Saturday, 3 September 2016

சீர் பூத்த தென் வெருகல்





வான் பொய்ப்பினும் தான் பொய்யா வெருகல் ஆறு நிரம்பி வழிந்து  தான் செல்லும் இடமெல்லாம் செல்வத்தை அள்ளி சொரியும் அழகு.தான் பாயுமிடமெங்கும் அழகையும் அழைத்துச் செல்லும்.வற்றாத ஜீவ நதி மாவலியின் கிளையாய் கழிமுகம் காணும் கங்கை மகள்.
எங்கு திரும்பினாலும் பசுமையாய் வயல்களும்  இணைந்திருக்கும் பசுமைப் பயிர்களும் கோயிலும் தீர்த்தமும் ஒன்றாயிருக்கும் குடிசார் அழகு.

கங்கையோரத்தில் கம்பீரமாய் நிமிர்ந்து நிக்கும் கோபுர கலசம் கலசத்தின் ஒளி தெறித்து பொன்னிறம் பரப்பும் நதியும் நாணலும்.மருத மரங்களிடை சூரியன் பட்டு தெறித்து வண்ணம் காட்டும் வடிவு இவையெல்லாம் வெருகலுக்கேயுரிய அழகு.

குன்றாய் நீண்டு செல்லும் மலைத் தொடர் வழியே நம் மூதாதையர்களின் சுவடுகளை சுமந்து கொண்டு அமைதியாய் அழகாய் தொன்மை வரலாற்று படிவுகளின் வழி கல்வெட்டுக்களாய்,கட்டிட அழிவுகளாய் எல்லாம் நம் இருப்பை சொல்லி நிற்கும் கம்பீரம்.

கதிர்காம யாத்திரைக் காலங்களிலும் திருவிழாக் காலங்களிலும் மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழியும் வெருகல் சித்திரவேலாயுதர் ஆலயம் இன்று என்றுமில்லாதவாறு இரு முனைகளிலிருந்தும் ஆட்கள் சாரி சாரியாக குவியத் தொடங்கினர்.ஏதோ முக்கிய நிகழ்வுக்கான ஆயத்தங்கள் நடை பெற்றுக் கொண்டிருந்தன.ஆலையத்தை சூழ உள்ள பகுதிகள் எங்கும் மகர தோரணங்கள் தொங்க விடப்பட்டு அலங்கரிக்கப் பட்டு விழாக் கோலம் பூண்டிருந்தது வெருகல்.

அரசன் வரவிற்காய் காத்திருக்கும் முடிசூட்டு விழாப் போல கொட்டியாரத்தின் அரச பிரதானிகள்,கோயில் கங்காணங்கள் புலவர்கள் அறிஞர்கள் என பெரும் அவையினரின் வரவால் அள்ளுண்டு வந்த கலை கோயிலாய் காட்சியளித்தது வெருகல்.

ஏழுர் அடப்பன் மார்களும் தேசத்து மூத்தவர்களும்  வெருகலில் அலங்கரிக்கப் பட்டிருந்த சபா மண்டபத்தில் கூடியிருந்தனர்.கலைஞர்கள் கூட்டம் ,தம்பலகாமத்து ஆடல் மகளிர்,கொட்டியார தேசத்து கூத்தர்கள் என கலைக் கூடமாய் மாறியிருந்தது வெருகல்.
கண்டி விக்கிரமராசசிங்கனின் அரச பிரதானிகளும் அங்கு வருகை தந்திருந்தனர்.
எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தால் போல் கொட்டியாரத்து வன்னிபம் இருமரபுய்ய வந்த இளஞ்சிங்கன் தன் படை பரிவாரங்களுடன் கைகளில் மாலையுடன் காத்திருக்க

அழகிய கொம்பன் யானைமேல் புலவர் வீரக்கோன் முதலியார் கையில் பெரும் ஏடு ஏந்தி மக்கள் புடை சூழ வாழ்த்துக்களுடன் வரவேற்று அழைத்து வர இளஞ்சிங்கன் புலவருக்கு மாலை அணிவித்து அரங்கேற்ற மேடைக்கு அழைத்து சென்று இருக்கையிட்டான்.

தம்பலகாமத்து புலவர் வீரக்கோன் முதலியார் தேசத்தார் அவையில் வெருகல் சித்திரவேலாயுதர் காதல் எனும் குறும் காவியத்தை படிக்க தொடங்கினார்.எல்லோர் முகங்களிலும் மகிழ்ச்சி .

"சீர்பூத்த தென்வெருகற் சித்திரவே லாயுதர்மேல்
ஏர்பூத்த செந்தமிழா லின்பரசக் காதல்சொல்ல 1

வார்பூத்த கும்பதன வல்லவைதன் பாகமுறுங்
கார்பூத்த மேனிக்க ணபதிதாள் காப்பாமே. 2

தென்னிலங்கை ராவணணைச் செய்யவிர லாலூன்றிப்
பின்னவன்ற னின்னிசையைப் பெட்புடனே கேட்டுவந்து

வாளுடன்வா ணாள்கொடுத்த மாகோணை நாயகர்தந்
தாளிணையெந் நாளுந்த மியேனுக் குத்துணையே. 4"

நூல் அரங்கேற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது ஒவ்வரு கண்ணிக்கும் இளஞ்சிங்கனும் அவையோரும் கரகோசித்து மகிழ்ந்தனர்.

"செயய வெருகனகர்ச் சித்திரவே லாயுதர்மேல்
வைய மகிழு மதுரமொழிக் காதல்சொல்ல 5

மையனைய பூங்குழலாண் மாதுபிடியன்னநடை
ஐயைமலர்ப் பாதமதை யன்பாகப் போற்றிசெய்வாம். 6"

என தொடர புலவரின் கவியாற்றலை மனதுக்குள் வியந்து பலரும் பாராட்டிக் கொண்டிருந்தனர். கடவுள் காப்பிலிருந்து வாழ்த்தாய் மாறி இப்போ காதலாய் மலர்ந்த பகுதிகள் அரங்கேறிக் கொண்டிருந்தன.

"வேலரிடம் தூதாய் விரைந்தேதி யென்றுயரைச்
சாலமுடன் சொல்லுஞ் சமயம€தைக் கூறுவன்கேள் 368

என்போலும் பெண்களிசைந்தனுப்புந் தூதுவர்கள்
அன்புடனே பேசு மமையமதிற் சொல்லாதை. 369

இந்திரனுஞ் சந்திரனு மெண்ணிரிய விண்ணவரும்
வந்துதொழும் போதெனது மையறனைச் சொல்லாதை.

வீரவா கோடுமற்றும் வீரர்மற்றும் வீரர்தொழு தேத்துகின்ற
நேரமதி லென்மயலை நீயெடுத்துச் சொல்லாதை 371"

சித்திரவேலாயுதர் மேலான காதலை புலவர் தன் மொழியில் அழகாய் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்

"மெத்தபுகர் வாய்ந்த வெருகற்ப தியுறையுஞ்
சித்திரவே லாயுதரின் சீரடியி லன்புகொண்டு 372

மானமு டன்மிக்க வயனிலமுந் தோப்புகளும்
மானிய மாயீந்த மகராச ராசேந்திரன் 373

மாணிக்கம் வைத்திழைத்த வன்னப்ப தக்கமுடன்
பூணணிக ளீந்து புகழ்படைத்த பூபாலன் 374

கண்டிநக ராளுங் கனகமுடி ராசசிங்கன்
தெண்டனிடும் போதெனது சேதியைநீ சொல்லாதை. 375

சித்திரவே லாயுதவேள் சேர்ந்துமகிழ் வாயுறையுஞ்
சித்திரஞ்சே ராலயமுஞ் செம்பொற் சினகரமும் 376

திட்டமுடன் முன்னாளிற் செய்தநல்ல நாகனெனுஞ்
செட்டிவம்மி சத்திலுள்ள செய்யபிர தானிகள்போய் 377

பன்னரிய பாதம்ப ணிந்துதொழு சேத்துகையில்
என்னடைய சங்கதியை யெள்ளவுஞ் சொல்லாதை. 378"

வெருகலில் பணியும் கொடையும் அளித்தோரை புகழ்ந்தும் பாக்கள் கண்ணிகள் தொடர்ந்தன.

"துன்னு மிருமரபுந் துய்யவிளஞ் சிங்கமெனும்
வன்னிமைபொற் பாதம் வணங்கையினீ சொல்லாதை 379

சாற்று நிலைமை தலைமையுடன மற்றுமுளார்
போற்றுகையி லென்மயலைப் பூங்கிளியே சொல்லாதை 380

வித்வசனர் பாமாலை மெல்லடியிற் சூட்டுகையிற்
சத்தியமா யென்மயலைச் சற்றுநீ சொல்லாதை. 381

எண்டிசையிற் பாலகரு மிப்புவியி லுள்ளவருந்
தெண்டனிடும் வேளையிலென் சேதிதனைச் சொல்லாதை. 382

வன்னிமைதே சத்தார்ம காநாடு தான்கூடி
மின்னுமெழின் மண்டபத்தில் வீற்றிரக்கும் வேளையிலே 383

கோதில்புகழ் சேர்வீரக் கோன்முதலி தானியற்றுங்
காதலரங் கேற்றுகையிற் காதறனைச் சொல்லாதை"

புலவர் வீரக்கோன் முதலியார் தன் கண்ணிகளால் சித்திரவேலாயுதர் காதலை பாடி முடிக்க கரகோசம் வானை முட்டியது.தென்னன்மரபடி,திருகோணமலை,தம்பலகாமம்,கொட்டியாரம் என எல்லா பிரதேசத்தினரும் புலவரை வாழ்த்தினர்.மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தார் புலவர்.

(படங்கள் நண்பர்,உறவினர் திருமலை சசிகுமார் நன்றிகள்)

Friday, 2 September 2016

ஒரு சேமணையனின் கதை

ஒரு சேமணையனின் கதை

எங்கள் சேனையூரில் சில சிறப்பான சொல் வழக்குகள் உள்ளன அதில் இதுவும் ஒன்று.சேமணையன் என்றால் ஒன்றும் தெரியாத முட்டாள் என்று அர்த்தப்படும்.இனி கதைக்கு வருவோம்.

ஒரு ஊர்ல ஒரு சரியான சேமணையன் ஒருவன் இருந்தானாம்.அவன் வேலைக்கு போறல்லயாம் தாய்க்காரி எங்கயாவது பிச்சி புடுங்கி ஆக்கிக் கொடுக்க சாப்பிட்டு விட்டு வீட்டு விறாந்தையில படுத்து தூங்குறதுதான் அவன் வேலையாம்.ஒரு செம்பு தண்ணி கூட தூக்க மாட்டானாம் அதுவும் அம்மாதான் எடுத்து கொடுக்கணுமாம்.

இப்படி இருந்து வாற காலத்தில தாய்க்காரிக்கு கோபம் வந்திச்சாம் படுத்துகிடந்தவன தட்டி எழுப்பி டேய் மகனே எத்தனை நாளைக்குத்தான் இப்படி இருக்கப் போறா எங்கயாவது வேலைக்கு போய் உழைச்சு வாடா என்ற கண்ணுக்கு பிறகு நீ சரியா கஸ்ரப் படப் போறா.என்று சொன்னாவாம்.அவன் கேக்கிற மாதிரி இல்லையாம்.

அவவும் விடாம ஒவ்வொரு நாளும் நச்சரித்துக் கொண்டே இருந்தாவாம்.அவட அரிகண்டம் தாங்க ஏலாம ஒரு நாள் விடிய சொன்னானாம் எனக்கு சோறு கட்டித்தா நான் வேல தேடப் போறன் ,என்று சொல்ல தாயும் நல்ல பச்சரிசியும் பச்சடியும் வைச்சு சோறு கட்டிக் கொடுக்க மம்பட்டி ஒன்ற எடுத்துக் கொண்டு ஒவ்வொரு இடமா வேல கேட்டுப் போனானாம் ஒருவரும் வேல கொடுக்கலையாம் இந்த சேமணையனுக்கு ஆர் வேல கொடுக்கிறது என்று சொல்லிற்று போய்ற்றாங்களாம்.

சரியான வெய்யில் கொழுத்தி எறியுதாம் ஊர தாண்டி போய்ற்றானாம்.நல்ல பசியும் வந்திற்றாம்  ஒரு மரத்துக்கு கீழ இருந்து தாய் கட்டிக் கொடுத்த சோத்து முடிச்ச அவிட்டு  நல்லா சாப்பிட்டானாம் நித்திர வந்திற்றாம் அபபடியே படுத்திற்றானாம்.படுத்திற்று எழும்பி பாத்தானாம் முன்னால ஒரு புத்தாம் புத்துக்கு மேல ஒரு கிழட்டு ஓணான் இருந்திச்சாம்.அது வெய்யிலுக்கு சீக்கா அடிச்சுதாம் ஓணானுக்கு வெய்யிலென்றால் நல்ல விருப்பம் அப்ப அது சந்தோசத்தில சீக்கா வலிக்கும் .அது இவனுக்கு கூப்பிடுற மாதிரி இருக்க ஓணானிட்ட எனக்கு வேல தருவியா என கேட்டானாம் அதுவும் ஓம் என்று தலையாட்டிச்சாம் ஓணான் எப்பவும் தலைய ஆட்டிக் கொண்டிருப்பது இவனுக்கு தெரியாது.திருப்பிக் கேட்டானாம் எங்க வேல இங்கயா என்றானாம் அதுக்கும் தலையாட்டிச்சாம்.இவனும் ஓ என்று தலயாட்டி இந்த இடத்த துப்பரவாக்கட்டா என்றானாம்  ஓணான் திரும்பியும் தலையாட்டிச்சாம்.சரி இண்டைக்கு பொழுது பட்டு போய்ற்று நாளைக்கு வாறன் எண்டு சொல்லிற்று வீட்ட வந்தானாம்.

வீட்ட வந்தவன் அம்மாட்ட எனக்கு ஒராள் வேல தந்திருக்கார் நான் நாளைக்கு நேரத்தோட வேலைக்கு போகணும் .விடிய சோறு கட்டித் தந்திரணும் என்று சொல்ல மனிசியும் சரியா சந்தோசப் பட்டு அடுத்த நாள் நல்ல பெரிய சோத்து முடிச்சா கட்டிக் கொடுத்தாவாம்.அவனும் விடிஞ்சதும் அந்த இடத்துக்கு போய் வெட்டி வெழியாக்கினானாம்.அந்த வழியால போன ஆக்களெல்லாம் சேமணையனுக்கு விசர் புடிச்சிற்று போல என சொல்லிப் போனாங்களாம்.

அவனும் மாடு மாதிரி வேல செய்தானாம்.புத்துக்குள்ள இருந்து ஓணான் வந்திச்சாம் இவன் கேட்டானாம் சம்பளம் எப்ப இண்டைக்கு இல்லையா பிறகா என்ற ஓணான் தலையாட்டிச்சாம் இவனும் ஓ எண்டு சொல்லிற்று போய்ற்றானாம்.இப்படி ஒரு மாதம் போய்ற்றாம் .தாய்க்காரி என்னடா சம்பளம் கிடைக்கலையா எண்டு கேப்பாவாம் இவனும் பிறகு  பிறகு எண்டு சொல்லித் திரிய ஆக்களும் இவன் பகிடி பண்ண  தொடங்கினாங்களாம் என்னடா உனக்கு எப்ப சம்பளம் இவன் சொல்வானாம் முதலாளி பிறகு தாறன் எண்டு சொன்னவர். எப்படா  நீயும் உண்ட வேலையும் சரியான முட்டாள் உனக்கு சம்பளமும் கிடைக்காது ஒண்ணும் கிடைக்காது எண்டு ஆக்கள் எல்லாம்  சொல்ல இவனுக்கு கோபம் வந்திச்சாம்.

இதுக்கிடையில அந்த இடம் முழுவதையும் இவன் நல்லா துப்பரவாக்கியிருந்தானாம் அந்த இடம் பயிர் செய்யக் கூடிய அளவுக்கு சுத்தமா இருந்திச்சாம்.

கோபம் வந்த இவன் அந்த இடத்துக்கு போனானாம். அங்க ஓணான் புத்துக்கு மேல இருக்கேராம் எப்ப சம்பளம் என கேட்டானாம் ஓணான் மேல் கீழா தலைய ஆட்டிச்சாம் .ஓ இந்த புத்துக்குள்ளயா எண்டு கேட்டிற்று புத்த வெட்டத் தொடங்கினானாம்.வெட்டிக் கழைச்சு போன நேரத்தில நங் என்றொரு சத்தம் கேட்டிச்சாம் அங்க பாத்தா ஒரு பானைக்குள்ள அவ்வளவும் தங்க காசுகளாம்.அத தூக்கிற்று எனக்கு சம்பளம் கிடைச்சிற்று என்ற் சத்தம் போட்டுக்கொண்டு தாய்ற்ற போய் குடுத்தானாம்.
பிறகு?
தாயும் மகனும் சந்தோசமா வாழ்ந்தாங்களாம்