Thursday, 11 August 2016

ஒரு கொலையும் பல கனவுகளும்

ஒரு கொலையும் பல கனவுகளும்

வாசலில் பொன்னவரைப் பூக்கள் சொரிந்து மஞ்சள் பாய் விரித்ததுபோல, அந்த அதிகாலையிலும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தாள் மலர். சூரியன் இன்னும் முகம் காட்டாத போதும் காலை ஒளியில் அவள் வேலை செய்யும் அழகே தனி.இன்று மட்டுமல்ல என்றுமே அவள் அப்படித்தான் எப்போது உறங்குவாள் எப்போது விழிப்பாள் என்று யாருக்கும் தெரியாது  சுறு சுறுப்புக்கு சொந்தக் காரி.சற்று நேரம் பொன்னாவரைப் பூக்களின் அழகில் அவள் கிறங்கிப் போனாள் .பூக்களை கூட்ட மனமில்லை கைகளால் வாரி அள்ளி முகர்ந்தாள் தன் தலையில் கொட்டி மகிழ்ந்தாள் பின் மீண்டும் தன் வயப் பட்டவளாய் கடைக்கு ஆட்கள் வந்து விடுவார்கள் அதற்குள் எல்லா வேலைகளையும் முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இயங்கத் தொடங்கினாள்

 கடை வாசல் இப்போ பளிச்சென்றிருந்தது.தன் கடை வாசலை தானே பார்த்து ரசித்து கொண்டிருந்தாள்  அவள் உழைப்பு அது.
சிறிது நேரம் கடை வாசல்  படியில் உட்கார்ந்து கொண்டாள். நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன ஏழு வருசங்களுக்கு முன் மட்டக்களப்பில் அகதி வாழ்க்கை சாப்பாட்டுக்கு மற்றவர்களிடம் கையேந்த வேண்டிய நிலை குடும்பமாக ஒவ்வொரு ஊராக ஓடி கடைசியில் மட்டக்களப்பு தஞ்சம்  கொடுத்தது.வெறும் கையுடனும்,தன் ஐந்து பிள்ளைகளுடனும் கணவனுடம் ஊர் வந்து சேர்ந்தாள் .

யுத்தம் அவள் வீட்டையும் வளவையும் அவள் உயிரென மதிக்கும் சேனையூரையும் சின்னா பின்னப் படுத்தியிருந்தது.சோர்ந்து மூலையில் உட்கார்ந்து விடவில்லை அவள்.கணவனோடு சேர்ந்து உழைத்தாள்.வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என துடித்தாள்.கனவுகள் மனதை நிறைக்க பயணித்த நாட்களை அசை போட்டாள்.

கைபேசி அலற சுயநினைவுக்கு வந்தாள்.லண்டனிலிருந்து போன்
''ஹலோ ஆர் அத்தானா  ஓம் அத்தான் பிள்ளைகள் எல்லாம் சுகம் இவர் இன்னும் எழும்பல்ல நான் முத்தம் கூட்டுறன்.அக்கா சுகமா தம்பி எப்படியிருக்கிறான்.எப்ப வாறிங்க ஒக்டோபரா அப்ப இந்தமுற கும்பம் எழுப்பம்தான்.நாங்க நல்லா இருக்கம்.சரி அத்தான் இவர் எழும்பினதும் எடுக்க சொல்றன் சரி அத்தான்''உரையாடல் முடிகிறது.

சூரியக் கதிர்கள் வளவின் கமுக மரங்களின் குலை தள்ளிய பாளைகளில் பட்டுத் தெறித்து இவள் முகங்களில் படர  செங்கறுப்பு முகம் முழுவதும் சந்தோசம் பொங்க வாழ் நாளில் தான்  நிறைய சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு கிணற்றடியில் தடித்து பெருத்த பறங்கி வாழைக் குலை பழுக்க தொடங்கியதைப் பார்த்து  அடுத்த கிழமை சாமிக்கு செய்ய வேணும் என மனதில் நினைத்துக் கொண்டு முற்றத்தில் பூத்திருக்கும் ரோஜா மலர் ஒன்றை பறித்து தலையில் சூடிக் கொண்டாள்.எப்போதும் மலர் சூடிக் கொள்ளும் ஆன் சான் சுகியைப் போல.நடிகை நந்திதாஸ் போன்ற அழகு இவளுக்கு.

எப்போதும் தன் குடும்பம் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும் மற்றவர்கள் மதிக்க இருக்க வேண்டும் என்பதே அவள் பெருங் கனவு கணவன் பிள்ளைகள் என தன் குடும்பம் சுற்றியதாகவே அவள் வாழ்க்கை சுழன்றது.மூத்தவள் ஏ எல் முடித்து வேலை ஒன்றுக்காக காத்திருப்பது அவளுக்கு ஒரு நல்ல இடத்தில் கலியாணம் பண்ணிக்  கொடுக்கணும்,இளையவள் பெரிய ஆளாப் போன சிறப்பா சாமத்திய சடங்கு செய்யணும்,மூத்தவன் இப்போ வேலைக்கு போக தொடக்கியிருக்கிறான்  அவன வெளி நாட்டுக்கு அனுப்பணும்,இளையவனை நல்லா படிக்க வைக்கணும் சின்னவளை நல்லா வளர்க்கணும் என நிறைய கனவுகள் அவளுக்கு.எல்லாம் தன் கண் முன்னாலேயே கூடிவரும் காலமாய் இந்த நாட்களைப் பார்த்தாள் அவள்.

 அம்மாவுக்கு ஒரே பெண் பிள்ளை மற்ற எல்லோரும் ஆண் சகோதரங்கள் செல்லமாக வளர்ந்தாலும் உழைப்பை உணர்ந்தவள் சிறுவயதிலிருந்தே பக்கத்து வீட்டு செல்லம்மா ஆட்களுடன் நல்ல உறவு தன் சொந்தக் காரர்களை விட அவர்களை நம்பினாள்.செல்லம்மா அக்கா அக்கா என உயிரை விடுவாள் .அண்மைகாலமாக சிறு பிரச்சினை கொடுக்கல் வாங்கலில்.அவர்களுக்காய் ஒரு தொகை பணம் கடன் வாங்கி கொடுத்திருந்தாள் .அதனால் அண்மைக்காலமாக பணத்தையும் கொடுத்தது மட்டுமல்லாமல் அவர்களிடம் ஏச்சும் வாங்க வேண்டியிருப்பதை நினைத்துக் கொண்டு தாங்கள் புதிதாக கட்டியிருக்கும் அரிசி மில் பக்கம் போய் அவ்விடத்தை கூட்டி பெருக்கி நிமிரும் போது சின்னவள் வந்து கால்களை கட்டிக் கொண்டாள்  அவளை அணைத்து முத்தம் கொடுத்து கைகளை பற்றிக் கொண்டு வீட்டுக்குள் புகுந்தாள்.

மலர் ஊரவர் அயலவர் உறவினர் என எல்லோருக்கும் பிடித்த பெண் அவள்.அவளைக் கண்டு பெருமைப் படுவோர் பலர் ,வியப்பில் வாயில் கைவைப்போர்,பொறமைப்படுவோர் என அவள் ஒரு ஆச்சரியக் குறி.

நேரம் ஆக ஆக அவள் வேலைகள் ஒவ்வொன்றாக இடம் மாறின கடைக்கு ஆட்கள் வர தொடங்கி விட்டனர்  எல்லோரிடமும் இன்முகப் பேச்சு மூதூரிலிருந்து கடைக்கு சாமான் போட வருவோரிடம் கறாராக கணக்கு வழக்குகள் ,வாடிக்கையாளர்களிடம் புதிதாய் வந்த பொருட்களை அறிமுகப் படுத்தல்,கணவருடன் கோடை வெள்ளாமை செய்கை பற்றிய விசாரிப்பு.மூத்தவளை கடையில் விட்டு விட்டு மட்டக் களப்பிலிருந்து வந்திருக்கும் மாமிக்கு நேரத்துக்கு சாப்பாடு கொடுக்கவேணும் என்று சமையல் உபசரிப்பு என பொழுது போய்க் கொண்டிருந்தது.

மாலையாயிற்று.
சேனையூர் பிள்ளையார் கோயில் நான்காம் திருவிழா .திருவிழா வந்து விட்டால் ஒவொருநாளும் மலர் கோயிலில் நிப்பாள்.மாலை நேரம் கடைக்கு ஆட்கள் கொஞ்சம் குறைவு இரவு கோயிலுக்கு கொண்டு போக கடை வாசல் படியிலிருந்து சின்னவள்பூக்களை எடுத்து கொடுக்க மாலை கோர்த்து கொண்டிருந்தாள்.

செல்லம்மா அக்கா அடிக்கடி அந்த வீதியில் குறுக்கும் நெடுக்குமாக மலரை வம்புக்கு இழுத்து சொல்ல முடியா தூசண வார்த்தைகளால் பேசிக் கொண்டு போனதை இவள் கண்டு கொள்ளவே இல்லை தன் வேலையிலேயே கவனமாக இருந்தாள்.

செல்லம்மா கிட்ட வருவதையே கவனிக்கவில்லை மகள் செல்லம்மாவை கண்டு விட்டாள் அம்மாவுக்கு சொல்வதற்கு முன் செல்லம்மா தான் முதுக்குப் புறமாய் வைத்திருந்த கத்தியால் மலரின் விலாவில் ஓங்கி ஒரு குத்து விட்டாள்  மலர் எதிர்பாராமல் நிலை குலைந்து போனாள் அவள் சுதாகரித்து எழுவதற்கு முன் அடுத்த குத்து , மூன்றவது குத்து கழுத்தில் பாய அவள் அலறல் பெருங்குரலாய் பரவ பிள்ளைகள் தம்பி என எல்லோரும் அந்த இடத்தில்.

 இரத்த வெள்ளத்தில் மலர் துடிக்க செல்லம்மா ஓடத் தொடங்க அவள் மடியிலிருந்து கைபேசி தவறி விழ தம்பி சுந்தர் அதை எடுத்த போது செல்லம்மாவின் மகன் லைனில் இருந்தான்.

கோயிலடியில் நின்ற கணவன் ஓடிவர மலர் அத்தான் அத்தான் என அவனை அணைத்து நான் மோசம் போய்ற்றன் அத்தான் என கதறினாள் பிள்ளைகள் அலறினர்  வான் ஒன்று கொண்டு வரப் பட மூதூர் வைத்தியசாலையயை நோக்கி பறந்தது வான். கணவன் மடியில் மலர் அத்தான் பிள்ளைகளை பார்த்து கொள்ளுங்கள் என மீண்டும் மீண்டும் சொன்னாள்.
''உனக்கொண்டும் நடக்காது எனக்கு குத்தியிருக்கலாமே ''என கதறினான் அவன் .மூத்தவள் அம்மாவின் கால்களை பற்றி தடவிக் கொடுக்க பயணம் தொடர்ந்தது மூதூர் ஆஸ்பத்திரியில் கை விரிக்க அம்புலன்ஸ்ஸில் திருமலை பெரியாஸ்பத்திரிக்கு ....
அவள் பேசிக் கொண்டே இருந்தாள்  தன் கனவுகளை பேசினாள் எண்ணங்களை எடுத்துரைத்தாள்.மூத்தவளை அணைத்து கொண்டாள் கணவனை கட்டிப் பிடித்தாள் முத்தமிட்டாள் அத்தான் அத்தான் என அணைத்துக் கொண்டாள்.

திருமலை ஆஸ்பத்திரி உறவினர்கள் எல்லோரும் கூடி விட்டனர் அவசர சிகிச்சை பிரிவில் வைத்தியர்கள் பரபரப்பாயினர் தீவிரசிகிச்சை நடை பெற்றது  இங்கும் வைத்தியர்கள் கை விரிப்பு ஒவ்வொருவராக  அவள் பக்கத்தில் எல்லோரிடமும் அவள் பேசினாள்  ''என் பிள்ளைகள் என் பிள்ளைகள் ''என்பதே அவள் உரையாடலின் சாராம்சம்.கணவனை அழத்தாள் அவன் கைகளை பற்றிக் கொண்டாள் பிள்ளைகள் எல்லோரையும் ஒவ்வொருவராக தடவி முத்தமிட கண்கள் மேல் சொருக காற்றில் கலந்தது அவள் உயிர் .அவள் கனவுகளுடன் அவள்.

(இது எனது இரண்டாவது சிறு கதை முதல் கதை ''நித்திய கல்யாணிகள் ''முல்லையூரான் பல்கலைக்கழகத்தில் வெளியிட்ட அக்கினி குஞ்சு சஞ்சிகையில் 1978ல் வெளி வந்தது)

No comments:

Post a Comment