கண்ணகி ஊற்சுற்று காவியம் அல்லது
கண்ணகை உடுக்கு சிந்து
ஈழத்தில் வடக்கிலும் கிழக்கிலும் கண்ணகி தொடர்பான பல சிற்றிலக்கியங்கள் தோற்றம் பெற்றுள்ளன .அவை சிந்து,கும்மி,வசந்தன்,காவியம் என பல வடிவங்களில் பயில் நிலையில் உள்ளன.

அவர் தன் குறிப்பில் இப்படி சொல்கிறார்.
''மட்டக்களப்பு தமிழகமெங்கும் கண்ணகை அம்மன் சடங்கு நடைபெறும் நாட்களில் பூசனை தோறும் படிக்கப் பெறும் அதி முக்கியம் வாய்ந்தவை இந்த ஊர்சுற்று காவிய பாடல்கள் உடுக்கு சிஉந்து என்றும் ஊர்சுற்று காவியம்வழங்கப் பெறும்''

ஊர்சுற்று காவியம் நன்கு தமிழறிந்த புலவராலேயே பாடப் பட்டிருக்கிறது .அதோடு ஒவ்வொரு ஊரிலும் உள்ள கண்ணகி பற்றி தனித்தனியான பாடல்களின் மூலம் சிறப்பு சொல்கிறது.
''திங்கள் போலும் திரு நுதலுடையாளைச்
செந்தாமரை முகத் தாளைஒப் பாளைப்
பொங்கு புகழாலுயர்ந்த பொற்றிருவைப்
பொய்யென்ன மெய்யாக வந்துதித்தவளைத்
தங்கள் பழி கொள்ளென்று பண்டியன் முன்னே
சத்துரு தனை முடித்து உயிர் மீள வந்து
அங்கணாமக்கடவை தன்னில் வாழ் கண்ணகையார்
அடித் தாமரைப் பாதம் நாளும் மறவேனே''
மொத்தமாக 72 பாடல்கள் கொண்ட ஊர்சுற்று காவியம்

''தாயும்நீ தந்தை நீ அல்லாம லெங்களிட
சஞ்சலம்தீற்பதற்கே ஒருவருண்டோ
நீயல்லால் வேறு துணை தமியேனுக்குண்டோ
நிச்சயமாக அருள் தந்துதவி புரிவாய்
ஏயதோர் செல்வமும் செனெல்லின் விளைவும்
இன்பமுடனே தந்து எங்கள் துயர் தீற்பாய்
காயாம்பூ மேனியன் தங்கையென வந்த நீ
களுவாஞ்சி நகரிலுறைகின்ற கண்ணகையே''
களுவாஞ்சிக்குடியிலிருக்கும் கண்ணகையயை இப்படி வர்ணிக்கிறது.
ஊர்சுற்று காவியம் கிழக்கில் அமைதுள்ள கண்ணகி கோயில்களை இப்படி வரிசப் படுத்துகிறது.
''பத்தியொடு வருவோர்கள் இடரகல அருள் கோண்டு
பண்டுசெறி தம்பிலுவில் பட்டிமா நகரம்
மொய்த்த புகழ் வீரமுனைகல்முனை கல்லாறு
மகிழூர் செட்டிபாளயம் எருவில் மண்முனையூரும்
வைத்த மகிழடிச்சோலை முதலைக் குடா
வளமை வரு புதுக்குடி நகரமொடு வந்தாறு மூலை
இத்தனை தலங்களிலும் அங்கணாமங்கடவை
என வந்து காரைநகர் இனிதிருந்தவளே''
மட்டக் களப்பு கண்ணகி வழிபாடு பற்றி கிழக்கின் மூத்த அறிஞரான திருவாளர் மு.கனா அவர்கள் ஒரு கட்டுரையில் பின் வருமாறு கூறுவார்
''மட்டக்களப்பில் கண்ணகி வழிபாட்டு முறைகள் - மூனாக்கானா
கடல்சூழ் இலங்கைக் கயவாகு மன்னனால் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட கண்ணகி வழிபாடானது இலங்கையின் கிழக்குக் கரையோரக் கிராமங்களில் தான் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் கண்ணகி கோயில்கள் உண்டு. இவற்றில் ஆரையம்பதி கிராமமும் ஒன்றாகும். கண்ணகி பற்றிய பழைய காவியங்கள் தோத்திரப் பாடல்களிலும், குயில் வசந்தன் பாடல்களிலும் ஆரைப்பற்றை என்ற பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால் மண்முனை என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இங்கு கண்ணகி கோயிலில்லை. இதற்குக் காரணம் பல நூற்றாண்டுகளுக்கு முன் உலக நாச்சியாரின் இராச தானியாக இருந்த மண்முனையில் சில நூற்றாண்டுகளுக்கு முன் ஏற்பட்ட ‘வைசூரி’ என்னும் பெருநோய் காரணமாக அங்கிருந்த மக்கள் பல ஊர்களிலும் குடியேறினர்.
காத்தான் குடியிருந்த ஆரைப்பற்றைப் பகுதியில் இந்நோய் இல்லாதிருந்த படியால் மண்முனையிலிருந்து ஏராளமான மக்கள் இங்கு குடியேறினர். இவர்களே மண்முனைக் கண்ணகி அம்மன் கோயிலிலிருந்த புனித சின்னங்களை தாளங்குடாவிலிருந்த ஒரு மூதாட்டியிடம் கையேற்று ஆரைப்பற்றையில் கோயில்கட்டி பிரதிஷ்டை செய்து வருடா வருடம் விழாவெடுத்து வந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கோயில் கிரியைகளெல்லாம் ஆகம முறைப்படியும் பத்ததி முறைப்படியுமே நடைபெறுவது வழக்கம். அம்மன் கோயில்களிலெல்லாம் பெரும்பாலும் பத்ததி முறைப்படியே கிரியைகள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. இக் கிரியைகளை சடங்கு என்றும், கிரியைகளை செய்யும் பூசாரிமார்களை கட்டாடியார் என்றும் சிறப்பாகக் குறிப்பிடுகிறார்கள். இவ்வூரில் பல குடியினர் இருந்தாலும் ‘பொன்னாச்சி’ குடியிலுள்ளவர்களே கட்டாடியாராக கிரியை செய்யும் உரிமை உண்டு. இக்கோயிலின் ஆரம்ப கட்டாடியாராக இருந்தவர் ‘பத்தக்’ கட்டாடியார். இவரைப் பற்றிய ஒரு கர்ண பரம்பரைக் கதை உண்டு. இவர் படிப்பறிவில்லாதவர். பத்ததி முறைகளோ, மந்திரங்களோ இவருக்குத் தெரியாது.
இதன் காரணமாக இவர் கட்டாடியாராக வர மறுத்துவிட்டார். ஒருநாள் இவரின் கனவிலே அம்மன் தோன்றி, நீ தான் எனக்குப் பூசை செய்ய வேண்டும். நாளைக்கே வந்து பூசை செய் எனக் கூறி இவரது நாவில் அட்சரங்களை எழுதியதாக முன்னோர் கூறியுள்ளனர். இதன்படி இவர் அடுத்த நாள், நீராடி புத்தாடை உடுத்து புனிதத் தன்மையோடு கோயிலுக்குச் சென்றதும், கோயில் கதவு தானாகத் திறந்ததாகவும், விளக்குகள் தானாக எரிந்ததாகவும், மணி ஓசை சிலம்போசை, அம்மானைக் காயோசைகள் கேட்டதாகவும் உடனே கட்டாடியார் உணர்ச்சிவசப்பட்டு மந்திரங்களைக் கூறிப் பூசை செய்ததாகவும் முன்னோர்கள் கூறியுள்ளனர். தற்போது கட்டாடியாராக இருப்பவர் பொன்னாச்சி குடியைச் சேர்ந்த க. இளையதம்பியாராகும். உதவிக் கட்டாடியாராக இருப்பவர் த. மகேஸ்வரன் என்பவர். இனிச் சடங்கு முறைகளைப் பற்றிக் கவனிப்போம். திருக்கதவு திறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே ஊரவர்கள் தங்கள் தங்கள் வீடு வாசல்களையும் வீதி, ஒழுங்கைகளையும் சுத்தம் செய்து வைப்பார்கள். கதவு திறந்த பின், மாவிடித்தல், நெல்குற்றுதல், அம்மியில் தட்டுதல் அரைத்தல், திருமணங்கள் போன்ற சுபகாரியங்கள், வெளியூர்ப் பயணங்கள் இவற்றை நிறுத்தி விடுவார்கள். திருக்கதவு திறத்தலோடு எட்டு நாட்கள் இங்கு விழா நடைபெறும். கலியாணச் சடங்கு, பச்சை கட்டிச் சடங்கு, கப்பல்காரர் சடங்கு திருக்குளிர்ச்சி என்பன சிறப்பாக நடைபெறும்.
கலியாணச் சடங்கு கோவலருக்கும் கண்ணகிக்கும் கலியாணம் நடைபெறுவதாக அமையும். அன்று பிற்பகல் பூசைப் பொருட்களோடு, கட்டாடியார், தெய்வக்காரர்கள், உதவியாளர்கள் பொதுமக்கள் ஊர்வலமாகச் சென்று, புனிதமான இடத்தில் நிற்கும் பூவரசு மரத்தின் கீழ் மடை வைத்து பூசை செய்து, அதிலுள்ள கம்பு கீழே விழாமல் வெட்டி வீழ்த்தி பட்டை உரித்து திருநீறு மஞ்சள் குங்குமம் பூசி வெண்ணிற ஆடையால் மூடி ஊர்வலமாகக் கோயிலுக்குக் கொண்டு வருவார்கள். அதைக் காலாக நாட்டி அலங்கரித்து கலியாணச் சடங்கை நடத்துவர். அன்றிரவு ஆரைப்பற்றைத் தெருப்பாகையினர் கூறை தாலிகளை மேளதாளத்தோடு ஊர்வலமாகக் கொண்டுவருவர். ஏராளமான பொதுமக்கள் பலகாரப் பெட்டிகள் கொண்டுவருவர். கலியாணச் சடங்கு முடிந்ததும் கலியாணப் பலகாரங்களையும், பானக்கத்தையும் பெற்றுக்கொண்டு அடியார்கள் வீடு திரும்புவர். பொதுமக்களின் சடங்குகளல்லாமல் சில தனிப்பட்டவர்களின் சடங்குகளும் உண்டு.
கலியாணச் சடங்குக்கு முதல் நாள் கதிரேசர் அவர்களின் சடங்காகும். கலியாணச் சடங்குக்குப் பின்னுள்ள இரு சடங்குகளில் கப்பல்காரர் சடங்கை ஆரைப்பற்றைத் தெருவிலுள்ள ஒரு குழுவினரும், பச்சை கட்டிச் சடங்கை நடுத் தெருவிலுள்ள ஒரு குழுவினரும் தங்களது பணச் செலவிலேயே செய்து கொண்டு வருகின்றனர். இச்சடங்குகளுக்கு இப்பெயர்கள் வந்ததற்கான காரணங்கள் தெரியவில்லை.
கண்ணகி கால் சிலம்புக்கு நாகமணி கொண்டு வருவதற்காக கப்பலேறிச் சென்று வெடியரசனை தோற்கடித்து நாகராசனிடம் நாகமணி பெற்று வந்த மீகாமன் பரம்பரையினரை ஞாபகப்படுத்தி கப்பல்காரர் சடங்கு என்றும், கண்ணகி மதுரை வந்து சேர்ந்த நாள் தொடக்கம், சேர நாடு போகும் வரையும் அவர்களின் உணவுக்காக பச்சை அரிசியும் பச்சைக் காய்கறிகளும் (பச்சைப்படி) கொடுத்து காப்பாற்றியதை ஞாபகப்படுத்தி பச்சை கட்டிச் சடங்கு என்றும் பெயர்கள் வந்ததோ என எண்ண இடமுண்டு. இச்சடங்குகளில் கப்பல்காரர் சடங்கை ஆரைப்பற்றைத் தெருவிலுள்ள ஒரு குழுவினரும், பச்சை கட்டிச் சடங்கை நடுத்தெருவிலுள்ள ஒரு குழுவினரும் தங்கள் சொந்தச் செலவில் செய்து கொண்டு வருகின்றனர்.
இச்சடங்குகளில் சிறப்பு நிகழ்வு என்னவென்றால் ஏராளமான தெய்வக்காரர்கள் உருக்கொண்டு ஆடி, சில பக்தர்களுக்கு அவர்களின் துன்பங்களையும் அதற்குச் செய்ய வேண்டிய பரிகாரங்களையும் சொல்வர். இதைக் கட்டுச் சொல்லுதல் என்று குறிப்பிடுவர். தெய்வங்கள் ஆடி தங்கள் தங்களுக்கு விருப்பமான பலிகளைப் பெற்றுக் கொண்டு இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவர். பலிகளில், மடைப் பலி, அக்கினிப் பலி, முக்கண்ணன் பலி, சாட்டைப் பலி, இரத்தப் பலி எனப் பலவகை உண்டு. மடைப் பலி என்பது ஒரு தாம்பாளத்தில் பாக்கு வெற்றிலை பழம் மேலே கற்பூரம் கொளுத்தி உதவிக் கட்டாடிமார் மந்திரங்களை உச்சரித்ததும் தெய்வம் ஓடிவந்து அதன் மீது முகத்தை வைத்து சாந்தியாகி விடுவது. அக்கினிப் பலி என்பது எரிகின்ற விளக்குத்திரி அல்லது கற்பூரத்தை கொளுத்தி வாய்க்குள் வைத்து சாந்தியாவது. முக்கண்ணன் (தேங்காய்) பலி என்பது பூமியிலே யந்திரம் கீறி அதற்குள்ளே அட்சரங்கள் எழுதி அதன் மேலே தேங்காயை வைத்து தேங்காய் மீது கற்பூரம் கொளுத்தி மந்திரம் செபித்து தேங்காயை இரு பாதிகளாக வெட்டியதும் அதில் விழுந்து சாந்தியடைவது. சாட்டைப் பலி என்பது வெடிப்பஞ்சினால் திரிக்கப்பட்ட கயிற்றினால் (சாட்டைக் கயிறு) இரு வாலிபர்கள் தெய்வக்காரர்களின் மணிக்கட்டுகளிலும் கரண்டிக் கால்களிலும், வேகமாக அடிப்பது. சில தெய்வங்கள் ஐம்பதுக்கும் மேற்பட்ட அடிகளைப் பெற்றுக் கொண்டு சாந்தியடைவர். நர பலி என்பது பூசாரியார் தன் கையிலே கத்தியால் கீறியதும் அதிலிருந்து வரும் இரத்தத்தைக் குடித்து சாந்தியடைவர். அடுத்த நாள் நடைபெறுவதுதான் திருக்குளிர்த்தி விழா, திருவிழாக்களில் கடைசிநாள் நடைபெறும் தீர்த்தத் திருவிழா போல, தெய்வம் அருள் பாலிக்கும் விழாவாகும்.
இந்த விழாவை சில ஊர்களில் பூரணையை அடுத்து வரும் திங்கட்கிழமையிலும், சில ஊர் மக்கள் பூரணைத் திதியிலும் கொண்டாடுவர். வைகாசித் திங்கள் வருவோம் என்று கூறியதால், சிலர் திங்கள் வாரத்தில் நடத்துகிறார்கள். வைகாசி மாதத்தில் பல திங்கள் வாரங்கள் வருவதால் எந்த வாரத்தைத் தெரிவு செய்வது? எனவே இது பொருத்தமற்றதாகும். ஆரையம்பதி கண்ணகி அம்மன் குளிர்த்தி விழா பூரணைத் திதியிலேயே நடைபெறுவது வழக்கம். இந்நாளில் பகல் சடங்கு நடைபெறுவதில்லை. இதற்கு அயல் ஊர்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். அன்று முன்னிரவில் பெண்கள் நெல் குற்றி அரிசி எடுத்து விநாயகப் பெருமானுக்குப் பொங்கிப் படைப்பார்கள். விசேடமாக இளநீர், கரும்பு, தேன், சர்க்கரை, பல விதமான பழ வகைகள் சேர்த்து பானக்கம் தயாரிப்பார்கள். இதுவே அன்றைய விசேட பிரசாதமாகும். இதைப் பெரிய அண்டாப் பானையிலிட்டு உரல் மேல் வைத்து சீலையால் மூடி மேலே வேப்பிலை வைத்து முன்மண்டபத்தில் வைப்பார்கள். அம்மன் பூசை முடிந்து கட்டாடியார் அம்மனைப் போல சேலை அணிந்து முக்காடிட்டு வெளியே வந்து பானக்கச் சட்டிக்குப் பக்கத்தில் வந்து நின்றதும். மிகப் பிரசித்து பெற்ற குளிர்ச்சிப் பாடல்களை இருவர் மாறிமாறிப் படிப்பார்கள். இடையிடையே அம்பாள் வேப்பிலையை குளிர்ச்சிச் சட்டிக்குள் தோய்த்து பொது மக்களுக்குப் படும்படியாகத் தெளிப்பார். இத்துளிகள் தங்கள் மீது படுவதை அம்மன் அருள் கிடைத்ததாகவே எண்ணி மகிழ்வார்கள். பின்னர் அம்மன் கோயிலுக்குள்ளே சென்று பூசையை முடித்ததும் விழா நிறைவு பெறும். பின்னர் பக்தர்கள் அனைவரும் தீர்த்தத்தைப் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியோடு வீடு செல்வர்.
அடுத்த நாள் அம்மனின் புனிதச் சின்னங்கள் கண்ணகி கோயிலிருந்து கந்தசுவாமி கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படும். இப்புனிதச் சின்னங்களை கொண்டு வரும் போதும், கொண்டு போகும் போதும், நூற்றுக் கணக்கான பெண்கள் கற்பூரச் சட்டி ஏந்தி இரு மருங்கிலும் நின்று வரவேற்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்''
No comments:
Post a Comment