Monday, 15 August 2016

நூற்றாண்டு விழாக் காணும் சேனையூர் வித்தகர் காளியப்பு விஜயசிங்கம்(புலவர்,பரியாரியார் பூசாரியார் விஸ்வலிங்கம்)


நூற்றாண்டு விழாக் காணும்

சேனையூர் வித்தகர் காளியப்பு விஜயசிங்கம்(புலவர்,பரியாரியார் பூசாரியார் விஸ்வலிங்கம்)

காலம் சில ஆளுமைகளின்ள் நினைவுகளை விட்டுச் சென்றுள்ளது.அவர்கள் நினவுகளை நாம் கடந்து சென்று விட முடியாது உலக வரலாறு நமக்கு கற்று தந்த பாடமும் அதுதான்.அவர்கள் காலத்தில் அவை பெரிதும் பேசப் படாவிட்டாலும் பிற்காலத்தில் வரலாறு அவர்களுக்கான இடத்தை தந்து மதிப்பளித்துள்ளது.அவர்களது மகோன்னதமான அறிவு என்பது அன்றய கால சூழலால் தாங்கள் வாழ்ந்த கிராமிய சூழலுக்குள்ளேயே  முடங்கிப் போனது.பலரது வாழ்வு அறியப் படாமலேயே போய்விட்டது.

பூசாரியார் பரியாரியார் காளியப்புவின் மூத்த மகன் வித்தகர் விஜயசிங்கம் அவர்கள்,இளமைக் காலத்தில் மிகுந்த குழப்படி மிகுந்தவராகவே அவர் இருந்திருக்கிறார் ஆனாலும் படிப்பில் செலுத்திய அக்கறை  ஒரு அறிஞராக உரு மாற்றியது.தன் ஆரம்பகல்வியயை சேனையூர் மெதடிஸ்த மிசன் கல்லூரியில் பெற்ற இவர்.தன் தகப்பனாரிடம் நம் மரபு வழி முறையிலான குருகுலக் கல்வி முறையின் மூலம் தன் தன் தகப்பனாரிடம் கற்றுக் கொண்டார்.தொல்காப்பியம் நிகண்டு பழந்தமிழ் இலக்கியங்கள் என்பவற்றை பிழையற கற்றார்.அதனால்  இளமையிலேயே செய்யுள் இயற்றும் ஆற்றல் கைவரப் பெற்றவராக விளங்கினார்.

இவருடய முப்பாட்டன் அறம் பாடுவதில் வல்லவர் அந்த வகையில்  ஊரவர் வளவு வேலிகளை முறித்து  பயிர்களை அழித்தஅவர்கள் வீட்டு பாலி என்கிற பசுவை அறம்பாடி கொன்றதாக ஒரு கதையுள்ளது.இவர் அறம் பாடியதை விரும்பாத தகப்பனார் காளியப்பு இனிமேல் நீ அறம் பாடக் கூடாது என சத்தியம்  வாங்கியதாக ,என்னுடைய தகப்பனார் எனக்கு இந்த கதையயை கூறியிருந்தார்.அறம் பாடும் மரபில் தன்னுயிர் ஈந்து தமிழுக்கு நந்திக்கலம்பகம் என்னும் இலக்கியத்தை நந்தி வர்மன் தந்தான் என்பது வரலாறு.

தன் இறுதிக் காலம் வரை எழுத்தாணியாலேயே எல்லாவற்றையும் எழுதினார்.எனக்கு ஓலையில் எப்படி எழுத்தாணியால் எழுதுவது என்பதையும் ஏடு படிப்பதையும் கற்றுத்தந்தவர்.எங்களுர் எழுத்தச்சன் அவர்.

சம்பூர் பத்திரகாளி மேலான காவியம்,சம்புக்களி பத்தினியம்மன் மேலான காவியம் சேனையூர் வர்ணகுலப்பிள்ளையார் ஊஞ்சலென்பன  இவர் படைப்புகளில் குறிப்பிடத்தக்கன.பல நூல்களை அவர் ஏட்டு வடிவில் எழுதி வைத்திருந்தார்.ஆனால் அவர் சேமித்து வைத்திருந்த பழந்தமிழ் ஏடுகளும் ,மந்திர ஏடுகளும் அவர் ஆக்கங்களும் யுத்த வெள்ளம் காவு  கொண்டு விட்டது.நாம் காப்பார்ற முடியாதவர்களானோம்.

வித்தகர் என்று சொல்வதற்கு எல்லாத் தகுதிகளும் பெற்றவர்.பரியாரியார்,பூசாரியார்,புலவர்,நல்ல குரல் வளம் மிக்க பாடகர் ,நடிகர் என பல பரிமாணங்கள் கொண்டவர்.சம்புக்களி பத்தினி அம்மன் வேள்வியில் அவர் குளிர்த்தி பாடும் அழகே தனி.அவர் பாடிய அந்த இசை மரபை வைத்துக் கொண்டெ கிழக்குப் பல்கலைக் கழகத்தில் நான் பணியாற்றிய போதுகண்ணகி குளிர்த்தி என்ற நிகழ்வை பேராசிரியர்மெளனகுருவோடு இணைந்து வடிவமைத்தேன்.இன்னமும் அவர் பாடிய குளிர்த்தி இசை என் காதுகளில் .

சம்புக்களி பத்தினி அம்மன் ,சேனையூர் வீரபத்திரர் கோயில் ,சேனையூர் கும்பத்துமால் ஆகியவற்றின் பூசகராக சிறப்பாக பணியாற்றியவர்
மந்திரம் சொல்வதில் இவரை மிஞ்ச எவருமிலர் என்றே சொல்லலாம் .அவர் மொழியில் அழகாய் மந்திரங்கள் வந்து விழும்.ஊரில் எங்கு வீட்டு வேள்வி நடந்தாலும் இவரே பிரதான பூசகர்.

சம்பூர் பத்திரகாளிக்கு கோயில் கட்டி கும்பாபிசேகம் செய்வதற்கு முன்பு வருடந்தோறும் வேள்வி முறை சடங்கே நடை பெற்று வந்தது அவ் வேள்வியில் முன்னர் இவர் தகப்பனார் காளியப்பு அவர்கள் பங்கு பற்றி வந்தார் அவர் பின் இவரே அந்த உரிமை முறையில் பங்கு பற்றினார்.அங்கு வைக்கப் படும் மடைகளில் ஒன்று எங்கள் குடும்பத்துக்கு உரிமையாய் இருந்தமை இங்கு குறிப்பிடத் தக்கது.

நம் மண்ணுக்கே சொந்தமான பத்ததி முறை பரிகல வேள்வி முறை ஆகியவற்றிலும்  ,நம் மரபு சார்  சடங்கு முறைகளிலும் மிகுந்த ஞானம் உள்ளவராக அவர் விளங்கினார்.

ஆயுள் வேத வைத்திய முறையில் கொட்டியாரம் முழுவதும் புகழ் பெற்றவர் அவருடய தகப்பனார் விட்டுச் சென்ற இடத்தை தன் திறமையல் இட்டு நிரப்பியவர் எனலாம்.கொட்டியாரத்தின் எல்லைகளான கெவுளி முனை தொடக்கம் வெருகல் வரை இவர் வைத்தியம் புகழ் பெற்றிருந்தது.தம்பலகாமம் ஆலங்கேணி எனவும்  தன் வைத்தியத்தால் புகழ் பெற்றவர்.

புராண படனம் செய்வதில் கொட்டியாரத்தில் அவருக்கு நிகர் அவரே.வெருகல் சித்திரவேலயுதர் கோயில்,திருக்கரசையம்பதியில் ஆண்டு தோறும் நடைபெறும் திருக்கரசை புராண படிப்பு,சேனையூர் வர்ணகுல பிள்ளையார் கோயிலில் நடை பெறும் கந்த புராண படிப்பு ஆகியவற்றில் பயன் சொல்வதும் புராணம் படிப்பதும் அவர் அறிவின் அகட்சியின் அடையாளங்கள்.

அகடவிகடமாக பேசுவதிலும் கெட்டிக்காரர் இவர்.ஆங்கிலத்தில் sense of humour என்றுசொல்வார்களே  இவரிடம் இயல்பாகவே இருந்தது அதற்காகவே அவர் எங்கு சென்றாலும் அவரைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும்.

அவரை அவர் அகடவிகடத்தை பக்கத்திலிருந்து பார்த்து ரசித்தவன் நான்.எப்போதும் வேட்டியும் சால்வையுமே அவர் அங்க வஸ்த்திரம் சேட்டுப் போட்டதை நான் பார்த்ததில்லை.காதில் கடுக்கன் தலையில் குடுமி என மரபு மாறாமல் கடைசி வரை வாழ்ந்தவர்.

அவர் நம்மோடு இன்றில்லை நம்மை விட்டு மறைந்து முப்பது வருடங்கள் உருண்டோடி விட்டன் இந்த நூற்றாண்டு நினைவில் அவரோடு நாம் .என் அப்புச்சியின் அண்ணன் அவர்.என் பெரியப்பா நான் எப்போதும் பெரியையா என்றுதான் அழைப்பேன்.

No comments:

Post a Comment