்கை கிழக்குப் பல்கலைகழக நுண்கலைத் துறை கலைஞரின் ''தூக்கு மேடை'' நாடகத்தை பாடப் புதகங்களில் ஒன்றாக வைத்திருந்தது.இங்கு குறிப்பிடத் தக்கது.
கலைஞரின் எழுத்து நடை பற்றி எழுத்தாளர் முருகேச பாண்டியன் ''திராவிட இயக்க வளர்ச்சியில் கலைஞரின் நாடகங்கள் ''எனும் நூலில் இப்படி குறிப்பிடுவார்.
''கலைஞரின் நடையானது தீவிரமான கருத்தினை கூர்மையான சொற்கள் மூலம்வெளிப் படுத்துகிறது எனவே அவர் ,சொற்களின் பயன்பாடு மூலம் கேட்பவரின் மனதை சிந்திக்கத் தூண்டுகின்றனவாக உரையாடலை அமைப்பதில் அக்கறையெடுத்துக் கொண்டுள்ளார் .உரையாடல்களில் எண்ணற்ற உவமைகளைப் பயன் படுத்துதல்,போகிற போக்கில் புராண இதிகாச கதைகளை கேலி செய்தல்,மூடநம்பிக்கைகளை கிண்டல் செய்தல்...... புராண இதிகாச அலங்கார நடை குடும்ப கதைகளின் வறண்ட நடை போன்றவற்றிலிருந்து கலைஞரின் நடை முற்றிலும் மாறு பட்டது...செயலூக்கம் மிக்கதாக மொழியயை மாற்றியமைத்த பெருமை கலைஞரையே சாரும்''
இதனால்தான் கலைஞர் தமிழ் என நான் குறிப்பிடுகிறேன்.பின்னால் தமிழில் எழுந்த தமிழ் உரை நடை மாற்றங்கள் கலைஞர் எழுத்தின் நீட்சியாகவும் கொள்ள முடியும்.
பல நூறு கவி பாடியிருப்பார் கலைஞர் எல்லோரளும் விதந்துரைக்கப் படும் ஒரு கவிதை அண்ணா இறந்த போது அவர் பாடியது
''கவியினில் பொருளெனக் கரும்பினில் சுவையெனக்
கதிரினில் ஒளியெனக் காவினில் மலரென
நிலவினில் குளிரென நிலமிசை வளமென
குலவிடும் அருவி குழறிடும் மொழியென
உலவிடும் காற்றில் ஏறிடும் இசையென
அலையெழுங் கடலில் ஆடிடும் நுரையென
கலைமணங் கமழக் கூடிய கவிஞர்
தலைமகன் அண்ணா திருப்புகழ் பாடிட
நிலமகள் வடிக்கும் கண்ணீர் அந்தோ! வெள்ளம்! வெள்ளம்! மாபெரும் வெள்ளம்!''
என தொடரும் அது.
தமிழ் திரைப்படங்களின் போக்கையே திசை திருப்பியது கலைஞர் தமிழ் பராசக்தி திரைப்படம் அந்த மாய வித்தையயை நிகழ்த்தி காட்டியது சிவாஜி எனும் அற்புத கலைஞனின் குரல் வழியான உடல் மொழி மூலம்.இன்று வரை நடிக்க வரும் எல்லோருக்கும் வேதமாகிப் போன பராசக்தி வசனங்கள்.
''இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே இவ்வழக்கு விசித்திரமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான். கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். பூசாரியைத் தாக்கினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை. கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக. பூசாரியைத் தாக்கினேன். அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல் வேஷமாகி விட்டதைக் கண்டிப்பதற்காக.உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநலம் என்பீர்கள். என் சுயநலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் அதைப் போல. என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நிடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன். கேளுங்கள் என் கதையை! நீதிபதி அவர்களே! தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.தமிழ்நாட்டிலே இத்திருவிடத்திலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு. தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? ''
என நீளும் நீதி மன்ற காட்சிகள்.
தமிழின் மீட்சியாய் அமைந்த அவர் எழுத்துகள் சங்கத் தமிழ் ,தொல்காப்பிய பூங்கா, திருக்குறளுக்கான புதிய உரை சிலப்பதிகாரத்தை முதன்மைப் படுத்திய அவர் இலக்கிய செயல் பாடுகள் நவீன தமிழுக்கான புதிய முகத்தை தந்தது.
கம்ப ராமாயணத்தையும்,புராணங்களயும் கொண்ட்டாடிய காலத்தில் சிலப்பதிகாரத்தை முதன்மைப் படுத்தினார் கலைஞர்.
ரோமபுரிப் பாண்டியன் ,பொன்னர் சங்கர்,பாயும் புலிபண்டார வன்னியன் தன் எதுகை மோனை எழுத்தால் நவீன தமிழ் இலக்கியத்துக்கு மெருகு கூட்டிய எதுகை மோனைத் தமிழ். மாக்சிம் கோர்க்கியின் உலகப் புகழ் பெற்ற நாவலை தன் தமிழ் நடையில் சொன்ன திறன் கலைஞர் தமிழாய் விரிகிறது.
கலைஞரின் சிறுகதைகள் சமூக நீதியை பேசின ,சமூக அவலங்களை வெளிப்படுத்தின பகுத்தறிவை பறை சாற்றின. கலைஞரின் நளாயினி சிறு கதை பற்றி பேராசிரியர் அ.ராமசாமி இப்படி கூறுவார்
''1950 முன்வைக்கும் முன்மாதிரியல்ல மு.கருணாநிதி முன்னிறுத்தும் நளாயினி. தனது தோழிகளோடு நடத்தும் இந்த உரையாடலே அவள் எப்படிப்பட்டவள் என்பதைக் காட்டக்கூடியது.
” இதயா! உண்மையாகச் சொல்! நான் பத்தினியா! எப்படி?
“ஆமாம்! குஷ்டரோகம் பிடித்த கணவனைத் தாசி வீட்டுக்கு அனுப்பியிருக்கிறாயே”
“கிண்டல் செய்யாதே.. இதயா! குஷ்டரோகம் பிடித்தவனோடு கூடிக்கிடக்க எனக்கு விருப்பமில்லை. அவனோ என்னை ஆசையோடு அழைக்கிறான். அணைக்கவோ என் கை நடுங்குகிறது. ஆகவேதான் அவனைத் தாசி வீட்டுக்கு அனுப்பினேன். என் அழகுக்கு ஆபத்து வராமல் அவன் ஆவல் தீர்ந்தால் சரியென்று எண்ணினேன். இந்தத் தந்திரம் உனக்குத் தெரியாதா.. இதயா!”
“நானறியாதது ஒன்றுண்டா நளாயினி! ஆனாலும் உலகா நம்பியிருக்கிறாள். உன் பதிபக்தியை! குஷ்டரோகியைத் தாசிவீட்டுக்குத் தலையிலே தூக்கிக் கொண்டு போனதைப் பெரிய பதிபக்தி” என உலகா எண்ணுகிறாள்.
“ தலையில் தூக்கிக்கொண்டு போனேன் என்கிறாயே நீயும். திருத்திக்கொள்.! கூடையில் வைத்துத் தலையில் தூக்கிக்கொண்டு போனேன். குஷ்டரோகியைக் கையால் தொட்டுத் தலையில் தூக்கிப்போக எனக்கென்ன பைத்தியமா? அதெல்லாம் ஜாக்கிரதையாகக் கடையில் வைத்துத்தான் கொண்டுபோனேன்”
(மு.கருணாநிதி, நளாயினி- இரா.பிரேமா. பெண் மையச் சிறுகதைகள், சாகித்திய அகாதெமி)
மு.கருணாநிதியின் நளாயினி தன்னை உணர்ந்தவள். “தான் அறியாமல், ஒரு ஆடவனிடம் மாட்டிக் கொண்டேன்;அதிலிருந்து தப்பிக்க வேண்டும்” அந்தத் தப்பித்தலைத் தனது புத்திசாலித்தனத்தாலேயே வென்றெடுக்க நினைப்பவள்” தன்னை உணர்ந்த ஒரு பாத்திரமாகப் புராண காலத்து நளாயினியை முன்வைக்கத் தூண்டுவது வெறும் எழுத்து மனநிலை என்று சொல்லமுடியாது. எழுத்து, கலை போன்றவற்றின் சமூகப்பாத்திரத்தை நன்கு உணர்ந்த ஒருவரின் சிந்தனைதான் இப்படியான முன்வைப்பை - கட்டுடைப்பைச் செய்யும். திராவிட இயக்க எழுத்தாளர்கள் தங்களின் அரசியல் பார்வையோடு புராணக் கதாபாத்திரங்கள் பலவற்றைக் கட்டுடைத்துக் காட்டினார்கள். அந்த நோக்கம் முதன்மையாக அமைந்ததால், அவர்களின் கதைகளும் கவிதைகளும் புத்திசாலித்தனமான வெளிப்பாடுகளாக மட்டுமே இருந்தன. அந்தப் புத்திசாலித்தனம், சமூகமாற்றத்தை முன்வைக்கும் புத்திசாலித்தனம்.''
கலைஞரின் நவீன எழுத்துகள் எல்லாவற்றிற்கும் பேராசிரியர் அ.ராமசாமியின் கருத்துக்கள் பொருந்தும்.
No comments:
Post a Comment