Friday, 12 August 2016

திருகோணமலையில் பத்தினி கலாசார மரபு





திருகோணமலையில் பத்தினி கலாசார மரபு

ஈழத்தில் கண்ணகி   மட்டக் களப்பு யாழ்ப்பாணம் வன்னி பிரதேசங்களில் கண்ணகி கலாசார மரபாக  இருக்க அதன் நீட்சியாக திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பத்தினி கலாசார மரபாக முக்கியத்துவம் பெறுகிறது.
1. கடற்கரைச்சேனை சம்புக்களி பத்தினி அம்மன்

2.நீலாப்பளை பத்தினி அம்மன்
3.தோணாவடிசம்பூர் பத்தினி அம்மன்
4.மூதூர் பத்தினி அம்மன்
5.பாலம்பட்டாறு பத்தினி அம்மன்
6.நிலாவெளி கோபாலபுரம் பத்தினி அம்மன்
7.கந்தளாய் குளக்கட்டு பத்தினி அம்மன்
8.தம்பலகாமம் கப்பல்துறை பத்தினி அம்மன்
9.தம்பலகாமம் சேன வெளி பத்தினி அம்மன்
10.திருகோணமலை பத்தாம் குறிச்சி பத்தினி அம்மன்
11.லிங்க நகர் (மட்கோ)பத்தினி அம்மன்
12.உவர் மலை கண்ணகி அம்மன்
13.கும்புறு பிட்டி கண்ணகி அம்மன்
14.கிண்ணியா பத்தினி அம்மன்
15.ஆலங்கேணி கண்ணகை அம்மன்
16.ஈச்சந்தீவு கண்ணகை அம்மன்

மட்டக்களப்பில் கண்ணகி அம்மன் சடங்குகள் வருசம் தோறும் கதவு திறக்கப் பட்டு ஏழு நாள் சடங்காக நடை பேறுகிறது.கடசிநாள் குளிர்த்தி சடங்குடன் முடிவடைகிறது.குளிர்த்தில் இங்கு முக்கியப் படுகிறது.காரைதீவு கண்ணகி,செட்டிபாளையம் கண்ணகி முதலான சில கோவில்கள் சமஸ்கிருத மயமாக்கலுக்கு உட்பட்டிருந்தாலும் ,இரண்டு மரபுகளையும் பின்பற்றுகின்றன.
திருகோணமலை பத்தினி வேள்வி இரண்டு நாட்கள் உடையதாய் முதல் நாள் மடைப் பெட்டி எடுத்தலும் அடுத்த நாள் பொங்கலுமாய் முடிவடைகிறது.மட்டக் களப்பில் கோராவெளியில் இரண்டு நாள் சடங்காகவே நடை பெறுகிறது.
உவர்மலை கண்ணகியும் ,கும்புறு பிட்டி கண்ணகியும் சமஸ்கிருத மயமாக்கலுக்கு உட்பட்ட பூசை நடைமுறைகளை கொண்டுள்ளது.
திருகோணமலையின் கிராமங்களில் பத்தினி காவல் தெய்வமாக போற்றப் படுகிறாள்.
சேனையூர் ,கட்டைபறிச்சான் ,தம்பலகாமம் பகுதிகளில் வயல் நிலங்களை அண்டி குளக்கட்டு பத்தினி என போற்றப் படுகிறாள்.குளக்கட்டு பத்தினிக்கான வழிபாடும் வித்தியாசமானது.பச்சப்பழம் ,பச்சப் பாக்கு ,பச்ச வெத்திலை என சூழலியலை முக்கியப் படுத்தும் சடங்காக உள்ளது.

பத்தினி வழிபாடு பற்றிய ஒரு ஆய்வுகட்டுரையில்
கலாநிதி அனுசூயா சேனாதிராஜா

பின் வருமாறு குறிப்பிடுவார்

''சேரன் செங்குட்டுவன் கி.பி. 123 – 135 ஆண்டளவில் மண்ணகத்திலிருந்து விண்ணக மாந்தர்க்கு விருந்தாகச் சோதியுட் கலந்த பத்தினி அம்மனிற்கு திருச்செங்கோட்டையில் கோட்டம் அமைத்துப் பிரதிஸ்டை செய்யும்போது இலங்கை வேந்தன் கஜபாகுவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. செங்குட்டுவன் பத்தினிக் கடவுளுக்கு நித்திய பூசை செய்யும்படி கட்டளையிட்டான். கோயிலை மும்முறை வலம் வந்து வணங்கி நின்றான். அப்போது அங்கு வந்த கஜவாகு மன்னன் அப்பத்தினியை நோக்கி இச்செங்குட்டுவனைப் போல் எங்கள் நாட்டில் நாங்கள் செய்யும் பூசையில் நீ எழுந்தருளி அருள்செய்ய வேண்டும் என்று பிரார்த்தித்தான். அப்போது நீ விரும்பியபடியே வரம் தந்தேன் என்று ஓர் அசரீரி ஒலி உண்டாயிற்று. கஜவாகு மன்னன் வேண்டிக் கொண்டதற்கு இணங்க சந்தண மரத்தால் செய்த கண்ணகி உருவமும் ஒரு சிலம்பும் சந்தண மரப்பலகையால் செய்து பேளையில் வைத்த கஜவாகு மன்னனிற்குச் செங்குட்டுவன் கொடுத்தான். அதைப் பாண்டிய அரசன் வெற்றிவேற் செழியன் யானைமேல் சந்தண மரப்பலகையால் செய்த பெட்டியையும் அரசனையும் ஏற்றி வந்து வேதாரணியத்தில் விட்டான். அங்கிருந்து கப்பலில் ஏறி, காரைநகரிற்கும் கீரிமலைக்கும் இடையிலுள்ள திருவடி நிலையில் இறங்கினார்கள். யானைப் பவனிக்கென்று அலங்கரிக்கப்பட்ட யானைகள் அங்கிருந்தன. திருவடி நிலையிலிருந்து ஊர்வலம் ஆரம்பமாகி மாகியப்பிட்டி வழியாய் அங்கணாமைக் கடவைக்கு வந்து ஆராதனை நடத்தப்பட்டு வேலம்பறை என்றுமிடத்திற்கு வைகாசிப் பூரணையன்று வந்து சேர்ந்தது. அங்கிருந்து கரம்பகம் கோவிற்குளம் நாகர்கோவில் வன்னிப்புட்டுக்குளம் விழாங்குளம் முள்ளியவளை வற்றாப்பளை சாம்பல்தீவு திருகோணமலை தம்பலகாமம் பாலம்போட்டாறு நீலாப்பளை வரையும் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து தாவளமாட்டின் மூலமாக (மாட்டுவண்டி) கோராவெளி கொக்கட்டிமூலை தாண்டவன்வெளி வந்தாறுமூலை ஈச்சந்தீவு கொக்கட்டிச்சோலை முதலைக்குடா மகிழடித்தீவு மண்முனை புகுக்குடியிருப்பு செட்டிபாளையும் எருவில் மகிழூர் கல்லாறு கல்முனை ஊர்முனை காரைதீவு பட்டிமேடு தம்பிலுவில் பாணமை கதிர்காமம் கண்டிவரை கொண்டு செல்லப்பட்டது. கண்டியில் ஓர் கோவில் கட்டி சந்தனப் பலகையால் செய்த பெட்டியும் அம்மனும் சேமிக்கப்பட்டது. கண்டி தலதா மாளிகையில் உள்ள பத்தினிக் கோவில் சந்தன மரத்தால் செய்யப்பட்ட அம்மனும் சந்தனப் பெட்டியும் வைக்கப்பட்டுள்ளது. ''

சம்புக்களி பத்தினி அம்மன் தொன்மை மிகு வரலாற்றினூடு இன்று வரை தனித்துவமான பத்தினி கலாசார மரபைப் பேணி வருகிறது.
இரண்டுமரபுகளின் கலப்பை நாம் இங்கு காணலாம் மட்டக்களப்பில் காணப்படும் கண்ணகி குளிர்த்தியோடு இணைந்த பத்ததி முறையிலான சடங்கு முறையும்,வற்றாப்பளை மரபான உப்பு நீரில் விளக்கெரிக்கும் மரபும் இங்கு முக்கியப் படுகிறது.இங்கு குளிர்த்தி பாடுதல் சிறப்பான நிகழ்வாக நடை பெறும்.

நாற்பது வருடங்களுக்கு முன்பு இங்கு ஆடு ,கோழி பலிகொடுக்கும் மரபு காணப் பட்டது குறிப்பிடத் தக்கதாகும்.
நான் முன்னர் பதிவிட்டிருந்தது தற்செயலாக அழிந்து விட்டதால் இந்த பதிவை புதிதாய் .பதிவு செய்துள்ளேன்.
தகவல்கள் தந்த அனைவருக்கும் நன்றி.

No comments:

Post a Comment