Saturday, 3 September 2016

சீர் பூத்த தென் வெருகல்





வான் பொய்ப்பினும் தான் பொய்யா வெருகல் ஆறு நிரம்பி வழிந்து  தான் செல்லும் இடமெல்லாம் செல்வத்தை அள்ளி சொரியும் அழகு.தான் பாயுமிடமெங்கும் அழகையும் அழைத்துச் செல்லும்.வற்றாத ஜீவ நதி மாவலியின் கிளையாய் கழிமுகம் காணும் கங்கை மகள்.
எங்கு திரும்பினாலும் பசுமையாய் வயல்களும்  இணைந்திருக்கும் பசுமைப் பயிர்களும் கோயிலும் தீர்த்தமும் ஒன்றாயிருக்கும் குடிசார் அழகு.

கங்கையோரத்தில் கம்பீரமாய் நிமிர்ந்து நிக்கும் கோபுர கலசம் கலசத்தின் ஒளி தெறித்து பொன்னிறம் பரப்பும் நதியும் நாணலும்.மருத மரங்களிடை சூரியன் பட்டு தெறித்து வண்ணம் காட்டும் வடிவு இவையெல்லாம் வெருகலுக்கேயுரிய அழகு.

குன்றாய் நீண்டு செல்லும் மலைத் தொடர் வழியே நம் மூதாதையர்களின் சுவடுகளை சுமந்து கொண்டு அமைதியாய் அழகாய் தொன்மை வரலாற்று படிவுகளின் வழி கல்வெட்டுக்களாய்,கட்டிட அழிவுகளாய் எல்லாம் நம் இருப்பை சொல்லி நிற்கும் கம்பீரம்.

கதிர்காம யாத்திரைக் காலங்களிலும் திருவிழாக் காலங்களிலும் மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழியும் வெருகல் சித்திரவேலாயுதர் ஆலயம் இன்று என்றுமில்லாதவாறு இரு முனைகளிலிருந்தும் ஆட்கள் சாரி சாரியாக குவியத் தொடங்கினர்.ஏதோ முக்கிய நிகழ்வுக்கான ஆயத்தங்கள் நடை பெற்றுக் கொண்டிருந்தன.ஆலையத்தை சூழ உள்ள பகுதிகள் எங்கும் மகர தோரணங்கள் தொங்க விடப்பட்டு அலங்கரிக்கப் பட்டு விழாக் கோலம் பூண்டிருந்தது வெருகல்.

அரசன் வரவிற்காய் காத்திருக்கும் முடிசூட்டு விழாப் போல கொட்டியாரத்தின் அரச பிரதானிகள்,கோயில் கங்காணங்கள் புலவர்கள் அறிஞர்கள் என பெரும் அவையினரின் வரவால் அள்ளுண்டு வந்த கலை கோயிலாய் காட்சியளித்தது வெருகல்.

ஏழுர் அடப்பன் மார்களும் தேசத்து மூத்தவர்களும்  வெருகலில் அலங்கரிக்கப் பட்டிருந்த சபா மண்டபத்தில் கூடியிருந்தனர்.கலைஞர்கள் கூட்டம் ,தம்பலகாமத்து ஆடல் மகளிர்,கொட்டியார தேசத்து கூத்தர்கள் என கலைக் கூடமாய் மாறியிருந்தது வெருகல்.
கண்டி விக்கிரமராசசிங்கனின் அரச பிரதானிகளும் அங்கு வருகை தந்திருந்தனர்.
எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தால் போல் கொட்டியாரத்து வன்னிபம் இருமரபுய்ய வந்த இளஞ்சிங்கன் தன் படை பரிவாரங்களுடன் கைகளில் மாலையுடன் காத்திருக்க

அழகிய கொம்பன் யானைமேல் புலவர் வீரக்கோன் முதலியார் கையில் பெரும் ஏடு ஏந்தி மக்கள் புடை சூழ வாழ்த்துக்களுடன் வரவேற்று அழைத்து வர இளஞ்சிங்கன் புலவருக்கு மாலை அணிவித்து அரங்கேற்ற மேடைக்கு அழைத்து சென்று இருக்கையிட்டான்.

தம்பலகாமத்து புலவர் வீரக்கோன் முதலியார் தேசத்தார் அவையில் வெருகல் சித்திரவேலாயுதர் காதல் எனும் குறும் காவியத்தை படிக்க தொடங்கினார்.எல்லோர் முகங்களிலும் மகிழ்ச்சி .

"சீர்பூத்த தென்வெருகற் சித்திரவே லாயுதர்மேல்
ஏர்பூத்த செந்தமிழா லின்பரசக் காதல்சொல்ல 1

வார்பூத்த கும்பதன வல்லவைதன் பாகமுறுங்
கார்பூத்த மேனிக்க ணபதிதாள் காப்பாமே. 2

தென்னிலங்கை ராவணணைச் செய்யவிர லாலூன்றிப்
பின்னவன்ற னின்னிசையைப் பெட்புடனே கேட்டுவந்து

வாளுடன்வா ணாள்கொடுத்த மாகோணை நாயகர்தந்
தாளிணையெந் நாளுந்த மியேனுக் குத்துணையே. 4"

நூல் அரங்கேற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது ஒவ்வரு கண்ணிக்கும் இளஞ்சிங்கனும் அவையோரும் கரகோசித்து மகிழ்ந்தனர்.

"செயய வெருகனகர்ச் சித்திரவே லாயுதர்மேல்
வைய மகிழு மதுரமொழிக் காதல்சொல்ல 5

மையனைய பூங்குழலாண் மாதுபிடியன்னநடை
ஐயைமலர்ப் பாதமதை யன்பாகப் போற்றிசெய்வாம். 6"

என தொடர புலவரின் கவியாற்றலை மனதுக்குள் வியந்து பலரும் பாராட்டிக் கொண்டிருந்தனர். கடவுள் காப்பிலிருந்து வாழ்த்தாய் மாறி இப்போ காதலாய் மலர்ந்த பகுதிகள் அரங்கேறிக் கொண்டிருந்தன.

"வேலரிடம் தூதாய் விரைந்தேதி யென்றுயரைச்
சாலமுடன் சொல்லுஞ் சமயம€தைக் கூறுவன்கேள் 368

என்போலும் பெண்களிசைந்தனுப்புந் தூதுவர்கள்
அன்புடனே பேசு மமையமதிற் சொல்லாதை. 369

இந்திரனுஞ் சந்திரனு மெண்ணிரிய விண்ணவரும்
வந்துதொழும் போதெனது மையறனைச் சொல்லாதை.

வீரவா கோடுமற்றும் வீரர்மற்றும் வீரர்தொழு தேத்துகின்ற
நேரமதி லென்மயலை நீயெடுத்துச் சொல்லாதை 371"

சித்திரவேலாயுதர் மேலான காதலை புலவர் தன் மொழியில் அழகாய் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்

"மெத்தபுகர் வாய்ந்த வெருகற்ப தியுறையுஞ்
சித்திரவே லாயுதரின் சீரடியி லன்புகொண்டு 372

மானமு டன்மிக்க வயனிலமுந் தோப்புகளும்
மானிய மாயீந்த மகராச ராசேந்திரன் 373

மாணிக்கம் வைத்திழைத்த வன்னப்ப தக்கமுடன்
பூணணிக ளீந்து புகழ்படைத்த பூபாலன் 374

கண்டிநக ராளுங் கனகமுடி ராசசிங்கன்
தெண்டனிடும் போதெனது சேதியைநீ சொல்லாதை. 375

சித்திரவே லாயுதவேள் சேர்ந்துமகிழ் வாயுறையுஞ்
சித்திரஞ்சே ராலயமுஞ் செம்பொற் சினகரமும் 376

திட்டமுடன் முன்னாளிற் செய்தநல்ல நாகனெனுஞ்
செட்டிவம்மி சத்திலுள்ள செய்யபிர தானிகள்போய் 377

பன்னரிய பாதம்ப ணிந்துதொழு சேத்துகையில்
என்னடைய சங்கதியை யெள்ளவுஞ் சொல்லாதை. 378"

வெருகலில் பணியும் கொடையும் அளித்தோரை புகழ்ந்தும் பாக்கள் கண்ணிகள் தொடர்ந்தன.

"துன்னு மிருமரபுந் துய்யவிளஞ் சிங்கமெனும்
வன்னிமைபொற் பாதம் வணங்கையினீ சொல்லாதை 379

சாற்று நிலைமை தலைமையுடன மற்றுமுளார்
போற்றுகையி லென்மயலைப் பூங்கிளியே சொல்லாதை 380

வித்வசனர் பாமாலை மெல்லடியிற் சூட்டுகையிற்
சத்தியமா யென்மயலைச் சற்றுநீ சொல்லாதை. 381

எண்டிசையிற் பாலகரு மிப்புவியி லுள்ளவருந்
தெண்டனிடும் வேளையிலென் சேதிதனைச் சொல்லாதை. 382

வன்னிமைதே சத்தார்ம காநாடு தான்கூடி
மின்னுமெழின் மண்டபத்தில் வீற்றிரக்கும் வேளையிலே 383

கோதில்புகழ் சேர்வீரக் கோன்முதலி தானியற்றுங்
காதலரங் கேற்றுகையிற் காதறனைச் சொல்லாதை"

புலவர் வீரக்கோன் முதலியார் தன் கண்ணிகளால் சித்திரவேலாயுதர் காதலை பாடி முடிக்க கரகோசம் வானை முட்டியது.தென்னன்மரபடி,திருகோணமலை,தம்பலகாமம்,கொட்டியாரம் என எல்லா பிரதேசத்தினரும் புலவரை வாழ்த்தினர்.மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தார் புலவர்.

(படங்கள் நண்பர்,உறவினர் திருமலை சசிகுமார் நன்றிகள்)

Friday, 2 September 2016

ஒரு சேமணையனின் கதை

ஒரு சேமணையனின் கதை

எங்கள் சேனையூரில் சில சிறப்பான சொல் வழக்குகள் உள்ளன அதில் இதுவும் ஒன்று.சேமணையன் என்றால் ஒன்றும் தெரியாத முட்டாள் என்று அர்த்தப்படும்.இனி கதைக்கு வருவோம்.

ஒரு ஊர்ல ஒரு சரியான சேமணையன் ஒருவன் இருந்தானாம்.அவன் வேலைக்கு போறல்லயாம் தாய்க்காரி எங்கயாவது பிச்சி புடுங்கி ஆக்கிக் கொடுக்க சாப்பிட்டு விட்டு வீட்டு விறாந்தையில படுத்து தூங்குறதுதான் அவன் வேலையாம்.ஒரு செம்பு தண்ணி கூட தூக்க மாட்டானாம் அதுவும் அம்மாதான் எடுத்து கொடுக்கணுமாம்.

இப்படி இருந்து வாற காலத்தில தாய்க்காரிக்கு கோபம் வந்திச்சாம் படுத்துகிடந்தவன தட்டி எழுப்பி டேய் மகனே எத்தனை நாளைக்குத்தான் இப்படி இருக்கப் போறா எங்கயாவது வேலைக்கு போய் உழைச்சு வாடா என்ற கண்ணுக்கு பிறகு நீ சரியா கஸ்ரப் படப் போறா.என்று சொன்னாவாம்.அவன் கேக்கிற மாதிரி இல்லையாம்.

அவவும் விடாம ஒவ்வொரு நாளும் நச்சரித்துக் கொண்டே இருந்தாவாம்.அவட அரிகண்டம் தாங்க ஏலாம ஒரு நாள் விடிய சொன்னானாம் எனக்கு சோறு கட்டித்தா நான் வேல தேடப் போறன் ,என்று சொல்ல தாயும் நல்ல பச்சரிசியும் பச்சடியும் வைச்சு சோறு கட்டிக் கொடுக்க மம்பட்டி ஒன்ற எடுத்துக் கொண்டு ஒவ்வொரு இடமா வேல கேட்டுப் போனானாம் ஒருவரும் வேல கொடுக்கலையாம் இந்த சேமணையனுக்கு ஆர் வேல கொடுக்கிறது என்று சொல்லிற்று போய்ற்றாங்களாம்.

சரியான வெய்யில் கொழுத்தி எறியுதாம் ஊர தாண்டி போய்ற்றானாம்.நல்ல பசியும் வந்திற்றாம்  ஒரு மரத்துக்கு கீழ இருந்து தாய் கட்டிக் கொடுத்த சோத்து முடிச்ச அவிட்டு  நல்லா சாப்பிட்டானாம் நித்திர வந்திற்றாம் அபபடியே படுத்திற்றானாம்.படுத்திற்று எழும்பி பாத்தானாம் முன்னால ஒரு புத்தாம் புத்துக்கு மேல ஒரு கிழட்டு ஓணான் இருந்திச்சாம்.அது வெய்யிலுக்கு சீக்கா அடிச்சுதாம் ஓணானுக்கு வெய்யிலென்றால் நல்ல விருப்பம் அப்ப அது சந்தோசத்தில சீக்கா வலிக்கும் .அது இவனுக்கு கூப்பிடுற மாதிரி இருக்க ஓணானிட்ட எனக்கு வேல தருவியா என கேட்டானாம் அதுவும் ஓம் என்று தலையாட்டிச்சாம் ஓணான் எப்பவும் தலைய ஆட்டிக் கொண்டிருப்பது இவனுக்கு தெரியாது.திருப்பிக் கேட்டானாம் எங்க வேல இங்கயா என்றானாம் அதுக்கும் தலையாட்டிச்சாம்.இவனும் ஓ என்று தலயாட்டி இந்த இடத்த துப்பரவாக்கட்டா என்றானாம்  ஓணான் திரும்பியும் தலையாட்டிச்சாம்.சரி இண்டைக்கு பொழுது பட்டு போய்ற்று நாளைக்கு வாறன் எண்டு சொல்லிற்று வீட்ட வந்தானாம்.

வீட்ட வந்தவன் அம்மாட்ட எனக்கு ஒராள் வேல தந்திருக்கார் நான் நாளைக்கு நேரத்தோட வேலைக்கு போகணும் .விடிய சோறு கட்டித் தந்திரணும் என்று சொல்ல மனிசியும் சரியா சந்தோசப் பட்டு அடுத்த நாள் நல்ல பெரிய சோத்து முடிச்சா கட்டிக் கொடுத்தாவாம்.அவனும் விடிஞ்சதும் அந்த இடத்துக்கு போய் வெட்டி வெழியாக்கினானாம்.அந்த வழியால போன ஆக்களெல்லாம் சேமணையனுக்கு விசர் புடிச்சிற்று போல என சொல்லிப் போனாங்களாம்.

அவனும் மாடு மாதிரி வேல செய்தானாம்.புத்துக்குள்ள இருந்து ஓணான் வந்திச்சாம் இவன் கேட்டானாம் சம்பளம் எப்ப இண்டைக்கு இல்லையா பிறகா என்ற ஓணான் தலையாட்டிச்சாம் இவனும் ஓ எண்டு சொல்லிற்று போய்ற்றானாம்.இப்படி ஒரு மாதம் போய்ற்றாம் .தாய்க்காரி என்னடா சம்பளம் கிடைக்கலையா எண்டு கேப்பாவாம் இவனும் பிறகு  பிறகு எண்டு சொல்லித் திரிய ஆக்களும் இவன் பகிடி பண்ண  தொடங்கினாங்களாம் என்னடா உனக்கு எப்ப சம்பளம் இவன் சொல்வானாம் முதலாளி பிறகு தாறன் எண்டு சொன்னவர். எப்படா  நீயும் உண்ட வேலையும் சரியான முட்டாள் உனக்கு சம்பளமும் கிடைக்காது ஒண்ணும் கிடைக்காது எண்டு ஆக்கள் எல்லாம்  சொல்ல இவனுக்கு கோபம் வந்திச்சாம்.

இதுக்கிடையில அந்த இடம் முழுவதையும் இவன் நல்லா துப்பரவாக்கியிருந்தானாம் அந்த இடம் பயிர் செய்யக் கூடிய அளவுக்கு சுத்தமா இருந்திச்சாம்.

கோபம் வந்த இவன் அந்த இடத்துக்கு போனானாம். அங்க ஓணான் புத்துக்கு மேல இருக்கேராம் எப்ப சம்பளம் என கேட்டானாம் ஓணான் மேல் கீழா தலைய ஆட்டிச்சாம் .ஓ இந்த புத்துக்குள்ளயா எண்டு கேட்டிற்று புத்த வெட்டத் தொடங்கினானாம்.வெட்டிக் கழைச்சு போன நேரத்தில நங் என்றொரு சத்தம் கேட்டிச்சாம் அங்க பாத்தா ஒரு பானைக்குள்ள அவ்வளவும் தங்க காசுகளாம்.அத தூக்கிற்று எனக்கு சம்பளம் கிடைச்சிற்று என்ற் சத்தம் போட்டுக்கொண்டு தாய்ற்ற போய் குடுத்தானாம்.
பிறகு?
தாயும் மகனும் சந்தோசமா வாழ்ந்தாங்களாம்


Sunday, 21 August 2016

என் கனவுகளின் கவிதை அவள்

என் செல்ல மகளின் 25வது பிறந்த நாள்.


என் கனவுகளின் கவிதை அவள்
உணர்வுகளின் ஊற்று அவள்-என்
உயிரோடு உயிராய் அவள்
நனவின் மீதியாய் நாள்தோறும்
என்னுள் கனன்று நிக்கும் நெருப்பாய் அவள்

சித்திரை பதினேழு
ஒரு வசந்தத்தின் வரவு  அவள்
இப்போதும் எப்போதும்
என்னுள் வசந்தமாய் அவள்

என் கனவுகளின் நாயகி
ஒரு காவியத்தின் தலைவி
ஓவியத்தின் உச்சாணி

ஒரு கவிதையாய்
ஒரு கதையாய்
ஒரு காவியமாய்
எப்போதும் அவள்

நினைவின் சுமை இதுதானோ?

இன்று என் வாழ்வில் மிக கடினமான நாள்..
.
20வருடங்கள்
உண்டு படுத்து
 ஒட்டி உறவாடி
 கனவுகளை சுமந்து
சந்தோசத்தை பகிர்ந்து
துக்கத்தை கொண்டாடி ...
மகளின் நினைவுகள்
அவள் காலடிகள்
சுவாசத்தின் சுகமானா வாசனை
எல்லாம் ...கேள்விகளாய் என் முன்
கோபம் சோகம் வெறுப்பு
எல்லாம் ஒன்றாய் என்னுள்

நினைவின் சுமை இதுதானோ?
இனி எப்போது எனக்கு வாய்க்கும்
எல்லாம் அன்னியம் தானோ
என
அலுத்து கொள்கிறது மனம்

எதுவுமே இன்று பிடிபடவில்லை
வழுக்கி வழுக்கி போகிறது
பற்றிக் கொள்ள எதுவுமில்லை
என்னிடம்
வாழ்தல் என்பது நமக்கானதா
அல்லது
மற்றவர்களுகானதா
எது யதார்த்தம்
என் மகள் கேட்ட கேள்விகள்
ஏன் வாழ்கிறோம்
எதற்கு வாழ்கிறோம்
எல்லாம் பெரும்
பூதமாய் என் முன்
ஓரிடத்த்தில் பிறந்தோம்
இன்னோரிடத்தில் வாழ்ந்தோம்
இப்போ
பிறிதோர் இடத்தில் வாழ்கிறோம்
இனி எவ்விடமோ
எல்லாம் ஏன்

என் மகள் நினைவாய்
எஞ்சியிருப்பவை எவை
எல்லாம் என்னுள்
ஒரு பெரும்
பனி மலையாய்

வாழ்வின் சந்தோச பொழுதுகள்
என் மகளில்
அவளோடு கழித்த
இரவு பகல்
அதிகாலை  எல்லாம்
எங்கு
கரைந்து போனதோ
அந்த நிலத்தோடு
இல்லை
எல்லாமே ஒரு கவிதையாய்
காவியமாய்
பல கோடி ஜென்மங்கள் கடந்தும்
என்னுள்

இராவணேசன் கூத்து மீளுருவாக்கத்தின் முதல் பிரதி

இராவணேசன்
 
கூத்து மீளுருவாக்கத்தின் முதல் பிரதி.பேரா.வித்தியானந்தன் காலத்திலிருந்து இன்றுவரை தொடரும் கலை வரலாறு.செல்லையா அண்ணவியார் மீளுருவாக்கத்தில் இணைந்த மிகப் பெரும் ஆளுமை.பேராசிரியர்.சி.மெளனகுரு கூத்து மீளுருவாக்கத்தின் வரலாறு.
   வரலாற்றை மறுதலித்து பலர் இன்று புதிய வரலாற்றை உருவாக்க முற்படுகின்றனர்.தாங்களுக்கு தாங்களே ஒளிவட்டங்களை உருவாக்கிக் கொள்கின்றனர்.
  கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத் துறை அதன் ஆரம்ப 1991காலத்திலிருந்து மரபுக் கலைகளின் மீளுருவாக்கத்தில் அக்கறையுடன் தன் செயல் பாடுகளைவிரிவாக்கிக் கொண்டது.

  1993ல் மாணவர்களை கன்னங்குடாவுக்கு அழைத்து சென்றமையும் அதன் தொடர்ச்சியாக பாலகப் போடி அண்ணாவியார்,நல்லதம்பி அண்ணவியார்  அகியோரை பல்கலைக்கழகம் அழைத்து மாணவர்களை செயல் வழிக் கல்வியில் பங்கு கொள் செயல் பாடுகளில் ஈடுப்ட்டமையும் மறக்க முடியாத நாட்கள்.

   கண்ணகி குளிர்த்தியின் மீளுருவாக்கம் மிகப் பெரும் சாதனை அதனை தொடர்து வருகின்ற கிழக்கிசை,ஈழத்தமிழர்களின் தனித்துவமான இசை நடன முறைமைகளை வெளிப்படுத்திய ''லயம் ''நிகழ்ச்சி

   ஆனைக்குட்டி அண்ணவியாரை பல்கலைக்கழகத்துக்கு அழைத்து மாணவர்களுடனான கலந்துரயாடல்கள் .அவர் வீட்டுக்கு மாணவர்களுடனான பயணம்.

   செல்லையா அண்ணாவியாருடனான மாணவர் சந்திப்புகள்.பல்கலைக் கழகத்த்னுள் பறை மேளக் கூத்தின் அறிமுகம் மாணவர்களும் விரிவுரையாளர்களும் பறை வாத்தியதில் பயிற்சி பெற்றமை

   நிரந்தரமான கூத்து களரியயை பல்கலைக்கழக வளவினுள் அமத்து புதிய பன்பாட்டுக்கு அடித் தளமிட்டமை.

  இன்னிய அணியின் உருவாக்கம்
  1995 தொடக்கம் 2005ம் ஆண்டுவரை தொடர்ச்சியாக நடைபெற்ற உலக நாடக தின விழாக்கள் அவற்றில் மரபுக் கலைகளின் மீளுருவாக்க செயல் பாடுகள்

  2000மாவது ஆண்டில்  இராவணேசனின் மீள் தயாரிப்பு ,இன்று மீளுருவாக்கம் பற்றி பேசுகின்ற பலரும் கூத்து பயிற்சி பெற்ற களம் இதுவே.

 பேராசிரியர் மெளனகுரு தலைமையில் எத்தனை சாதனைகள்.

இவை ஒவ்வொன்றும் தனித்தனியே விரிவாக எழுதப் பட வேண்டியவைகள்
அப்புச்சி

பல கோடி தடவை உச்சரித்தாலும்
மந்திரமாய் என்னுள் மயக்கும்
மயங்கும் மந்திரச் சொல்
என்ன நடந்தாலும் உற்சாகமிழந்த  அப்புச்சியயை
நான் கண்டதில்லை.
சோர்ந்திருந்த தருணங்களையும் நான் பார்த்ததில்லை.
என் வெற்றி    தோல்வி
துயரம்   எல்லா தருணங்களிலும்,
அப்புச்சி எனக்கு துணையாக எப்போதும்.
14 வருடங்கள் கடந்தாயிற்று
நினைவுகள் நீட்சியாய் என்னுள்
எப்போதும்.
சேனையூரில் உங்கள் சிம்மக் குரல்
இப்போதும் காற்றாய் அசைகிறது.
மீண்டு வரும் உங்கள் கனவுகள்
எண்ண எண்ண எழுத எழுத
தொடரும்......முடிவிலா
நீட்சி.....

திருகோணமலை மாவட்டத்தின் தனித்துவமான கும்ப விழா ஒரு பண்பாட்டியல் பார்வை






திருகோணமலை மாவட்டத்தின் தனித்துவமான கும்ப விழா ஒரு பண்பாட்டியல் பார்வை

ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஒவ்வொரு தனித்துவமான கலாசார அடையாளம் உண்டு. அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தின் தனித்துவமான அடையாளமாக விளங்குவது கும்ப விழாவாகும். நாம் இங்கு கும்பவிழா என அழைத்தாலும், ‘கும்பம்’ என்பதே இங்கு பொதுப்படையான வழக்கு.

திருகோனமலை மாவட்டத்தில் திருகோனமலை நகரத்திலும் நகரை அண்டிய பகுதிகளிலும் தம்பலகாமத்திலும் மூதூர் கிழக்கிலும் நிலாவெளியிலும் சாம்பல் தீவிலும் கும்ப விழா பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மூதூர் கிழக்கில் வரலாற்று பழமை மிக்கதும் தொன்ம மரபு சார்ந்தத கிராமங்களான சேனையூர்  கட்டைபறிச்சான்  மருத நகர் கல்லம்பார்  அம்மன் நகர் கடற்கரைச் சேனை  சாலையூர்  சந்தோச புரம் ஆகிய கிராமங்களில் கும்ப விழா மிகச் சிறப்பாக பரம்பரை பரம்பரையாக கொண்ட்டாடப் பட்டு வருகிறது.
தம்பல்;காமம் நீண்ட வரலாறு கொண்ட பண்டைத் தமிழ் கிராமம் கடல் நடுவே காணும் தீவுக் கூட்டங்கள் போல வயல்களின் நடுவே திட்டுத்திட்டாய் தெரியும் குடியிருப்புக்கள்  கோயில் குடியிருப்பு புதுக் குடியிருப்பு பட்டி மேடு கூட்டாம் புளி கள்ளிமேடு முன்மாரித்திடல் சிப்பித் திடல் வர்ண மேடு  நாயன்மார் திடல் குஞ்சடப்பன் திஅல் கரச்சிதிடல் நடுப்பிரப்பன் திடல் என தம்பலகாமத்தில் கும்ப விழா அதன் தனித்துவத்தை பறை சாற்றி நிற்கிறது.
திருகோணமலை கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்து வரலாற்றுப் பழமையும் நவீனத்துவத்தின் வாசல்களையும் ஒருங்கே கொண்ட அழகிய தமிழர் தலை நகர்.இங்கு கும்ப விழா ஒரு பெரும் பண்பாட்டின் அடையாளமாக கொண்ட்டாடப் பட்டு வருகிறது கும்பத்து மாலில் தொடங்கிய இம் மரபு இன்று பெரும் சமஸ்கிருத மயப்பட்ட ஆலயங்களுக்குள்ளும் தன் செல்வாக்கை வீச்சை வெளிப்படுத்தி நிற்கிறது.நகரை அண்டிய பகுதிகளான சல்லி புளியங்குளம் சல்லி லிங்க நகர்  நிலாவெளி ஆகிய இடங்களிலும் நகரத்தில் கும்பத்து மால் திருக்கடலூர் பேச்சியம்மன் கோயில் காளி கோயில் பத்தாம் நம்பர் கண்ணகியம்மன்  வட பத்திர காளி கோயில் வராகி கோயில் மடத்தடி மாரியம்மன்  மனையாவெளி மாரியம்மன் கந்தசாமி கோயிலடி  உவர்மலை காளி கோயில் என நீட்சி கண்டுள்ளது.


கும்பம், கும்பத்துமால், சாமியாட்டம், சாட்டையடி, மறிப்புக்கட்டு தீத்தச்சட்டி, மறிப்பை முறித்தல், கட்டை வெட்டுதல், உருவேற்றுதல், மந்திரம், மந்திர உச்சாடனம் மடை, சிலம்பு, பறை உடுக்கு, பூசாரி, இணைப்பூசாரி என இதனோடு இணைந்து வருகின்ற கலைச்சொற்களின் பட்டியல் நீளும்.

கும்பம் என்பதற்கு நேரடியான தமிழ் சொல் குடம் என்பதாகும். இதனால் தான் கும்பாபிசேகம் என்ற சமஸ்கிருத சொல்லுக்குப் பதிலாக குடமுழுக்கு என்ற சொல் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் கும்பம் ஒரு தமிழ் சொல்லாகவே இங்கு மாறி ஒரு பண்பாட்டின் அடையாளமாக வெளிப்பட்டு நிற்கிறது.



கும்பம் பற்றி பண்டிதர் வடிவேல் அவர்கள் சீக்கியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளதாக பல குறிப்புக்களில் எழுதியுள்ளனர். ஆனால் சீக்கியரது மத அனுஸ்டானங்களிலோ அவர்களது கலை நிகழ்வுகளிலோ இத்தகைய கலாசார அடையாளங்களை காணமுடியவில்லை. அவரக்ளது நடனமாக பங்காரா நடனமும் அதனோடு இணைந்து துள்ளல் இசையும் அமைந்திருக்கிறது. அத்துடன் அவரகளது சடங்கு முறைகளில் கும்பம் போன்ற எந்த ஆதாரத்தையும் காணமுடியவில்லை.

இலங்கையில் வேறு எங்கும் கும்ப விழா நடைமுறையில் இல்லையென்றே சொல்லலாம். மடடக்களப்பில் கும்பம் சொரிதல் நடைமுறையுள்ளது. மாரியம்மன் பேச்சியம்மன் சடங்குகள் முடிவடைய கடைசி நாளில் கடலில் அல்லது ஆற்றில் தகும்பம் சொரிதல் சடங்கு நடைபெறும், அதற்கும் திருகோணமலையில் நடக்கும் முறைமைகளுக்கும் நிறையவே வேறுபாடு காணப்படுகிறது.

திருகோணமலையில் நடைபெறும் கும்பவிழா நவராத்;திரியோடு தொடர்புபட மட்டக்களப்பு குமபம் சொரிதல் வைகாசி ஆனி மாதங்களில் நடைபெறும். மாரியம்மன் சடங்குகளோடு தொடர்புபட்டு நிற்கிறது.

கும்ப விழா எப்போது தொடங்கியது என்ற கேள்வி பலர் மனதிலும் எழுவது இயற்கையே. என்னிடமே பலர் கேட்கிருக்கிறார்கள். சடங்குகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் தொடக்கமென்ன? முடிவென்ன? என அடிமுடி தேடமுடியாது. சடங்குகளும் நம்பிக்கைகளும் மனித நாகரிகத்தின் தொடர்ச்சியான செயற்பாடுகளே. அவை காலங்காலமாக பல தலைமுறைகள் தாண்டி நீண்டு செல்லும் மரபுகள் திருகோணமலை கும்ப விழாவும் அத்தகயதே.

இத்தகைய கேள்விகளும் விடைகளும் இருந்தாலும் மூலத்தைத் தேடுதல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

கேரளாவில் நடைமுறையில் உள்ள சடங்குகளில் நாம் இந்த முறையிலான அமைப்பைக் காணலாம். தேயாட்டம் ஒட்டம் துள்ளல் பகவதி அம்மனுக்கு நடக்கும் சடங்குகள் நம் கும்ப சாயலைக் கொண்டுள்ளன.





ஒவ்வொரு பிரதேசமும் தமக்கான பண்பாட்டு மரபுகளை தமக்குள்ளாகவே உருவாக்குகின்றபோது வேறொரு பண்பாட்டிலிருந்து வருகின்றவைகளையும் உள்வாங்கிக்கொண்டு புதிய வடிவமாய் பரிணமிக்கின்றமையையும் உலக பண்பாட்டு வரலாறு உணர்த்தி நிற்கின்றது.

பொதுவாக, தென்னாசிய மரபுக் கலைகள் சடங்குகளின் அடிப்படையிலேயே உருவாகியிருக்கின்றன. கும்ப விழாவும், ஒரு சடங்காகவும் கலையாகவும் வெளிப்படுவதை நாம் காணலாம்.

தென்னாசிய மரபில் சடங்குகள் கலையோடு இணைந்தே பயில் நிலையில் உள்ளன. கும்பவிழா ஒன்பதுநாள் சடங்கும் அதனோடிணைந்து வருகின்ற பூசைகளும் சாமியாட்டமும் மனிதனின் நம்பிக்கையின் வழிவந்த கலையின் சங்கமிப்பே.

சடங்குகளினடிப்படையிலேயே கலைகளின் உருவாக்கம் என்பது உலக வரலாற்றில் நாம் கிரேக்கத்தில் டயோனிசஸ் தெய்வத்துக்குச் செய்கிற சடங்குகளே நாடகமாக உருமாறுவதையும் ரோமா மரபில் வீனஸ் தெய்வத்துக்குரிய சடங்குகளும் எகிப்தின் பழைமிகு நாடக உருவாக்கமும் கலைகளின் உருவாக்கத்தால் சடங்குகளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தி நிற்கின்றன. இங்கு கும்பமும் இன்றுவரை சடங்காகவும் கலையாகவும் தொடரும். இரு பண்பாட்டு கையளிப்பாக அமைந்துள்ளது.



ஆசிய மரபில் சீன நடனங்கள் யப்பானிய மரபில் நோ கபுகி, நடன நாடக முறைமைகள் இதற்குரிய பாலித்தீவு நடனங்கள் தாய்லாந்தின் நடன முறைமைகள் சடங்காக உருவாகி கலையாக மாறியவையே. இன்றும் அவற்றுள் சில சுவையாகவும் சடங்காகவும் தொடர்வதை நாம் காணலாம். ஏன் சிங்கள மரபில் பல்வேறு கலைகளையும் பயின்று அதன் வெளிப்பாடாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். கும்ப விழாவில் வருகின்ற கும்ப ஆட்டம் ஒவ்வொருவருக்குள்ளிருக்கும் அல்லது புதைந்து கிடக்கும் கலைதிறனின் வெளிப்பாடாகவே நாம் காணமுடியும்.

கும்பம் எடுத்தல், கும்பம் தூக்குதல் என்ற நிகழ்வில் பூசாரியார் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தெய்வத்தை உருவகப்படுத்தி அவர்கள் மீது மந்திரங்களை ஏற்றுகிறார்களோ அதன்மூலமாக அந்தத் தெய்வங்கள் பற்றிய ஐதீகங்களையும், புராணங்கள் கதைகள் கூறுகின்ற குணாம்சங்களையும் உள்வாங்குகிறார்கள். பின்னர் ஆடுகிறபொழுது அந்த தெய்வமாகவே தங்களை உருவகித்துக் கொண்டு ஆடுகிறார்கள். பரம்பரையாக தங்கள் குலமரவு தெய்வங்களையும் வெளிப்படுத்துவர். உதாரணமாக மாரியம்மன் என்றால் மிகவும் நளினமான ஆட்டம் வெளிப்படும். காளியென்றால் மிகவும் ஆக்ரோசமான ஆட்டத்தைக் காணலாம். அந்ததந்த கடவுளர்களை உருவகித்துக் கொள்ளல் இங்கு முக்கியப்படுகிறது. ஒரு நாடக நெறியாளன் எப்படி ஒரு பாத்திரத்துக்கான குணாம்சங்களை நடிகர்களுக்குச் சொல்லிக் கொடுப்பானோ அதேபோலவே மந்திரம் மூலம் ஒரு பூசாரி அந்த தெய்வத்துக்குரிய மந்திரங்களை உச்சத்துல் அழைக்கிறபொழுது அந்த தெய்வமே எழுந்து வருகிறது போல அமையும் அந்தக்காட்சி, வீரபத்திரன் என்றால் தக்க யாகத்தை அழிக்க அகோர வீரபத்திரன் புறப்பட்ட காட்சியை மந்திரம் மூலம் வெளிப்படுத்த வீரபத்திரனாக தன்னை உருவகித்து கொண்ட ஆட்டம் வெளிப்படும். இங்கு பங்குகொள்கிற ஒவ்வொருவரும் தாங்கள் ஒரு கலை வெளிப்பாடடைச் செய்கிறோம் என்று அறியாமலேயே கலைஞர்களாக பரிணமிக்கின்றனர்.

இந்திய நாட்டிய சாஸ்திரத்தில் பரத முனிவர் முதல் நாடகமாக பாற்கடல் கடைந்த கதை என்பது ஒரு சடங்குத் தன்மையுடன்தான் நடைபெறுகிறது. நாட்டிய சாஸ்திரத்தின் தொடக்கமே சடங்குதான். அந்த சடங்கிலிருந்துதான் நடனமுறைமைகளை பின்னாளில் வேறுபடுத்தி அதற்கான இலக்கணங்களை உருவாக்கினார்.



நாட்டிய சாஸ்திர ஆசிரியர் சொல்கிற ரசானுபவம்  நமக்கு கும்ப சடங்கில் கிடைக்கிறது. ஒன்பது வகையான ரசங்களும் அதற்கு மேலதிகமாக ஊற்றுப்பெறும் ராசானுபவங்களும்  கும்ப ஆட்டத்தில் காணலாம். இங்கு போலச் செய்தலின் மிக உச்சமான வெளிப்பாட்டுத் திறன் ஸ்ரனிஸ்லாஸ்கி சொல்வாரே பாத்திரங்களை வெளிப்படுத்தல் என்பது இங்கு கும்பவிழாவில் ஒரு ரசவாதமாக மாறி நம்மை பிரமிக்க வைக்கிறது. எத்தனை முகங்கள், எத்தனை பாவங்கள் மாறிமாறி வருகின்ற உணர்ச்சிப் பிரவாகம் எல்லாம் இங்கு கொட்டித் தீர்க்கப்படுகின்றன.

குரொடடவஸ்கியின் குரூர அரங்கிற்கான மூலத்தையும், மேயர்கோல்டின் உடற்பொறிமுறை அரங்கிற்கான ஆதாரங்களும், பெரக்டின் அன்னியமாதல் கோட்பாட்டையும், ஸ்ரனிஸ்லாஸ்கியின் பாத்திரமாதல் மரபையும், றிச்சட் செக்கனாரின் அனைத்தும் உட்கொண்ட அரங்கின் கூறுகளையும் நாம் இந்த கும்பவிழாவில் ஆடப்படும் ஆடடத்தில்;  அவதானிக்க முடியும.

அரங்கியல் வரலாற்றில் உருவான கோட்பாடுகள் சடங்குகளை அடிப்படையாகக் கொண்டே உருவாகின்றன. இரண்டு பிரதானமான விவாதங்கள் உள்ளன.

(1) சடங்கிலிருந்து நாடகங்கள் உருவானது
2) சடங்கே நாடகம்.

இந்த் இரண்டு கோட்பாடுகளும் ஒன்றையொன்று இணைத்த முறைமைதான் இங்கு சடங்கே நடனமாக மாறுவதை நாம் காணலாம். ஒரு பரதநாடடிய அரங்கேற்றத்தில் நீங்கள் எத்தனை விதமான பாவங்களையும் ரசானுபவத்தையும் பெறுவீர்களோ அதற்கு அதிகமாகவே நீங்கள் கும்ப ஆட்டத்தில் காணமுடியும். சில இடங்களில் நரசிங்களைக் ஆடுபவர்கள் நாக்கை நீட்டிக்கொண்டு கோர முகத்தை வெளிப்படுத்துகிறபோது எந்தவொரு நடிகனாலும் அத்தகைய பாவத்தைக் கொண்டுவர முடியாத அளவுக்கு கும்ப ஆட்ட முறைமை அமைந்திருக்கும்.

கும்ப விழாவை என் சிறுவயது தொடக்கம் பக்கத்திலிருந்து பார்த்து ரசித்தவன் என்ற வகையிலும் பின்னாட்களில் இவற்றை அறிவியல் ரீதியாக எப்படிப் பார்க்கலாம் என்ற வகையிலும் எனக்கு மேலைத்தேய, கீழைத்தேய கலை மரபு கோட்பாடுகள் துணை நிற்கின்றன. ஒன்றை நாம் எப்படிப் பார்க்கின்றோம்



என்ற வகையில்தான் அதன் தன்மை நமக்குள் வெளிப்படும். அதன் உள்ளிருந்து பார்ப்பவர்களுக்கு ஒரு சடங்காக பக்தி அனுபவமாக இருக்க வெளியிலிருந்து ரசிப்பவர்களுக்கு அது ஒரு கலையாக உணரப்படுகிறது.

கும்பவிழா ஒரு தெரப்பியாகவும் தொழிற்படுகிறது. வருசம் முழுவதும் தங்களுக்குள் அடக்கி வைத்திருக்கும் கோபம், சந்தோசம், துக்கம், வெப்பிசாரம் என எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்தும் ஒரு களமாகவும் இவை அமைகிறது. இங்கு ஆடுபவர்கள் அந்த நிலையை பெறுகிற போது பார்ப்பவர்களுக்கு அதனுள் சென்று அந்த அனுபவத்தைச் சுவைக்கிறார்கள். மன அழுத்தங்களுக்கு மருந்தாக இவை மாறுவதை நாம் இங்கு அவதானிக்க முடியும்.

திருகோணமலை மாவட்டத்தின் தனித்துவமான பண்பாட்டு அடையாளமாக நாம் இங்கு கும்ப விழாவைப் பார்க்க முடியும். ஒரு நடன ஆசிரியர் திருகோணமலையில் இந்த கும்ப நடனத்தை மேடையில் தன் பிள்ளைகளைக் கொண்டு நிகழ்த்தியிருந்தார். அவர் யாரென்று எனக்கு ஞாபகமில்லை. ஆனாலும் அவை ஒரு முக்கியமான மடைமாற்றம் தனியே ஒரு சடங்கு முறைக்குள் அடங்கிப் போகாமல், இதனை நாம் ஒரு கலையாகவும் அடையாளப்படுத்த வேண்டும்
(ஒளிப் படங்கள் உதவி திருகோணமலை ஊடகவியலாளர் சிங்காரவேல் சசிகுமார்)

கடந்து வந்த அறுபது ஆண்டுகள்





கடந்து வந்த அறுபது ஆண்டுகள்

ஒரு மனிதனின் வாழ்வில் அறுபதாண்டுகள் என்பது மிக நீண்ட பயணம் பலருக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை.சேனையூர் எனும் சிறிய கிராமம் எல்லாளன் குளக்கோட்டன் என வரும் தொன்மங்கள் சுமந்த என் கிராமம் .அப்பா காளியப்பு பாலசிங்கம் அம்மா குமாரசாமி தெய்வநாயகம்

செல்வாக்குள்ள குடும்பத்தில் பிறந்தாலும் என் இளமைக் காலம் வசதிகள் அற்ற வாழ்வுதான்.
பல வேளைகளில் சாப்பாடு இல்லாமலேயே பள்ளிக்கூடம் போவேன்.இரவு உணவு மட்டும் கிடைக்கும் .ஒரு உடையயை  வைத்துக் கொண்டு பள்ளிகூடம் போன நாட்களதிகம் இவை எல்லாவற்றையும் தாண்டி பரிட்சைகளில் வெற்றி பெற்றேன் குடும்பம் எனக்கு உறுதுணையாய் இருந்தது.அம்மா அப்புச்சி சகோதரங்கள் என அன்பின் நீட்டசி.

படசாலையில் என் ஆசான்கள் கைதூக்கி விட்டார்கள் கல்வி கலை விளையாட்டு எல்லாவற்றிலும் நான் நானாக இருந்தேன்.பரிசுகள் பாராட்டுகள் நீண்டன
கிராமத்து வாசிகசாலை எனக்கு போதிமரமானது,வாசிப்பு எனக்கு வேதமானது.

பல்கலைக்கழக வாசல்கள் திறந்தன புகுந்தேன் புதியவற்றை கற்றேன் மாக்சியம் என்னை ஆதர்சித்தது இலங்கயின் புகழ் பூத்த அறிஞர்களின் நிழல் என்னில் பட்டது  கல்வியாளனாய் திரும்பினேன் .

அரச உத்தியோகம் விவசாய விரிவாக்க அதிகாரி ஆறுமாதங்கள்தான் அதன் பின் ஆசிரிய தொழில் பொலநறுவையில் பின்னர் சொந்த ஊர்நான் கல்வி கற்ற சேனையூர் மகாவித்தியாலயம். பிரதி அதிபராக இன்றய திருகோணமலை விபுலானந்தா வித்தியாலயத்தில்

1988.ல் காதல் திருமணம்  என் வாழ்க்கைத் துணையாக பிரமிளாவின் வரவு 1990ல் என் அழகு மகள் அனாமிகாவின்  உதயம்.

1992ல் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரயாளராக நுண்கலைத்துறையில்.துறைத்தலைவராக,பீடாதிபதியாக,இணைப்பாளராக பல வேளைகளில் பதில் உப வேந்தராக பணிகளை தொடர்ந்தேன்.

அரசியல் இளமையில் தமிழ் இளைஞர் பேரவை,ஈழவிடுதலை இயக்கம்(தமிழ் ஈழ விடுதலை இயக்கமல்ல)ஈழப் புரட்சியமைப்பு
இன்று ஒரு மாக்சியனாக தொடரும் பயணம்.

கலை இலக்கியம் முற்போக்கு முகம்  ஈழத் தமிழர்களின் தனித்துவமான இசை நடன உருவாக்கம் ஈழ நாட்டியத்தின் உருவாக்கம்.அனாமிகா பதிப்பகம் 24 நூல்கள்.

2004ல்  சுனாமியில் கரைந்து போன மகள் அனாமிகா நினைவுக் கடலாய் என்னுள் அவள்.2006ல் மகன் அனாமிர்தனின் அதிசய பிறப்பு
என் வாழ்வுக்கான பிடிப்பாய்.

2006ல் கடத்தப் பட்டு புலம் பெயர் தேசத்துக்கு தூக்கியெறியப் பட்ட துயரம்.வேரிலிருந்து புடுங்கி எறியப் பட்டேன்.சவால்கள் நிறைந்த வாழ்வு.ஒட்டவில்லை ஓடவும் முடியவில்லை மிச்சமென்ன மீதி...........

என் பிறந்த நாளை உறவுகளும் ஊரவரும் என் நண்பர்களும் மாணவர்களும் சேர்ந்து கொண்டாடினர் மகிழ்வின் தருணங்கள்
.
 முகமறியா முக நூல் தோழமைகள் வாழ்த்து சொன்னார்கள் எத்தனை மகிழ்ச்சி.நெருங்கிய உறவுகள் பலரின் வாழ்த்தும் வருகையும் நண்பர்களின் அன்பும் என் வீட்டை விழாக் கோலமாக்கியிருந்தது.

என் ஆசான்கள்,மாணவர்கள்,தோழர்கள் நண்பர்கள் என வாழ்த்துக்கள் என்னை உற்சாகத்தில் ஒய்யாரமிட வைத்தன.வாழி நீவிர்.....

ஆனாலும் சின்ன நெருடல் சில நெருங்கிய உறவுகளின் வாழ்த்து வரவில்லை.....

உயிர்ப்பின் மூச்சு

இலையுதிர் காலத்து இன்றைய பொழுது
இனிமையாய்
இயற்கையும் நாங்களும்
01.11.2015

சருகாய் உதிர்வதும்
உயிர்ப்பதும்
எத்தனை முறை

உயிர்ப்பின் மூச்சு
ஒவ்வொரு சருக்குக்கும்
அலுக்காத சுழர்ச்சி

சருகென வீழ்ந்தாலும்
மீண்டும் மீண்டும்
எழுவது இயல்பு
மார்கழி மாதம்
என் மகளின் நினைவில்

சித்திரைப் பூவே
செங்காந்தள் மலரே
முகத் திரையில்லா
முழு நிலவே

நேற்று இன்று நாளை
என்றும்  நீ...
நினைவில்

என் கனவுகள்
எல்லாம்
உன்னிலிருந்துதான்
நீ....
இல்லாத போது

உன் புன்னகை
உன் சந்தோசம்
உன் அழுகை
உன் ஆர்ப்பரிப்பு
எல்லாம் எனக்குள்...
நீ...
இல்லாத நாட்களில்
 நான்......

நீ,,பாடிச் சென்ற கவிதைகள்
நீ...எழுதிச் சென்ற கதைகள்
உன் ..சொல்லில் தெறித்த
தத்துவங்கள்
எல்லாம் ......என்னுள்
நீ..
இல்லாத இரவின் நீட்சி

உன் வரவுக்காய்

கைக்குள் வந்து
கன்னத்தில் முத்தமிட்டு
இரவு வணக்கம் சொல்லும்
இங்கிதத்துக்காய்
காத்துக் கிடக்கிறேன்
எத்தனை ஊழி கடந்தும்
நீ...

நான்

 நிலவொளியில்
மாமாங்க குளக் கரையில்
தாமரை அழகையும்
நிலவு வந்து பூக்களில்
முத்தமிட்டு செல்லும்
காட்சி படிமங்களையும்
பார்த்து பார்த்து
ரசிப்போமே
நடந்தும் இருந்தும்
ஓடியும்....
நீ
இல்லாத
மாலைப் பொழுது

துவிச்சக்கர வண்டி சுமந்து வர
டேய் அப்பா என
என் மடிமீது தாவி விழும்
அந்த கணங்கள்
சிரித்து சிணுங்கி
செல்லம் பொழியும் தருணங்கள்
நீ..
இல்லாத காலைப் பொழுதுகள்

அப்பா என அழைத்து
காலை வணக்கம் சொல்லும்
இளம் சூரியனாய்
எப்போதும்
என்னுள்

அந்த இந்திர ஜாலத்துக்காய்
காத்து கிடக்கிறேன்
நீ..
நான்  உலா வரும்
நாட்களுக்காய்

கடற்கரை மணலில்
உன் கை பிடித்து நான்
நடப்பேன்
அத்தனை வேகம்
உனக்கு
கடலை
கரையயை
அழைந்து
ஆராதித்து
விளையாட

காத்திருக்கிறேன்
கடலிலும் கரையிலும்
உன்னை காண
உன் மென் பாதங்கள்
பதித்த
ஓவியங்களுக்காய்
நீ...
இல்லாத  நேரங்கள்

உன் சுந்தர மொழி கேட்டு
கிறங்கிப் போவேனே

தமிழ் உன்னிடமிருந்து

அழகு பெறும் அந்த
 நேரத்துக்காய்
காத்துக் கிடக்கிறேன்
நீ
இல்லாத
ஊரில்

நீள நடக்கிறேன்
உன் நினைவுகள்
சுமந்து

பனியிலும்
மழையிலும்
உன் பால் முகம்
காண
துடிக்கிறேன்

ஒரு தரமேனும்
பார்த்திட
வருவாயா
என
மனமேங்குகிற
நாட்களிவை

Saturday, 20 August 2016

நீ
இல்லாத
என் ஊர்

ஊருக்கு போவதென்றால்
அலாதிப் பிரியம்
உனக்கு

சேனையூர் என்றால்
சிறகடித்து
பறப்பாய்

உன்
சாகசங்களுக்கு

இளவரசியாய்
நீ
உலா வந்த
நாட்களவை

வயலும் வரப்பும்
ஆறும் களியும்
உன்
கனவின் மீதியாய்
இப்போதும்
அப்படியேதான்
உள்ளன

ஆனால்
நீ
இல்லை
உன்
பூட்டியாச்சியும்
இல்லை
நீ
இல்லாத
ஊரில்
நான்

நீன் நதி
அமைதியாய்
தன்
நினைவுகளை
சுமந்தபடி
ஓடிக்கொண்டிருக்கிறது

நானும்
அந்த நதியயை
போலவே
அமைதியாய்
உன்
நினைவுகளுடன்
நீ
இல்லாத
நாட்களில்
நான்

இபோது
இருந்தால்
எப்படியிருப்பய்
என்ன செய்வாய்
ஏங்கிச்
சாகிறது
என்
மனம்

பார்க்க
பார்க்க
தெவிட்டாத
உன்
முகம்

கேட்க
கேட்க
தெவிட்டாத
உன்
மொழி
நீ
இல்லாத
நாளில்

உடைகளில்தான்
எத்தனை
பிரியம்
உனக்கு

விதம் விதமாய்
வாங்கி
அழகு பார்ப்பாய்

எல்லோருக்கும்
ஒன்றோ இரண்டு
பண்டிகைதான்
ஆனால் உனக்கு
எல்லா பண்டிகையும்
சொந்தம்
நீ
இல்லாத
வாழ்வு

எதுவுமே
பிடிபடவில்லை
உன்
நினைவுகளில்
மூழ்குவது
மட்டுமே
இன்பமாகிறது

கனவுகளில்
நீ
களித்து
மகிழ்கிறேன்
நான்
நீ
எப்போதும்
சந்தோச
பொழுதுகள்

உன்
குரலில்
பார்வையில்
மகிழ்ச்சி
சம்மணமிட்டுக்
கொள்ளும்

சோம்பல்
உனக்கு
தெரியாத
ஒன்று

உற்சாகம்
உன்னிடமிருந்துதான்
பிறந்ததோ
என
எண்ணிய
நாட்கள்
பல
நீ
இல்லாமல்

வெறுமை
என்னுள்
கனந்து
தணிகிறது

உன்னை
நினைக்காமல்
ஒரு
கணம்
இல்லை

என்னை
கை பிடித்து
அழைத்து
செல்ல
வந்து விடு
நீ
இல்லாத
நாட்கள்

எல்லாம்
முடிந்தது
என்று
உன்னிலிருந்து
விலகியிருக்கவில்லை
நான்

என்
புதிய பிறப்பாய்
நீயே
வருகிறாய்
நீயும்
நானும்

அப்பா
கதை
சொல்லு
என
ஆயிரம்
கதைகள்
கேட்பாய்
உற்ற கதை
சொல்லவா
பட்ட
கதை சொல்லவா
என
கேட்பேன்

பட்ட கதை சொல்லு
என்பாய்
இளமை நாட்களில்
அனுபவித்த
வறுமையயயும்
அதன் வலிகளையும்
சொல்வேன்
நான்
அழுவேன்
நீ
என் கைகளை
பிடித்து
கண்ணீர் துடைப்பாய்

உற்ற கதை கேட்டு
ஆர்ப்பரிபாய்
ஆனந்த களிப்பில்
இருவரும்
நீ
குதுகலிக்கும்
நாட்களின்
முதன்மை நாள்
இன்று

நீ
புதுப் பொலிவு
பெறும்
நாள்
இன்று

புத்தாடைகள்
உன் அழகை
ஆராதிக்கும்
நாள்
இன்று

மகிழ்வாய்
உலா வந்து
மற்றவர்க்கு
உதவுவாய்

ஏழ்மையில்
இரக்கம்
கொள்வாய்

உன்
இனிய நத்தார்
நினைவுகளுடன்
நான்

களி ஆடும் அன்னமே

நெடிது நீண்ட
நீன் நதியில்
நீந்தி களி ஆடும்
அன்னமே

வெள்ளையாய்
என்னை
கொள்ளையிடும்
அழகு

உன்

நடையழகு
நான் கண்டதில்லை

உன்
நீச்சல் அழகை
நேரம் கிடைக்கும்
போதெல்லாம்
ரசித்து மகிழ்கிறேன்

ஒற்றை அன்னமே
உன்னைக் கண்டு
வியக்கிறேன்
காற்றைக் கிழித்து
ஏழ் கடலைக் கடக்கும்
வல்லமை உனக்கு

சொல்லாத
சேதியெல்லாம்
சொல்லிச் செல்கிறாய்

கவலைகள் கிடக்கட்டும்
மறந்துவிடு என
எனக்கு
பாடம் சொல்லித் தருகிறாய்

(இன்று 20.08.2016 காலை 6மணி)


Friday, 19 August 2016

கதை கதையாம் காரணமாம் காரணத்தில் ஒரு தோரணமாம்,உப்பில்லாச் சோறாம் சாண்டில்யன் எனும் தமிழ் கதை சொல்லி

கதை கதையாம் காரணமாம் காரணத்தில் ஒரு தோரணமாம்,உப்பில்லாச் சோறாம்

சாண்டில்யன் எனும் தமிழ் கதை சொல்லி.

நம் வாழ்வில் எல்லாக் காலங்களிலும். கதைகள் நம்மோடு பயணம் செய்கின்றன.நம் மூத்தவர்கள் மூலம் அற்புத கதைகாளும்,தொடர்ந்து அம்புலிமாமா வாசிப்புகளும் ,பி.டி.சாமி கதைகளும்  நம்மை தொடர்ந்தன.

கதைகள் என்பது கற்பனைகளும் யதார்த்தமும் கலந்தவைதான் புராண இதிகாசங்கள் நமக்கு பல்லாயிரம் கதைகளை தந்துள்ளன.உலகம் முழுவதும் காலத்துக்கு காலம் கதை சொல்லிகள் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள்.

சீனாவில் தோன்றிய மாயக் கதைகள்,ரஸ்ய நாடோடிக் கதைகள்,அரேபியாவின் அற்புதக் கதைகள்,இந்திய தொன்ம மரபுக் கதைகள்,மேலைத்தேய மரபில் வந்த ரொபின் கூட்,ஹெர்குலிஸ் கதைகள்,தமிழ்  மரபில் கோணங்கி வரை நீள்கின்ற நீள் கூந்தல் கதைகள்.இப்படி எத்தனை ஆயிரம் கதைகளை நாம் கண்டிருக்கிறோம்.

அண்மைக் காலத்தில் ஹரிபோட்டர் கதையாகவும் திரைப்படமாகவும் வந்து  உலகை திரும்பி பார்க்க வைக்கவில்லையா ,அவதார் என்கிற நவீன கற்பனை நம்மை அசத்தவில்லையா கற்பனைகளோடு பயணிப்பவன்தான் மனிதன்.காலத்துக்கு காலம் கற்பனைகள் மாறுகின்றன.உலகம் முழுவதும் திரையரங்குகளில் சக்கை போடு போட்ட fast of furious ஒரு அழகான நவீன கற்பனைதான்.ஏன் டார்சான் கதைகள்,யுரசிக் பார்க் என எல்லாமே கற்பனைகளில் வளர்ந்த கதைகள்தாம்.

தமிழ் நவீன கதை சொல்லிகளில் வரலாற்றுப் புனைவுகளை படைத்தவர்கள் மிகச்சிலரே , தமிழில் வரலாற்று புனைவு திருகோணமலை சரவணமுத்துப் பிள்ளையின் மோகனாங்கியோடு தொடங்குகிறது.தொடர்ந்து நாம் கல்கி,அகிலன் ,ஜெகசிற்பியன் ,கலஞர் கருணாநிதி ,சாண்டியல்யன் ஈழத்தில் வ.அ.இராசரெத்தினம்,செங்கையாழியான்,முல்லைமணி,கங்கேஸ்வரி கந்தையா என  பட்டியலிடலாம்.

நவீன தமிழிலக்கிய வரலாறு கல்கியின் பொன்னியின் செல்வன்,சிவகாமியின் சபதம்,அகிலனின் வேங்கையின் மைந்தன்,வெற்றித் திருநகர்,ஜெகசிற்பியனின் நந்திவர்மன் காதலி,பத்தினிக்கோட்டம், கலைஞரின் ரோமபுரிப் பாண்டியன்,சாண்டில்யனின் கடல்புறா,யவனராணி ஆகியவற்றை தவிர்த்து கடந்து சென்று விட முடியாது.

சாண்டில்யன் தமிழ் எழுத்துலகில் கின்னஸ் சாதனைக்குரியவர்.வரலாற்று மூலங்களில் உள்ள சிறிய சம்பவங்களை வைத்துக் கொண்டு தன் கற்பனையால் அன்றய நாட்களில் பல்லாயிரம் வாசகர்களை தன் கதை வலைக்குள் சிக்க வைத்தவர்.இன்று பிரபலமகவிருக்கும் பல எழுத்தாளர்கள் அவர் கதைகளை கடந்து வந்தவர்கள்தான்.இன்றும் கூட அவர் நாவல்கள்  அவர் படைப்புகள் கடல்புறாவும்,யவனராணியும்  இன்னும் பலவும் ஒவொரு ஆண்டும் புதிய பிறபெடுக்கின்றன.தமிழக சஞ்சிகைகளில் அவர் நாவல்கள் தொடராக வந்த போது தவம் கிடந்தவர்கள் பலர்.

சாண்டில்யன் பல்வேறு புதினங்களை படைத்திருந்தாலும் அவருக்கு பெருமை சேர்த்தவை அவரது வரலாற்று நவீனங்களே.

சாண்டில்யனின் வரலாற்றுப் புதினங்கள்

கடல் புறா (3 பாகங்கள்)
யவன ராணி (2 பாகங்கள்)
ராஜ முத்திரை (2 பாகங்கள்)
விஜய மகாதேவி (3 பாகங்கள்)
பல்லவ திலகம்
விலை ராணி
மன்னன் மகள்
ராஜ திலகம்
ஜல தீபம் (3 பாகங்கள்)
கன்னி மாடம்
சேரன் செல்வி
கவர்ந்த கண்கள்
மலை வாசல்
ஜீவ பூமி
மஞ்சள் ஆறு
மூங்கில் கோட்டை
சித்தரஞ்சனி
மோகினி வனம்
இந்திர குமாரி
இளைய ராணி
நீள்விழி
நாக தீபம்
வசந்த காலம்
பாண்டியன் பவனி
நாகதேவி
நீல வல்லி
ராஜ யோகம்
மோகனச் சிலை
மலை அரசி
கடல் ராணி
ஜலமோகினி
மங்கலதேவி
அவனி சுந்தரி
உதய பானு
ராஜ்யஸ்ரீ
ராஜ பேரிகை
நிலமங்கை
சந்திரமதி
ராணா ஹமீர்
அலை அரசி
மலை வாசல்
கடல் வேந்தன்
பாலைவனத்துப் புஷ்பம்
சாந்நதீபம்
மண்மலர்
மாதவியின் மனம்
பல்லவ பீடம்
நீலரதி

என் பாடசாலை பருவ நாட்களில் சாண்டில்யனோடு  அதிகமாகவே பயணித்திருக்கிறேன்.நான் சின்ன மாமா என அழைக்கும் கனகசிங்கம்,எங்கள் அதிபர் கணேஸ் மாமா சாண்டில்யனை என் கைகளில் தவழ விட்டவர்கள்.என் அம்மா சரித்திர நாவல்களின் தீவிர வாசகி.அம்மா அன்றய நாட்களில் எங்கள் அப்புச்சிக்கு சத்தமாக வாசிப்பார் நானும் பக்கத்திலிருந்து கேட்பேன்.அகிலனின் கயல்விழி நாவலின் பாதிப்பில்தான் என் தங்கைக்கு அப்புச்சி கயல்விழி என பெயர் சூட்டினார்.

சாண்டில்யனை ஒரு வரலாற்று புனைவு எழுத்தாளராக மட்டும்தான் பலர் அறிந்திருக்கிறார்கள் அவர்களுக்காகாக அவர் நூற்றாண்டையொட்டி தினமணியில் வந்த இந்த கட்டுரையயை இங்கு பதிவிடுகிறேன்

"
 சாண்டில்யனின் நூற்றாண்டுவிழா, 6.11.2010 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.
 தஞ்சை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்துள்ள திருஇந்தளூர் அவரது சொந்த ஊர். 1910-ஆம் ஆண்டு நவம்பர் 6-ஆம் தேதி, டி.ஆர்.சடகோபன் ஐயங்காருக்கும், பூங்கோதைவல்லி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். பிறந்த ஊர் திருக்கோவிலூர். அவரது இயற்பெயர் எஸ்.பாஷ்யம்.
 கல்லூரிப் படிப்பில் 'இன்டர்மீடியட்' படித்தார். அப்போதே அவருக்குத் தேசிய இயக்கத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபாடு கொள்ளத் தொடங்கிய பிறகு, சென்னை வந்த அவருக்கு, அறிஞர் வெ.சாமிநாத சர்மா, கல்கி போன்றோர் நண்பர்களாயினர். இருவருடனும் பழகியதால் சிறுகதை எழுதும் ஆர்வம் ஏற்பட்டது. அந்நாளில், 'திராவிடன்' இதழாசிரியர் தோழர் சுப்பிரமணியம் நண்பரானார். அவருடைய 'திராவிடன்' இதழில் 'சாந்தசீலன்' என்ற சிறுகதையை எழுதினார். அந்தக் கதையைப் படித்த கல்கி, அவர் ஆசிரியராக இருந்த 'ஆனந்த விகடனில்' எழுத வற்புறுத்தினார். சாமிநாத சர்மா ஆசிரியராக இருந்த 'நவசக்தி'யிலும் சாண்டில்யனின் கட்டுரைகள் வெளிவந்தன.
 சாண்டில்யன் எழுதிய 'பலாத்காரம்' என்ற முதல் நாவலுக்கு அந்நாளைய காங்கிரஸ் தலைவர் தீரர் சத்தியமூர்த்தி சிறப்பாக முன்னுரை எழுதியிருக்கிறார். பிற்காலத்தில், 'புரட்சிப்பெண்' என்ற தலைப்பில் அந்த நாவல் வெளிவந்தது.
 சாண்டில்யனுக்குத் தன்னம்பிக்கை அதிகம். ''ஒரு படத்துக்கு மக்கள் மத்தியில் ஐந்து ஆண்டுகள் மட்டுமே மவுசு இருக்கும். ஆனால், நான் எழுதும் புத்தகங்களுக்கு 500 ஆண்டுகள் மவுசு இருக்கும். அதனால்தான் நான் எழுத்துத் துறையைத் தேர்ந்தெடுத்தேன்'' என்று, சாண்டில்யனே ஒருமுறை கூறியிருக்கிறார்.
 சாண்டில்யனின் எழுத்துத் திறமையை அறிந்த சுதேசமித்திரன் ஆசிரியர் ஸி.ஆர்.சீனிவாசன், அவரை நிருபர் பணியில் அமர்த்தினார். சாண்டில்யன், உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகள் பற்றிய செய்திகளை எழுதும் நிருபராகப் பணியாற்றினார். சாண்டில்யன் நிருபர்களுக்கு வழக்கு மன்றத்திலிருந்த 'மரியாதை'யை சுவைபட விவரித்து, 'ஆங்கில ஏடுகளின் நிருபர்களுக்கு மட்டும் நீதிமன்றத்தில் வசதியாகவும் மற்ற தமிழ்ப் பத்திரிகை நிருபர்கள் நின்றுகொண்டுதான் எழுதவேண்டிய நிலை' உள்ளதைச் சுட்டிக்காட்டிப் பேசியும் எழுதியும் வந்தார்.
 நீதிமன்ற நடவடிக்கைகளை சுதேசமித்திரனில் வெளிவரச் செய்தார். சுதேசமித்திரன் செய்தி வழக்கறிஞர்களிடையே பரவியது. சாண்டில்யனுக்கு உட்கார நாற்காலி வசதி செய்யப்பட்டது. நீதிமன்ற வழக்குகளை நல்ல தமிழில் சுதேசமித்திரனில் எழுதியதால், சாண்டில்யன் திறமை எங்கும் பேசப்பட்டது.
 1937-இல் மகாத்மா காந்தியைச் சந்தித்துப் பேட்டி கண்டு எழுதினார். சாண்டில்யனின் மதிப்புணர்ந்த நிர்வாகம், அவரை உதவி ஆசிரியராகப் பதவி உயர்வு அளித்தது. பின்னர் சில கருத்து வேறுபாடு காரணமாக, மீண்டும் நிருபர் பதவி தரப்பட்டது. இதனால் கோபமடைந்த சாண்டில்யன், அந்தப் பதவியிலிருந்து விலகி 'ஹிந்துஸ்தான்' வார இதழில் சேர்ந்தார்.
 சாண்டில்யனுக்கு, சினிமா, நாடகம் பார்ப்பதில் மிகுந்த ஈடுபாடு உண்டு. 'ஹிந்துஸ்தானி'ல் பணியாற்றியபோதுதான் திரைப்படத்துறையின் தொடர்பு அவருக்கு ஏற்பட்டது. திரைப்படக் கலையில் முன்னணியில் நிற்க வேண்டுமென்று இயற்கையாகவே அவரிடம் இருந்த லட்சியம் அப்போது நிறைவேறியது. சினிமாவைத் தாக்கி எழுதுபவர்களுக்கு அவர், தன் பேனாவின் வலிமையால் பதில் சொல்லியிருக்கிறார். சினிமா பற்றி ராஜாஜி கூறிய கருத்துகளை எதிர்த்து 'சினிமா பார்ப்பது கெடுதலா?' என்ற கட்டுரையை 1952-இல் எழுதினார்.
 எனக்கு சினிமாவைப் பற்றி ஏதாவது தெரிகிறது என்றால், அதற்குக் காரணமானவர்கள் பி.நாகிரெட்டி, வி.நாகையா, கே.ராம்நாத் ஆகியோர்தான். பதினான்கு ஆண்டுகள் சினிமா உலகில் இருந்தேன். அப்போதெல்லாம் கதையை எழுதக் குறைந்தது ஆறுமாதங்களாகும். கதையை எழுதினால் மட்டுமே போதாது. 'ஷூட்டிங் ஸ்கிரிப்ட்' தயாரிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
 வி.நாகையாவின் 'தியாகையா' வெற்றிக்கு சாண்டில்யன் பெரிதும் காரணமானவர். அந்தப் படம் வெளிவந்த பிறகு, புகழின் உச்சியில் இருக்கும்போதே திரைப்படத் துறையிலிருந்து விலகிவிட்டார்.
 இளம் வயதிலிருந்தே அவரின் லட்சியம் எழுத்தாளராக வேண்டுமென்பது. பிரபலமாக விற்பனையாகும் பத்திரிகைக்கு ஆசிரியராக வேண்டுமென்பது. முதல் எண்ணம் வெற்றிகரமாக நிறைவேறியது. இரண்டாவது எண்ணம் சொந்தமாகப் பத்திரிகை நடத்தி, வெற்றி பெறவில்லை.
 சில காரணங்களால் மீண்டும் சுதேசமித்திரனில் சேர்ந்தார். 'ஞாயிறு மலர்' என்ற சிறப்புப் பகுதியின் பொறுப்பாளரானார். சுதேசமித்திரன் வாரப் பத்திரிகையிலும் எழுதினார். 'அமுதசுரபி'யில் சரித்திர நிகழ்ச்சிகளை நிலைக்களனாகக் கொண்ட சிறுகதைகளை அவ்வப்போது எழுதினார்.
 'சரித்திர நாவல் எழுதும் தாங்கள், வரலாற்றுப் புதினங்கள் எழுதவேண்டும்' என்று 'அமுதசுரபி' நிறுவனத்தார் கேட்டுக்கொண்டதால், 'ஜீவபூமி' என்ற சரித்திரத் தொடரை எழுதினார். 'ஜீவபூமி' தொடர், பின்னர் பிரபல அமெச்சூர் நாடக மன்றத்தாரால் நாடகமாக அரங்கேற்றப்பட்டது.
 'ஜீவபூமி' தொடருக்குப் பிறகு, 'மலைவாசல்' என்ற தொடரை எழுதினார். 'மலைவாசல்' புதினத்துக்குக் கிடைத்த வாசகர்களின் வரவேற்பால், பல வரலாற்றுப் புதினங்களை எழுத அவருக்கு உற்சாகம் ஏற்பட்டது. கன்னிமாடத்தில் தொடங்கி, கடல்புறா (மூன்று பாகங்கள்), யவனராணி முதலிய பிரம்மாண்டமான நாவல்களை எழுதினார். மொத்தம் 50 நூல்களை எழுதியுள்ளார். அவற்றில், 42 சரித்திர நாவல்கள். மற்றவை சமூக நாவல்கள் மற்றும் இலக்கியக் கட்டுரைகள். இவர் எழுதிய மிகப்பெரிய நாவல் கடல்புறா. மூன்று பாகங்கள்; மொத்தம் 2000 பக்கங்கள். கையெழுத்துப் பிரதிகள் 20,000 பக்கங்களுக்கும் மேல். இந்தியாவிலேயே அதிகம் எழுதி சரித்திரம் படைத்த சாதனையாளர் சாண்டில்யன்தான்.
 பத்திரிகையாளர், எழுத்தாளர், திரைப்படக் கதை வசனகர்த்தா, வரலாற்று நாவலாசிரியர்கள் போன்றோரிடையே முன்னணி இடத்தைத் தேடிக்கொண்டவர் எனப் பலமுகத் திறமைகளோடு முன்னேறிக் கொண்டிருந்த சாண்டில்யன், உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கான சங்கம் ஒன்றை நிறுவுவதில் பெரும்பாடுபட்டு, 'தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தை'த் தொடங்கினார். அது 'தென்னிந்தியப் பத்திரிகையாளர் சம்மேளனம்' என்ற பெயரில் பிரபலமடைந்தது.
 தனக்கு நியாயம் எனத் தோன்றாததை எதிர்த்து அவர் பேனா சீறிப்பாயும். நாடகமோ, திரைப்படமோ, சமுதாயத்துக்குத் தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்தால் போர்க்கொடி உயர்த்தத் தயங்கமாட்டார். நண்பர் என்றும் வேண்டியவர் என்றும் பார்க்க மாட்டார்.
 சரித்திரக் கதை சக்கரவர்த்தி சாண்டில்யன், 'சீனத்துச் சிங்காரி' என்ற தொடரை 'குமுதம்' வார இதழில் எழுதத் தொடங்கியபோது, திடீரென நோய்வாய்ப்பட்டார். மரணப்படுக்கையிலும் அந்தக் கதையை எழுதினார்.
 மருத்துவமனையில் இருந்தபோதும், மீண்டும் வீட்டுக்கு வந்த பிறகும் சாண்டில்யனைச் சந்தித்துப் பேசும்போது, 'சீனத்துச் சிங்காரி'யின் கதையைப் பற்றி நாங்கள் விவாதிப்பது வழக்கம். இதையறிந்த, 'குமுதம்' பதிப்பாளர் என்னிடம், ''நீங்கள்தான் சீனத்து சிங்காரியைத் தொடர வேண்டும்'' என்று வற்புறுத்தினார்.
 ''சாண்டில்யன் எழுத்து எங்கே? என் எழுத்து எங்கே? அவர் எழுத்து பட்டு நூல்; என்னுடையது பருத்தி நூல். இரண்டையும் சேர்த்துப் பட்டாடை நெய்து முடிப்பது சரியாகாது'' என்று மறுத்துவிட்டேன். முடிவடையா கோபுரமாய் 'சீனத்துச் சிங்காரி' நின்றுவிட்டது.
 சாண்டில்யனுக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனளிக்காமல், 1987-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி இயற்கை எய்தினார்."

நன்றி தினமணி


Monday, 15 August 2016

நூற்றாண்டு விழாக் காணும் சேனையூர் வித்தகர் காளியப்பு விஜயசிங்கம்(புலவர்,பரியாரியார் பூசாரியார் விஸ்வலிங்கம்)


நூற்றாண்டு விழாக் காணும்

சேனையூர் வித்தகர் காளியப்பு விஜயசிங்கம்(புலவர்,பரியாரியார் பூசாரியார் விஸ்வலிங்கம்)

காலம் சில ஆளுமைகளின்ள் நினைவுகளை விட்டுச் சென்றுள்ளது.அவர்கள் நினவுகளை நாம் கடந்து சென்று விட முடியாது உலக வரலாறு நமக்கு கற்று தந்த பாடமும் அதுதான்.அவர்கள் காலத்தில் அவை பெரிதும் பேசப் படாவிட்டாலும் பிற்காலத்தில் வரலாறு அவர்களுக்கான இடத்தை தந்து மதிப்பளித்துள்ளது.அவர்களது மகோன்னதமான அறிவு என்பது அன்றய கால சூழலால் தாங்கள் வாழ்ந்த கிராமிய சூழலுக்குள்ளேயே  முடங்கிப் போனது.பலரது வாழ்வு அறியப் படாமலேயே போய்விட்டது.

பூசாரியார் பரியாரியார் காளியப்புவின் மூத்த மகன் வித்தகர் விஜயசிங்கம் அவர்கள்,இளமைக் காலத்தில் மிகுந்த குழப்படி மிகுந்தவராகவே அவர் இருந்திருக்கிறார் ஆனாலும் படிப்பில் செலுத்திய அக்கறை  ஒரு அறிஞராக உரு மாற்றியது.தன் ஆரம்பகல்வியயை சேனையூர் மெதடிஸ்த மிசன் கல்லூரியில் பெற்ற இவர்.தன் தகப்பனாரிடம் நம் மரபு வழி முறையிலான குருகுலக் கல்வி முறையின் மூலம் தன் தன் தகப்பனாரிடம் கற்றுக் கொண்டார்.தொல்காப்பியம் நிகண்டு பழந்தமிழ் இலக்கியங்கள் என்பவற்றை பிழையற கற்றார்.அதனால்  இளமையிலேயே செய்யுள் இயற்றும் ஆற்றல் கைவரப் பெற்றவராக விளங்கினார்.

இவருடய முப்பாட்டன் அறம் பாடுவதில் வல்லவர் அந்த வகையில்  ஊரவர் வளவு வேலிகளை முறித்து  பயிர்களை அழித்தஅவர்கள் வீட்டு பாலி என்கிற பசுவை அறம்பாடி கொன்றதாக ஒரு கதையுள்ளது.இவர் அறம் பாடியதை விரும்பாத தகப்பனார் காளியப்பு இனிமேல் நீ அறம் பாடக் கூடாது என சத்தியம்  வாங்கியதாக ,என்னுடைய தகப்பனார் எனக்கு இந்த கதையயை கூறியிருந்தார்.அறம் பாடும் மரபில் தன்னுயிர் ஈந்து தமிழுக்கு நந்திக்கலம்பகம் என்னும் இலக்கியத்தை நந்தி வர்மன் தந்தான் என்பது வரலாறு.

தன் இறுதிக் காலம் வரை எழுத்தாணியாலேயே எல்லாவற்றையும் எழுதினார்.எனக்கு ஓலையில் எப்படி எழுத்தாணியால் எழுதுவது என்பதையும் ஏடு படிப்பதையும் கற்றுத்தந்தவர்.எங்களுர் எழுத்தச்சன் அவர்.

சம்பூர் பத்திரகாளி மேலான காவியம்,சம்புக்களி பத்தினியம்மன் மேலான காவியம் சேனையூர் வர்ணகுலப்பிள்ளையார் ஊஞ்சலென்பன  இவர் படைப்புகளில் குறிப்பிடத்தக்கன.பல நூல்களை அவர் ஏட்டு வடிவில் எழுதி வைத்திருந்தார்.ஆனால் அவர் சேமித்து வைத்திருந்த பழந்தமிழ் ஏடுகளும் ,மந்திர ஏடுகளும் அவர் ஆக்கங்களும் யுத்த வெள்ளம் காவு  கொண்டு விட்டது.நாம் காப்பார்ற முடியாதவர்களானோம்.

வித்தகர் என்று சொல்வதற்கு எல்லாத் தகுதிகளும் பெற்றவர்.பரியாரியார்,பூசாரியார்,புலவர்,நல்ல குரல் வளம் மிக்க பாடகர் ,நடிகர் என பல பரிமாணங்கள் கொண்டவர்.சம்புக்களி பத்தினி அம்மன் வேள்வியில் அவர் குளிர்த்தி பாடும் அழகே தனி.அவர் பாடிய அந்த இசை மரபை வைத்துக் கொண்டெ கிழக்குப் பல்கலைக் கழகத்தில் நான் பணியாற்றிய போதுகண்ணகி குளிர்த்தி என்ற நிகழ்வை பேராசிரியர்மெளனகுருவோடு இணைந்து வடிவமைத்தேன்.இன்னமும் அவர் பாடிய குளிர்த்தி இசை என் காதுகளில் .

சம்புக்களி பத்தினி அம்மன் ,சேனையூர் வீரபத்திரர் கோயில் ,சேனையூர் கும்பத்துமால் ஆகியவற்றின் பூசகராக சிறப்பாக பணியாற்றியவர்
மந்திரம் சொல்வதில் இவரை மிஞ்ச எவருமிலர் என்றே சொல்லலாம் .அவர் மொழியில் அழகாய் மந்திரங்கள் வந்து விழும்.ஊரில் எங்கு வீட்டு வேள்வி நடந்தாலும் இவரே பிரதான பூசகர்.

சம்பூர் பத்திரகாளிக்கு கோயில் கட்டி கும்பாபிசேகம் செய்வதற்கு முன்பு வருடந்தோறும் வேள்வி முறை சடங்கே நடை பெற்று வந்தது அவ் வேள்வியில் முன்னர் இவர் தகப்பனார் காளியப்பு அவர்கள் பங்கு பற்றி வந்தார் அவர் பின் இவரே அந்த உரிமை முறையில் பங்கு பற்றினார்.அங்கு வைக்கப் படும் மடைகளில் ஒன்று எங்கள் குடும்பத்துக்கு உரிமையாய் இருந்தமை இங்கு குறிப்பிடத் தக்கது.

நம் மண்ணுக்கே சொந்தமான பத்ததி முறை பரிகல வேள்வி முறை ஆகியவற்றிலும்  ,நம் மரபு சார்  சடங்கு முறைகளிலும் மிகுந்த ஞானம் உள்ளவராக அவர் விளங்கினார்.

ஆயுள் வேத வைத்திய முறையில் கொட்டியாரம் முழுவதும் புகழ் பெற்றவர் அவருடய தகப்பனார் விட்டுச் சென்ற இடத்தை தன் திறமையல் இட்டு நிரப்பியவர் எனலாம்.கொட்டியாரத்தின் எல்லைகளான கெவுளி முனை தொடக்கம் வெருகல் வரை இவர் வைத்தியம் புகழ் பெற்றிருந்தது.தம்பலகாமம் ஆலங்கேணி எனவும்  தன் வைத்தியத்தால் புகழ் பெற்றவர்.

புராண படனம் செய்வதில் கொட்டியாரத்தில் அவருக்கு நிகர் அவரே.வெருகல் சித்திரவேலயுதர் கோயில்,திருக்கரசையம்பதியில் ஆண்டு தோறும் நடைபெறும் திருக்கரசை புராண படிப்பு,சேனையூர் வர்ணகுல பிள்ளையார் கோயிலில் நடை பெறும் கந்த புராண படிப்பு ஆகியவற்றில் பயன் சொல்வதும் புராணம் படிப்பதும் அவர் அறிவின் அகட்சியின் அடையாளங்கள்.

அகடவிகடமாக பேசுவதிலும் கெட்டிக்காரர் இவர்.ஆங்கிலத்தில் sense of humour என்றுசொல்வார்களே  இவரிடம் இயல்பாகவே இருந்தது அதற்காகவே அவர் எங்கு சென்றாலும் அவரைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும்.

அவரை அவர் அகடவிகடத்தை பக்கத்திலிருந்து பார்த்து ரசித்தவன் நான்.எப்போதும் வேட்டியும் சால்வையுமே அவர் அங்க வஸ்த்திரம் சேட்டுப் போட்டதை நான் பார்த்ததில்லை.காதில் கடுக்கன் தலையில் குடுமி என மரபு மாறாமல் கடைசி வரை வாழ்ந்தவர்.

அவர் நம்மோடு இன்றில்லை நம்மை விட்டு மறைந்து முப்பது வருடங்கள் உருண்டோடி விட்டன் இந்த நூற்றாண்டு நினைவில் அவரோடு நாம் .என் அப்புச்சியின் அண்ணன் அவர்.என் பெரியப்பா நான் எப்போதும் பெரியையா என்றுதான் அழைப்பேன்.

Sunday, 14 August 2016

கடந்து வந்த அறுபது ஆண்டுகள்

கடந்து வந்த அறுபது ஆண்டுகள்


ஒரு மனிதனின் வாழ்வில் அறுபதாண்டுகள் என்பது மிக நீண்ட பயணம் பலருக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை.சேனையூர் எனும் சிறிய கிராமம் எல்லாளன் குளக்கோட்டன் என வரும் தொன்மங்கள் சுமந்த என் கிராமம் .அப்பா காளியப்பு பாலசிங்கம் அம்மா குமாரசாமி தெய்வநாயகம்

செல்வாக்குள்ள குடும்பத்தில் பிறந்தாலும் என் இளமைக் காலம் வசதிகள் அற்ற வாழ்வுதான்.
பல வேளைகளில் சாப்பாடு இல்லாமலேயே பள்ளிக்கூடம் போவேன்.இரவு உணவு மட்டும் கிடைக்கும் .ஒரு உடையயை  வைத்துக் கொண்டு பள்ளிகூடம் போன நாட்களதிகம் இவை எல்லாவற்றையும் தாண்டி பரிட்சைகளில் வெற்றி பெற்றேன் குடும்பம் எனக்கு உறுதுணையாய் இருந்தது.அம்மா அப்புச்சி சகோதரங்கள் என அன்பின் நீட்டசி.

படசாலையில் என் ஆசான்கள் கைதூக்கி விட்டார்கள் கல்வி கலை விளையாட்டு எல்லாவற்றிலும் நான் நானாக இருந்தேன்.பரிசுகள் பாராட்டுகள் நீண்டன
கிராமத்து வாசிகசாலை எனக்கு போதிமரமானது,வாசிப்பு எனக்கு வேதமானது.

பல்கலைக்கழக வாசல்கள் திறந்தன புகுந்தேன் புதியவற்றை கற்றேன் மாக்சியம் என்னை ஆதர்சித்தது இலங்கயின் புகழ் பூத்த அறிஞர்களின் நிழல் என்னில் பட்டது  கல்வியாளனாய் திரும்பினேன் .

அரச உத்தியோகம் விவசாய விரிவாக்க அதிகாரி ஆறுமாதங்கள்தான் அதன் பின் ஆசிரிய தொழில் பொலநறுவையில் பின்னர் சொந்த ஊர்நான் கல்வி கற்ற சேனையூர் மகாவித்தியாலயம். பிரதி அதிபராக இன்றய திருகோணமலை விபுலானந்தா வித்தியாலயத்தில்

1988.ல் காதல் திருமணம்  என் வாழ்க்கைத் துணையாக பிரமிளாவின் வரவு 1990ல் என் அழகு மகள் அனாமிகாவின்  உதயம்.

1992ல் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரயாளராக நுண்கலைத்துறையில்.துறைத்தலைவராக,பீடாதிபதியாக,இணைப்பாளராக பல வேளைகளில் பதில் உப வேந்தராக பணிகளை தொடர்ந்தேன்.

அரசியல் இளமையில் தமிழ் இளைஞர் பேரவை,ஈழவிடுதலை இயக்கம்(தமிழ் ஈழ விடுதலை இயக்கமல்ல)ஈழப் புரட்சியமைப்பு
இன்று ஒரு மாக்சியனாக தொடரும் பயணம்.

கலை இலக்கியம் முற்போக்கு முகம்  ஈழத் தமிழர்களின் தனித்துவமான இசை நடன உருவாக்கம் ஈழ நாட்டியத்தின் உருவாக்கம்.அனாமிகா பதிப்பகம் 24 நூல்கள்.

2004ல்  சுனாமியில் கரைந்து போன மகள் அனாமிகா நினைவுக் கடலாய் என்னுள் அவள்.2006ல் மகன் அனாமிர்தனின் அதிசய பிறப்பு
என் வாழ்வுக்கான பிடிப்பாய்.

2006ல் கடத்தப் பட்டு புலம் பெயர் தேசத்துக்கு தூக்கியெறியப் பட்ட துயரம்.வேரிலிருந்து புடுங்கி எறியப் பட்டேன்.சவால்கள் நிறைந்த வாழ்வு.ஒட்டவில்லை ஓடவும் முடியவில்லை மிச்சமென்ன மீதி...........

என் பிறந்த நாளை உறவுகளும் ஊரவரும் என் நண்பர்களும் மாணவர்களும் சேர்ந்து கொண்டாடினர் மகிழ்வின் தருணங்கள்
.
 முகமறியா முக நூல் தோழமைகள் வாழ்த்து சொன்னார்கள் எத்தனை மகிழ்ச்சி.நெருங்கிய உறவுகள் பலரின் வாழ்த்தும் வருகையும் நண்பர்களின் அன்பும் என் வீட்டை விழாக் கோலமாக்கியிருந்தது.

என் ஆசான்கள்,மாணவர்கள்,தோழர்கள் நண்பர்கள் என வாழ்த்துக்கள் என்னை உற்சாகத்தில் ஒய்யாரமிட வைத்தன.வாழி நீவிர்.....


ஆனாலும் சின்ன நெருடல் சில நெருங்கிய உறவுகளின் வாழ்த்து வரவில்லை.....


காதல் அற்புதமானது

காதல் அற்புதமானது.............
எனிலிருந்து நீ......
உன்னிலிருந்து  நான்.....
கனவிடை தோய்தலும்
நனவிடை வாழ்தலும்...
இடை இடை ஊடலும்
பொய்யல......

மெய்யும் பொய்யும்
புனைவும் புணர்தலின்
நிமித்தமும் ....
வாழ்வதே.....காதல்

மாதங்களில் இவள் மார்கழி

மாதங்களில் இவள் மார்கழி                                                                                உணர்வுகளால் நினைவெழுதி.....................................................................      என் செல்ல மகளே உன் நினைவுகளில் ஒரு தசாப்தம்கடந்து போயிற்று.உலகம் எத்தனையோ மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு உயரப் பறக்கிறது.ஆனால் என் எண்ணங்கள் சிந்தனைகள் உன் நினைவுகளாலேயே நிரம்பி வழிகிறது.                                                      நீ....புன்னகைத்தபடி இருக்கும் புகைப்படத்தை பல்லாயிரம் தடவை நான் பார்த்துப் .....பார்த்து......மீண்டும் ...மீண்டும் பல கோணங்களில் மீள்..பிரதியாக்கம் செய்கிறேன் ..என் உயிர் மூச்சாய்...உணர்வொளியாய்...என்னுள்  ........எபோதும் ...புன்னகைத்தபடி...நீ..........அனாமிர்தன் உன் தம்பி இபோதெல்லாம் அடிக்கடி உன்னைப்பற்றி விசாரிக்கிறான்.அக்கா இருந்திருக்க வேண்டும் என்ற ஏக்கம் அவனுக்கு.நீ இருக்கும் பொழுது உனக்கொரு தம்பிக்காக ஏங்கினாய்.ஒன்றிருக ஒன்று அதுதான் இயற்கையோ?யதார்த்தமோ?தெரியாது.வாழ்க்கை வட்டம் அப்படித்தான் சுழல்கிறது.வாழ்க்கை பற்றி நீ எழுப்பிய கேள்விகள் இன்னமும் அப்படியே உள்ளன.எந்தப் புனிதர்களிடமிருந்தும் அதற்கான பதில் இல்லை.''வாழ்க்கை வாழ்க்கையென்றால் என்ன ஏன் பிறக்கிறொம் ஏன் இறக்கிறொம் எப்போது இறப்போம் கருவுக்குள் இருக்கும் குழந்தை ஏன் இறக்கிறது...........''இப்படி நீண்டு செல்கிறது உன் கேள்விகள்.          கனவுகளில் நீ வருகிறாய்...என்னோடு பேசுகிறாய்..இரவுகள் விடிகிற போது...நிஜம் உறைக்கிறது.நிஜமெது கனவெது என எனக்குள்ளாகவே கேள்விகளை கேட்டு புதைந்து போகிறேன்.கனவுக்கும்நிஜத்துக்குமான போராட்டம் தொடர்கிறது........எங்கோ ..இருந்து உன் குரலொலிப்பதாக உணர்கிறேன்.இந்த காற்றில் தானே...உன் ஒலியும் மூச்சும் இசையும் கலந்து உரசிக் கொண்டிருக்கிறது.                                              வா......வா ....மீண்டும் வந்து விடு...நான் தொலைத்த சந்தோசங்களை திருப்பி தந்து விடு..இறந்தவர்கள் ஒரு தசாப்தத்தின் முடிவில் வருவார்கள் என இயற்கை எழுதியிருந்தால் அந்த  நாள் எப்படியிருக்கும் என என் கற்பனைக் குதிரை தறி கெட்டுப் பாய்கிறது.மகளே ....வருவாயா....................மகளே என் ஏக்க மூச்சுக்களுக்கு  விடை கிடையாது என எனக்கு தெரியும்...  வாழ்வின் வாசல்கள் தோறும் உன் நினைவுகளால் நான் கரைந்து போகிறேன்கடைசியாய் என்னைப் பார்து கையசைத்து  காரில் ஏறிய காட்சி அழியா விழியாய் ஊழித் துயரத்தை உரக்க சொல்கிறது ...நியும் நானும் கடலையும் கரையயும் எவ்வளவு ரசித்திருபோம் ...இப்போதெல்லாம் நான்கடலை ரசிப்பதில்லை... அலைகளை ஆதர்சிப்பதில்லை ....ஊர்களை அடித்து குடிக்கும் ஊழிப் பூதமாகவே பார்க்கிறேன். .......மாமாங்க திர்த்த கரைஉன் உயிர் குடித்து உடல் தொட்டு புனிதமான மாதம் மார்கழி......புனிதங்கள்  உடைபட்ட மாதமும் இதுதான் .......அன்றய நாளில்ஆயிரமாயிரம் கேள்விகளோடு அலைந்தார்கள் மனிதர்கள்.விளக்கம் சொல்ல யாரும் இல்லை..எந்த வேதாந்தமும் விடை காண முடியா  நாள் அது.திரும்பிய திசையெங்கும் செத்தழிந்த உடல்கள்.ஓடிய இடமெல்லாம் ஒப்பாரி ஓசை.மரணத்தின் வாசம் நகரம் முழுவதும் பரவிக் கிடந்த நாள் அது .மகளே.... .......உன் இனிய நினைவுகளை சுமந்து கொண்டு உலகம் முழுவதும் அலைகிறேன்

பன்முக ஆற்றல் கொண்ட அசாத்திய படைப்பாளி அருள் செல்வநாயகம்(1926-1973)

பன்முக ஆற்றல் கொண்ட அசாத்திய படைப்பாளி
அருள் செல்வநாயகம்(1926-1973)

ஈழத்தமிழ் இலக்கிய பரப்பில்  பன்முக ஆற்றல் மிகு எழுத்தாளனாய் சாதனை படைத்தவர் குருமண் வெளியூர் அருள் செல்வநாயகம் அவர்கள்.
விபுலாந்தர் பால் மிகுந்த ஈடு பாடு கொண்டு நிறுவன மைய்யப் பட்டு செய்ய வேண்டிய வேலையயை  தனியொருவனாக நின்று செய்து முடித்தவர்.விபுலானந்தர் படைப்புகளை தேடி தமிழகம் சென்று பெறற்கரிய தகவல்களுடன் அவர் படைப்புகளை தேடி கண்டடைந்து பதிப்பித்து,தமிழ் ஆராச்சி உலகுக்குக்கு  பெருமை சேர்த்தவர் அருள் செல்வநாயகம்.
1982ல் விபுலானந்தர் நூற்றாண்டு கொண்டாடப் பட்ட போதுதான் விபுலானந்தரைப் பற்றி பலர் பேசத்தொடங்கினர்.ஆனால் அதற்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே விபுலானந்தரை அவர் சாதனைகளை தமிழ் கூறும் நல்லுலகுக்கு கொண்டு வந்து சேர்த்தவர் .பின் வந்தவர்கள் விபுலானந்தர் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள இவரது தொகுப்புகளே அடிப்படையாய் அமந்தன.ஒரு பல்ககலைக் கழகம் செய்ய வேண்டிய வேலையயை தன் தூரநோக்கு கொண்ட சிந்தனையாலும் விபுலானந்தர் மேல் கொண்ட அளவிடமுடியா பற்றலும் செய்து முடித்தவர் அருள் செல்வநாயகம் அவர்கள்.
விபுலானந்தர் பற்றிய இவர் வெளியீடுகள்
1)விபுலானந்த அடிகள்
2) விபுலானந்த அமுதம்
3)விபுலனந்த தேன்
4) விபுலானந்த வெள்ளம்
5) விபுலானந்த கவிதைகள்
6)விபுலானந்த  செல்வம்
7) விபுலானந்த ஆராய்வு
8) விபுலானந்த கவிமலர்
9)விபுலானந்த சொல்வளம்
10)விபுலானந்த இன்பம்
இவற்றில் பல இலங்கை கல்வித் திணைக்களத்தால் பாடப் புத்தகங்களாக  அங்கிகரித்துள்ளன..
இவற்றை விட இவரது வெளிவந்த நூல்கள்

சிறுகதைத் தொகுதிகள்

1)ஈழநாட்டு வரலாற்று கதைகள்
2)தாம்பூலராணி

நாவல்கள்

1)வாழமுடியாதவன்
2)பாசக்குரல்
3)சூரியகாந்தி
4)மர்மமாளிகை

ஆராய்ச்சிகள்

1)நறுமலர் மாலை
2)ஈழமும் தமிழரும்
3)சீர்பாதம்

கிராமிய இலக்கியம்

1)சதாராம்
2)பூசணியாள்
3)பாஞ்சாலி சுயம்வரம்

நாடகம்

1)உயிர் ஈந்த ஓவியம்

கூத்து

1)பணக்காரன்
2)ஏர்முனை வேலன்(இவை நவீன கூத்துக்கள் இவை கூத்து மீளுருவாக்க பிரதிகள்)

இவை வெளிவந்த நூல்கள் இவற்றை விட இவர் பத்திரிககள் சஞ்சிககள் வானொலி  என்பவற்றுக்கு எழுதிய கட்டுரைகளும் கதகளும் நாடகங்களும் பல நூறு.

நார்பத்தியேழு ஆண்டுகளே மண்ணில் வாழ்ந்த இப்பெருமகன்  தமிழ் இலக்கிய உலகின் சாதனை மன்னன் என்றே வர்ணிக்கலாம்.கிழக்கின் தவப் புதல்வர்களில் ஒருவராக கொண்டாடப் பட வேண்டியவர் ''இலக்கிய வித்தகர் ''அருள் செல்வநாயகம் அவர்கள்

இலக்கிய கலாநிதி வ.அ.இராசரெத்தினம்


இலக்கிய கலாநிதி
வ.அ.இராசரெத்தினம்
என் தமிழ் ஆசான் என்னை தன் இலக்கிய வாரிசாக அறித்தவர்.எனக்கு தமிழின் மீது ஆர்வத்தையும் ,தமிழ் இலக்கியத்தின் மீது காதலையும் ஏற்படுத்தியவர்.2005ல் கிழக்குப் பல்கலைக் கழகம் இலக்கிய கலநிதி பட்டம் வழங்கி தன்னை பெருமைப் படுத்திக் கொண்டது.இன்று அவர் 15வது வருட நினைவு நாள்.
ஈழத்து நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் முதன்மையானவர்.நாவல் ,சிறுகதை,நாடகம் ,விமர்சனம் என எல்லா துறைகளிலும் தன் முத்திரையயை பதித்தவர்.
அவர் பற்றிய ஒரு பதிவு
வ.அ.இராசரத்தினம்
வ. அ. என அறியப்படும் வ. அ. இராசரத்தினம் புகழ் பெற்ற ஈழத்து சிறுகதை எழுத்தாளர். நாவல் எழுத்தாளர். ஈழத்தின் மூத்த எழுத்தாளர்.
1940கள் முதல் எழுதி வரும் இராசரத்தினம் பலநூறு கதைகள் படைத்திருக்கிறார். அவருடைய முதல் கதைத் தொகுதியின் மகுடக்கதையான 'தோணி'யே மிகுந்த கவனிப்பையும் பரவலான வரவேற்பையும் பெற்றது. அநேக தொகுப்புகளில் அது இடம்பெற்றிருக்கிறது.
அவருடைய ஆரம்பக் கதைகளுள் ஒன்றான 'தோணி'யிலேயே அவரது எழுத்தாற்றலும், வாழ்க்கை பற்றிய கண்ணோட்டமும் யதார்த்த நோக்கும், முற்போக்குச் சிந்தனையும் மனித நேயமும், நம்பிக்கை மனோபாவமும் புலனாயின.
கடலில் சென்று மீன் பிடித்து வாழ்க்கை நடத்தும் மீனவன் நித்திய வறுமையிலேயே வாழ வேண்டியிருக்கிறது. காரணம், தோணி அவனுக்கு சொந்தமில்லை. இளைய மீனவன் ஒருவன், சொந்தத் தோணிக்காக ஆசைப்படுகிறான். சொந்தமாகத் தோணி வந்த பிறகே கல்யாணம் செய்து கொள்வது என்று உறுதிபூணுகிறான். அவன் ஆசை நிறைவேறுவதாயில்லை. 'உலகில் உழைப்பவனுக்கு எதுவும் சொந்தமில்லை' என்பதை உணர்கிற அவன், தான் காதலித்த பெண் சுகமாக வாழட்டும் என்ற உயர்ந்த நோக்குடன் சொந்தத் தோணி உடைய ஒருவனுக்கு அவளை மணம் முடித்து வைக்கிறான்.
'இன்னமும் தோணி எனக்குக் கனவுப் பொருளாகத்தான் இருக்கின்றது. அதனாலென்ன? உயர்ந்த கனவு செயல்மிக்க நனவின் ஆரம்பம்தான். எப்போதாவது ஒரு நாளைக்குக் காலம் மாறத்தான் போகிறது. அன்றைக்கு எனக்கு மட்டுமல்ல. என் நண்பர்கள் எல்லோருக்குமே சொந்தத் தோணி இருக்கும். எங்கள் தோணிகள் சப்த சமுத்திரங்களிலும் சுதந்திரமாகச் சென்று மீன் பிடிக்கும். அந்த மீன்களை சந்தையில் பகிரங்கமாக விற்போம். விற்ற பணத்திற்குச் சந்தையில் அரிசி வாங்குவோம். அரிசி வாங்கும் பணம் என்னைப் போன்ற உழைப்பாளியான ஒருவனுக்கு நேரடியாகக் கிடைக்கும். அப்போது உழவனுக்கு நிலமும் சொந்தமாக இருக்கும் அல்லவா?' இதுவே அந்த மீனவனின் எண்ண ஓட்டமாக இருக்கிறது.
கலை அழகுடன் யதார்த்த வாழ்வை சித்திரிக்கும் நல்ல கதை 'தோணி'. இப்படிப்பட்ட வாழ்க்கைச் சித்திரங்கள் பலவற்றை நயமான கதைகளாக உருவாக்கியிருக்கிறார் இராசரத்தினம்.
இராசரத்தினம் ஆசியராகப் பணிபுரிந்து அனுபவங்கள் பெற்றவர். அதனால் பலவித இயல்புகளும் நோக்கும் போக்கும் உடைய ஆசிரியர்களை கதை மாந்தராக்க் கொண்டு பெரும்பாலான கதைகளை எழுதியிருக்கிறார். ஆசிரியர்களது பிரச்சினைகள், வாழ்க்கைச் சிக்கல்கள், குழப்பங்கள், நம்பிக்கைகள், நிலைமைகள் முதலிய பல விஷயங்களை இக்கதைகள் விவரிக்கின்றன.
வேதக் கோயில் மணி, வருடப்பிறப்பு, வருடப் பிறப்பை ஒட்டிக் கொண்டாடப்படுகிற சில நிகழ்ச்சிகள் முதலியன சில கதைகளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றில் 'கோயில் மணி ஓசை' 'நத்தார் ஓலம்' ஆகியவை விசேஷமாகக் குறிப்பிடப்பட வேண்டியவை.
தனது மனைவி இறந்ததும் அவர் அனுபவித்த உணர்வுகளையும், அவரது மனநிலையையும் உணர்ச்சிகரமான சொற்சித்திரமாக இராசரத்தினம் எழுதியிருக்கிறார். அதுதான் 'ஒரு காவியம் நிறைவு பெறுகிறது.' சுய சோக அனுபவங்களை உருக்கமாக எடுத்துக் கூறும் இக்கதை வாசகரின் உள்ளத்தைத் தொடும் விதத்தில் அமைந்துள்ளது.
பிறப்பு - 5-6-1925 மூதூர், திருக்கோணமலை.
தாய் - அந்தோனியா
தந்தை - வஸ்தியாம்பிள்ளை
கல்வி -
தாமரைவில் றோமன் கத்தோலிக்க பாடசாலை.
மூதூர் புனித அந்தோனியார் பாடசாலை.
ஆசிரியர் பயிற்சி - மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை.
பணி - ஆசிரியர்
எழுதத் தொடங்கியது - 1946
திருமணம் - 1952 துணைவி - மேரி லில்லி திரேசா
புனைபெயர்கள் -
ஈழநாகன்
கீழக்கரை தேவநேயப் பாவாணர்
வியாகேச தேசிகர்.
இவரது நூல்கள்
துறைக்காரன் (நாவல்)
கொழுகொம்பு (நாவல்)
கிரௌஞ்சப் பறவைகள் (நாவல்)
ஒரு காவியம் நிறைவு பெறுகிறது (சிறுகதைத் தொகுதி)
ஒரு வெண்மணற் கிராமம் காத்துக் கொண்டிருக்கின்றது (நாவல்)
தோணி (சிறுகதைத் தொகுதி)
பூவரசம் பூ (மொழிபெயர்ப்புக் கவிதை)
மூதூர் புனித அந்தோனியார் கோயிலின் பூர்வீக வரலாறு (சரித்திரம்)
இலக்கிய நினைவுகள் (நினைவுக் கட்டுரைகள்), 1995
வ.அ.இராசரத்தினம்
திரிகூடம்
மூதூர்
ஒரு காவியம் நிறைவுபெறுகின்றது
1. அறுவடை 25
2. பங்கம் 31
3. கோயில் மணி ஓசை 33
4. தோணி 48
5. வென்றிலன் என்ற போதும் 62
6. தோழருக்குத் தெரியாதது 68
7. தலாக் 76
8. அபேதவாதி 84
9. கடலின் அக்கரை போனோரே 92
10. 1+1=1; 1-1=2 100
11. அவசரம் 112
12. நத்தார் ஓலம் 120
13. ஆண்மகள் 127
14. ஓரு தெய்வம் ஆசி வழங்குகிறது 142
15. இரசிகன் 155
16. கலைஞன் துயர் 163
17. தவம் 169
18. உண்ணி 175
19. பிரிபுபசாரம் 178
20. ஒரு பூனைக்கதை 186
21. ஜ“ப்புகள் ஓடிக் கொண்டிருக்கின்றன 188
22. ஒரு காவியம் நிறைவு பெறுகிறது 194
23. சுமை 236
24. பொய் முகங்கள் 246
25. சரிவு 254
26. தர்மம் 261
27. குதிரை 265
28. போர்ப்பறை 272
29. மதிப்பு 280
30. காந்தரி 283
31. பாசம் 288
32. வலை 296
33. வேர்கள் 302
34. மீண்டும் காந்தி பிறப்பார் 310
35. குழப்பம் 320
36. குடிமகன் 328
37. a+a=2a ஆயின்
கதை+கதை= இரண்டு கதைகடல்ல 336
38. மறைப்பு 349
39. தகரவிளக்கு 356
40. பாலை 362
41. தையலக்கா 385
42. வாழ்க சுதந்திரம் 393
43. பிரிவு 395
44. பெண் 404
45. பிறந்த மண் 407
47. ஈட்டிக்காரன் 418
46. பெண்ணியம் 424
48. ஓர் ஆலமரத்தின் கதை 428
49. மனிதன் 439
50 கனி 446
வாழ்வாதாரத்துக்கென ஒரு ஆசிரியனாகவும், வாழ்வின் உன்னததுக்காய் எழுத்தாளனாகவும், வாழ்ந்த ஒரு கலைஞன் வ.அ.இராசரத்தினம். எழுத்தாளனின் படைப்புக்களை, அச்சில் வடிக்கும் அவஸ்த்தையின் தன்மைபுரிந்ததினால் அவரும் மனைவியும் இனைந்து, ஒரு பதிப்பகத்தையும் நடத்தினார்கள்.
தீர்தக்கரை:-
ஆடிஅமாவாசைக்கு முந்தையதினம், மகாவலி நதி, திருமலைக்கடலில் கலக்கும் கங்கைத்துறையில், (இது உப்பாறுக்கும், மூதூருக்கும் இடையில் உள்ள கழிமுகம்) கொட்டியாரக்குடாவின் பல பகுதிகளிலும், இருந்து மக்கள் மாட்டுவண்டில்களில், குடும்பம் குடும்பமாக வந்து கூடுவார்கள். அன்று மாலை தம்பலகாமம் கோணேஸ்வரர் கோவிலில் இருந்து வரும் பூஜை விக்கிரகமும், கோவில் பணியாளர்களும் வந்து, வழிபாடுகளை ஆரம்பிப்பார்கள். வழிபாட்டின் தொடர்ச்சியாக திருக்கரைசேர் புராணம் விடிய விடியப் படிக்கப்படும். காலையில் விக்கிரகத்துடன் சென்று கடலும், கங்கையும், கலக்குமிடத்தில் ஆடிஅமாவாசைத்தீர்த்தம் ஆடுவார்கள். இதனால் அந்தக்கழிமுகத்துக்கு தீர்த்தகரை என்ற பெயரும் உண்டு.
தீர்த்தக்கரையின் மற்றொருபுறத்தில், கலைநிகழ்ச்சிகள் பலவும் விடிய விடிய நடைபெறும். இந்தத் தீர்த்தக் கரையில், தன் எழுத்துக்களை அச்சாக வெளியீடு செய்யும் ஒரு எழுத்தாளனின் அவஸ்த்தையை அற்புதமாகச் சொல்லும் கதைதான் தீர்த்தக்கரை. எழுத்தாளன், தன்மனைவியின் கைவளையல்களை அடகுவைத்து, எழுத்துக்களை அச்சாக்குவது முதல், அதை வெளியிடுவது, வெளியீட்டின் பின் கைவளையல்களை மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கை, நடைமுறையில் அது பொய்துவிடுவது, ஏனையோரின் ஏளனம், என்பவற்றை சராசரிக் கதாபாத்pரங்களைக்கொண்டு, சாதாரண மனிதர்களின் உரையாடலில அற்புதமாக வடித்திருந்தார்.
ஒரு காவியம் நிறைவேறுகிறது :-
இது ஒரு நெடுங்கதை அல்லது குறுநாவல். முதலில் வீரகேசரி பத்திரிகையிலும், பின்னர் வீரகேசரிப்பிரசுரமாகவும் வந்தது. இராசரத்தினத்தின் மனைவி ராணி மரணமடைந்தபோது நடைபெறும் நிகழ்வுகழும், அவரகளிருவரின் வாழ்வியல் சம்பவங்களும், மாறிமாறி கவிதைப்படிமங்கள் போல இயல்பாகத் தொகுக்கப்பட்ட அருமையான கதை. இல்லையில்லை உண்மையில் அது ஒரு காவியம்தான். கருத்தொருமித்த ஒரு கணவன் மனைவியின் வாழ்க்கையின் ரசனை மிக்கப் பதிவு அது. இதுவரையில், கணவன் மனையருக்கிடையிலான அப்படியொரு காதலின் வெளிப்பாட்டை எழுத்தில் காணவில்லை என்றே சொல்ல வேண்டும். அவ்வளவு உணர்ச்சிபூர்வமானது. காதல் நினைவான தாஜ்மஹாலைப் போன்ற மற்றுமொரு காதல் நினைவுதான் ஒரு காவியம் நிறைவேறுகிறது.
இத்தகைய உணர்வு பூர்வமான எழுத்துக்குச் சொந்தக்காறனான அந்தக் கலைஞனை மறந்திடலாமோ? மூதூர் மண் தந்த, அந்த முத்தான அந்தக் கலைஞனின் படைப்புக்கள் எந்த வடிவில் இருந்தாலும், அதைப் பதிவு செய்ய உதவுங்கள். அவர் வாழ்வு சராசரியானதா இருந்திருக்கலாம். ஆனால் அவர் எழுத்துச் சாதாரணமானது அல்ல, அது சாதனையானது

உலகத் தாய்மொழி நாள்

உலகத் தாய்மொழி நாள்
நமது மொழி தமிழ் ஆனாலும் அது இடத்துக்கு இடம் கிரமத்துக்கு கிராமம் தனித்துவமான பண்புகளை கொண்டுள்ளது.
தமிழ் நாட்டில் ஈழத் தமிழ் என்றதும் அடையாளப் படுத்தப் படுவது ,யாழ்ப்பாணத் தமிழே.
மட்டக் களப்பு தமிழ் அதன் புழங்கு நிலை , மக்கள் வாழ்வியல் சார்ந்து மாறுபாடடைகிறது.
திருகோணமலைத் தமிழ் அதிலும் குறிப்பாக மூதூர் கிராமங்கள் ஒவ்வொன்றும் தமக்கான பேச்சு முறைகளை கொண்டுள்ளன.சேனையூர் சம்பூர் பள்ளிக்குடியிருப்பு மல்லிகைத்தீவு கிளிவெட்டி என அடையாளம் காண முடியும்.
மூதூர் நகரத்து கிறிஸ்த்தவர்கள் வழக்கு வித்தியாசப்படும்.
மூதூர் முஸ்லிம்கள் பேச்சு வழக்கும் ஏனைய முஸ்லிகளின் பேச்சிலிருந்து வேறு பட்டதே.
கொட்டியாரப் பிரதேசத்தின் கவனிக்கப் படத்தக்க பிரிவினராக விழங்கும் பூர்வ குடிகளான வேடுவர்களுடைய தமிழ் சில தனித்துவமான சொல்லாட்சிகளுடன் பயன்பாட்டில் உள்ளது. தாய் மொழி என்பது வித்தியாசங்களினூடு பொதுமைப் படுகிறது.