Friday, 26 May 2023

பேரரறிஞர் ,பேராசிரியர் க.கைலாசபதி

 


பேரரறிஞர் ,பேராசிரியர் க.கைலாசபதி 

90 ஆவது பிறந்த நாள்

இன்று 05.04.2023 பேராசிரியர் கைலாசபதியின் தொண்ணூறாவது பிறந்த நாள் .

தமிழ்  கலை இலக்கிய உலகில் புதிய விமர்சன மரபின் தொடக்கமாய் ,முன் எப்போதும் இல்லாத வகையிலான அறிவு பூர்வமான பார்வையயை கலை இலக்கியங்கள் மீது காத்திரமான திறனாய்வு தளத்தில் சமரசமில்லாத முற்போக்கு பேராளுமை எங்கள் கைலாசபதி எனும் பேராசான்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உருவாக்கம் அதன் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர் 1974 ஆம் ஆண்டு முதல் வளாகத் தலைவராக பொறுப்பேற்று 1977 வரை கடமையாற்றி பல்கலைகழகம் எதிர்காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என திட்டமிட்டு அதற்கான வேலைத் திட்டங்களுக்கு அடித்தளம் இட்டு அதன் வழியில் செயல்பட்டவர்.

1977 முதல் 1982 இறக்கும் வரை யாழ் பல்கலைக்கழக தமிழ்த் துறை தலைவராக ,கலைப் புல முதல்வராக பணியாற்றி தமிழ் சமூகத்தின் அறிவுப் புல வழிகாட்டியாய் வாழ்ந்து மறைந்த எங்கள் பேராசான்.

அவர் வாழ்ந்தது என்னவோ வெறும் நாற்பத்தி ஒன்பது ஆண்டுகள் ஆனால் இன்னும் நாற்பத்தி ஒன்பதாயிரம் வருடங்கள் கடந்தாலும் ,அழியாத பெரும் தடத்தை உருவாக்கிச் சென்றுள்ளார்.

சங்க இலக்கியங்கள் முதல் நாவல்,சிறுகதை,நாடகம் ,கூத்து என எல்லா வகையிலான செல் நெறிகளிலும் புதிய ஒளி பாச்சியவர் எங்கள் பேரறிஞர் கைலாசபதி அவர்கள்.

பத்திரிகைத் துறை ,அரசியல் என சமூக இயங்கியலில் முற்போக்கு முகமாய் செயல்பட்டு பல நூறு தோழமைகளை வழிப்படுத்தி சென்றவர் எங்கள் பேராளுமை பேராசிரியர் கைலாசபதி அவர்கள்.

கைலாசபதி சிந்தனைப் பள்ளி அவர் எழுத்துக்களின் வழி உருவாகியுள்ளது.உலகப் பேரறிஞர்களில் ஒருவராக நாம் அவரைக் கொண்டாட வேண்டும் 


கால் மாக்ஸ் -205

 


கால் மாக்ஸ் -205

கால் மாக்ஸ் பிறந்து 205 ஆண்டுகள் 

உலக வரலாற்றில் மாக்சின் பிறப்பு என்பது மனித விடுதலைக்கான திறவு கோல் என்பேன் நான் 

உலகம் முழுவதும் பேரரசுகளும் அவற்றின் ஏகாதிபத்திய சுரண்டல்களும் அதிகரித்த ஒரு கால்கட்டத்திலேயே மாக்ச் பிறந்தார்.

கொடுங்கோன்மையும் அடிமைத்தனமும் மனிதனை மனிதன் சுரண்டி ஏப்பம் விடும் நாட்கள் அவை.

தனி மனித சுதந்திரம் காட்டாட்சிகளால் கொடூர முகம் கொண்டு முதலாளித்துவத்தின் கோரப் பிடியில் தத்தளித்து விடுதலைக்காக ஏக்கம் கொண்ட உலகின் தேவையை நிறைவு செய்யும் வகையில் மாக்சிய தத்துவம் மக்களுக்கானதாய் உருவானது.

கடவுளின் பெயராலும் கடவுளர்களாகவே தங்களை உருவகப் படுத்திக் கொண்ட ஆட்சியாளர்களின் பெயராலும் ஆண்டான் அடிமை சமூகமாக உலகம் வழி தெரியாமல் தடுமாறிய ஒரு காலத்தின் தேவையாய் மாக்சியத் தத்துவம் உருவானது.

மக்களுக்கான தத்துவமாய் முதலாளித்துவம் இருக்கும் வரை மாக்சியத்தின் தேவை இருந்து கொண்டே இருக்கும் .

மாக்ஸ் நம்மோடு இருப்பார்


மரபுகள் மாறும்

 மரபுகள் மாறும்


புதிய மரபுகள் உருவாகும்

காலம் நமக்களித்த கொடை

மாற்றம் எதுவுமின்றி

எதுவும் தொடர்ந்ததில்லை

அம்மணமாய் திரிந்தவர்கள்

ஆடை உடுத்து

புதிய மரபை உருவாக்கினர்

அலங்காரங்களும் அழகியலும்

தொடர்ந்தன

ஊமை மொழியிலிருந்து

உருவ மொழி உருவானது

கோட்டெழுத்துக்களிலிருந்து

அந்தந்த இடம் அமைவியல் சார்ந்து

தனித் தனியாய் எழுத்துப் பண்பாடு

உருவாகி உயர்ந்தது

வாய்மொழி இலக்கியங்களிலிருந்து

அடுத்த கட்டமாய்

எழுத்திலக்கியங்கள் உருப் பெற்று

காவியங்களாகி 

கலைத்துவ மொழியாய் உயர்ந்தன

வேட்டையாடும் போலச் செய்தலிலிருந்து

கலைகளின் ஊற்று களி நடம் கொண்டது

ஆடல் மொழி உருவானது

காலம் தந்த மாற்றங்கள் 

உள்வாங்கப்பட்டு தொடரும் நீட்சியில்

சங்க காலத் தமிழ் கூத்து

இன்றில்லை ஆனாலும் 

அதன் தொடர்ச்சியின் நீட்சியில்

தமிழகத் தெருக் கூத்தும்

அதன் வழி நீண்ட கூத்து மரபுகள்

மாற்றங்களினூடு உயிர் கொள்கின்றன

மாதவி ஆடிய ஆதே தமிழ் ஆடல் 

மரபு இன்றில்லை ஆனாலும்

அதன் தொடர்ச்சியில்

தமிழ் ஆடல் மரபு நீள்கிறது

தாசியாட்ட மரபாய்

சதிராட்ட மொழியாய் 

ஈழக் கூத்தும் அப்படித்தான் தன்

மூலக் கூறுகளிலிருந்து 

மாறுபட்டு மரபின் தொடர்ச்சியாய்

கால மாற்றங்களை உள் வாங்கி

உடையில் ஒப்பனையில்

ஆடலில் பாடலில் அசைவில்

புதிய மாற்றங்களுடன் பயணிக்கிறது

கச்சை கட்டினவன் இன்றும்

கச்சைதான் கட்ட வேண்டும்

எனும் வரட்டு வாதங்கள்

காலத்தை புறம் தள்ளும்

பிற்போக்கு சகதியுள்

அமிழ்ந்து போகும்

அவரவர் வழிகளில்

அவரவர் பயணம்


நூற்றாண்டு விழா பேராசிரியர்.சு.வித்தியானந்தன்


நூற்றாண்டு விழா 

பேராசிரியர்.சு.வித்தியானந்தன்

08.05.1924-08.052023

பேராசிரியர்.சு.வித்தியானந்தன் அவர்களின் பிறந்த நாள் இன்று.நூறாவது ஆண்டின் தொடக்கம்.

தமிழ்கூறும் நல்லுலகம் மகிழ்வுறுத்தி கொண்டாட வேண்டிய தமிழியல் ஆளுமையாளர் எங்கள் வித்தி.

தமிழ் ஆராய்ச்சி,தமிழ் கலைகள் பற்றிப் பேசுகின்றபோது வித்தியரை நினைவுறுத்தாமல் கடந்து போக முடியாது.

குறிப்பாக ஈழத்துக் கலைகளின் தனித்துவத்தை முதன் முதல் வெளியுலகுக்கு கொண்டு வந்தவர்களில் முதன்மையானவராக நாம் பேராசிரியர் வித்தியானந்தன் என்பதை மறந்து விட முடியாது.

தமிழகத்திலிருந்து வேறுபட்டு தனித்துவமான கலை மரபுகள் ஈழத் தமிழர்களுக்கு உண்டு என்பதையும் ஒரு சுயநிர்ணயமுள்ள தேசிய இனமாக ஈழத் தமிழர்கள் இறைமையுள்ளவர்கள் என்பதை அவர்களது கலை பாரம்பரியங்களின் தொடர்ச்சியை தொன்மையை கண்டுணர வழி சமைத்தவர் பேராசிரியர்.சு.வித்தியானந்தன் அவர்கள்.

ஈழத்தமிழர் இசை மரபு,நாடக மரபு,கூத்து மரபு என எல்லாவற்றிலும் செழுமையான தொடர்ச்சியை தனது செயல்பாடுகளால் நிருபித்து சென்றிருக்கிறார் பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்கள்.

ஈழத் தமிழர்களின் தேசிய கலை எழுச்சி கூத்துக்களின் புத்துயிர்ப்பு,நாட்டார் கலைகளின் அறிமுகம் என்பன தொடர்பாக அவற்றை ஆவணப் படுத்துதலிலும் அழிக்கை முறைகளினூடு அடுத்த சந்ததியினருக்கு கொண்டு சேர்ப்பதிலும் ஆய்வுலகில் விஞ்ஞான பூர்வமாக அறிவியல் மயப் படுத்துவதிலும் தன் காலத்தில் தமிழகத்துக்கும் முன்னோடியான செயல்பாடுகளின் மூலம் வழிகாட்டியவர் பேராசிரியர் சு .வித்தியானந்தன் அவர்கள்.

இன்று நாம் ஈழக் கூத்துகள் அதன் தொடர்ச்சி நீட்சி பற்றி பேசுகிறோம் என்றால் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள் அடிச்சுவட்டின் வழியாக என்பதை மறந்து விட முடியாது.கூத்தின் பரவலாக்கம் என்பது வித்தியானந்தன் வழியாக வசப் பட்டது என்றால் அது மிகையாகாது.

மட்டக்களப்புக் கூத்துக்கள்,யாழ்ப்பாணக் கூத்துக்கள்,மன்னார் கூத்துக்கள்,முல்லைத்தீவுக் கூத்துக்கள் என எல்லாப் பிரதேச வழக்காறுகளையும் உள் வாங்கிச் செயல்பட்டவர் பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்கள்.

இலங்கைக் கலைக்கழக தமிழ்ப் பிரிவுத் தலைவராக இருந்த போது அவர் மேற் கொண்ட கலைப் பணியும் பயணங்களும் ஈழத் தமிழர்களது கலை வரலாற்றில் மறுக்கப் பட முடியாதது.

உலகத் தமிழாராய்ச்சி மண்றத் இலங்கைக் கிளைத் தலைவராக அவர் இருந்த காலை நாடாத்திய பிராந்திய தமிழாராய்ச்சி மகாநாடுகள் தமிழ் ஆய்வுலகின் புதிய வாசல்களை திறந்து விட்டமையை நாம் மறந்து விட முடியாது.அது போலவே நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மகாநாடு அவர் பெயரைச் சொல்லி வரலாற்றில் வாழும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நீண்ட நாட்கள் பணியாற்றிய பெருமையும் பேராசிரியர்.சு.வித்தியானந்தனுக்கு உரியது. பல்கலைக்கழக வளர்ச்சியில் அவரது பங்கு மகத்தானது என நான் சொல்வேன் 

பேராசிரியர்.சு.வித்தியானந்தனின் நூற்றாண்டை உலக அளவில் கொண்டாடுவோம் வாருங்கள்கால 

பேராசிரியர்.கா.சிவத்தம்பி- 91 -10.05.2023

 


பேராசிரியர்.கா.சிவத்தம்பி- 91

இன்று பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் 91 ஆவது பிறந்த நாள்.

ஈழத்தின் தமிழ் கலை இலக்கிய விமர்சன உலகில் முற்போக்கு முகமாய் அறியப்பட்டவர் எங்கள் ஆசான் பேராசிரியர் கா .சிவத்தம்பி அவர்கள்.

யாழ்ப்பாணப் பல்கலைகழக தமிழ்த்துறைத் தலைவர்,கிழக்குப் பல்கலைக்கழக வருகை தரு பேராசிரியர்.தமிழ் நாட்டின் பல பல்கலைக்கழகங்களின் அழைப்புப் பேராசிரியர், என உயர் கல்விப் புலத்தில் தமிழ் ஆய்வு புதிய தளத்திலான திறனாய்வு என்பனவற்றில் தமிழின் மூல வேர்களிலிருந்து கண்டடைதல் எனும் கருத்துருவாக்கம் என தன் இறுதிக்காலம் வரை தமிழாய் தமிழியலாய் வாழ்ந்து மறைந்த தமிழ்க் கடல் அவர்.

தமிழின் பழந்தமிழ் இலக்கியங்களை அறிவு பூர்வமாக அணுக வேண்டும் என்ற முறையியலை முன்வைத்து தன் ஆய்வுகளின் வழி பயணித்து புதிய சிந்தனைகளின் உருவாக்கத்துக்கு மாணவர்களின் திசைகாட்டியாய் திகழ்ந்தவர்.

மாக்சிய அணுகு முறையில் இலக்கியங்களை கண்டடைதல் சமூகவியல் தளத்தில் அவற்றை வைத்துப் பார்த்தல் என இலக்கியப் பெறுமானங்களை மதிப்பிடலும் அவற்றை விளங்கிக் கொள்ளலும் என தமிழ் ஆய்வுலகை வழிப் படுத்தியவர் பேராசிரியர்.கா.சிவத்தம்பி அவர்கள்.

தமிழ் அரங்கின் தொன்மை அதன் செழுமை எனபன சங்க இலக்கியத்தின் பெரும் புதையல் என தன் ஆய்வுகளின் மூலம் உலக தொன்மை மிகு அரங்க மரபோடு இணைத்து ஆராய்வு ரீதியாக அணுகி தமிழ்நாடகத்தின் மூலத்தை அறிவியல் பூர்வமாக நிருபித்து நம் நாட்கங்கள் நடன முறைமைகள் அவற்றின் வழியாக தொடர்ந்த ஒரு பெரும் கலைப் பண்பாட்டை உலகறிய வைத்தவர்  பேராசிரியர்.கா.சிவத்தம்பி அவர்கள்.

அவரது விரிவுரைகள் எப்போதும் சுவை மிகுந்ததாய் எத்தனை மணித்தியாலம் சென்றாலும் நேரம் போனதே தெரியாமல் நம்மை சிந்திக்க வைத்து அறிவார்ந்த தளத்தில் களி நடம் புரியச் செய்யும்.

இன்று அவரது பிறந்த நாளில் அவர் விட்டுச் சென்ற சிந்திப்பதற்கும் செயல்படுவதுக்குமான முற்போக்கு வழியிலான இலக்கிய வழிகாட்டல்களை என்றென்றுமாய்.

விரிந்த வயலெங்கும்

 


விரிந்த வயலெங்கும்

பசுமையின் படர்ச்சி

உலகின் உயிர்ப்பை

உரக்கச் சொல்லும்

நடக்க நடக்க என்னோடு

இணைந்து மகிழும்

இயற்கை அன்னை

முந்திச் சென்ற சிரிப்பில்

பார்த்து பார்த்து

சுவைக்க சுவைக்க 

சொல்லில் அடங்கா

அழகின் சிலிர்ப்பு

கால(னிய) நீக்கம்


 கால(னிய) நீக்கம்

ஏறி வந்த ஏணியை

எட்டி உதைத்து

மேலே போய்

எள்ளி நகையாடல்

கால நீக்கம்

கடந்த காலத்தை மறந்து

உண்மையை மறைத்து

பொய்மைக் கோலத்தில்

புழுகு மூட்டை

அவிழ்ப்பாய்

வானத்திலிருந்து வந்தவர்கள்

 


வானத்திலிருந்து வந்தவர்கள்

ஏறி வந்த ஏணியை மறந்து
எகிறிக் குதிக்கும்
அதி மேதா விலாசம் காட்டும்
அறிவு ஜீவிதப் புனைவு
திண்ணையை மறந்து
விண்ணாணம் பேசும்
எல்லாம் தெரிந்தவர்கள் போன்ற
கதையாடல்கள்
கதைத்து கதைத்தே
காதைத் திருகி எறியும்
திருகு தாளக் கோமாளிகளின்
கால(னிய)நீக்க கருத்து திணிப்பு

 முள்ளி வாய்க்கால்

துயரம் என்ற
சொல்லுக்கு மேல்
ஒரு சொல் இருக்குமானால்
அது முள்ளி வாய்க்கால்
மனிதம்
மரணித்த நாட்கள்
யார்க்கெடுத்து உரைப்போம்
என ஏங்கிய மக்கள் கூட்டம்
வலி சுமந்தலைந்தோம்
என்ற சொற்றொடருக்குள்
அடக்க முடியாத
அவலப் பெரு வெளி