Friday, 16 July 2021

மாடத்தி

 மாடத்தி


மாடத்தி பார்த்தேன் மனம் கனத்துக் கிடக்கிறது


தமிழ் சினிமா இதுவரை தொடாத களத்தின் கதையை திரை மொழியாக்கியிருக்கிறார் லீனா மணிமேகலை.


ஆவணப் படங்கள் குறும் படங்கள் மற்றும் கதைப் படங்கள் என  மாற்று தமிழ் சினிமாவின் ஒரு முகமாய் வித்தியாசமான திரை மொழியை நம் முன் கொண்டு வருபவர் லீனா. சமூக அக்கறையுடன் கலை உருவாக்கத்தையும் அதன் செல் நெறியையும் நேசிக்கும் முக்கியமான படைபாளி அவர்.கவிதைகளில் பெண் மொழியின் தனித்துவத்தை தடம் மாறாமல் சொல்லும் கலைஞர்.இன்று மாடத்தி எனும் திரைப் படத்தின் மூலம் தமிழ் நாட்டில் பேச வேண்டிய விடயங்கள் எவ்வளவோ உள்ளன என்பதை கலை நேர்த்தியுடன் சொல்லியிருக்கிறார் மாடத்தியில்.


மிகச் சாதாரணமாகவே தொடங்குகின்ற திரைப்படம் ஓவியங்களின் மூலம் காட்சிப் படிமங்கள் மூலம் கதை சொல்லும் உத்தியை வெற்றிகரமாக கையாண்டிருக்கிறார்  


புதிர் வண்ணார் என்கிற சமூகம் மேல் சாதியினரின் அடக்கு முறை என நகரும் கதை ஒரு சாதியினரை அவர்கள் அவலங்களின் ஒரு பருக்கைதான் இந்தக் கதையானாலும் .தமிழ் நாட்டில் உள்ள அடக்கப் பட்ட்ட தலித் சமூகங்களின் வாழ்வு இன்று வரை ஆண்டான் அடிமை முறையிலேயே உள்ளது என்பதன் குறி காட்டி இந்தத் திரைப்படம்.


தமிழ் அதன் பெருமை என மார் தட்டிக் கொள்ளும் ஒரு காலச் சூழலில் தமிழ் சமூகம்  கேவலம் மிக்க சாதிய ஒடுக்கு முறை அகலாத வாழ் நிலை கொண்டதாக உள்ளமையின் வெளிப்பாடு இத் திரைப்படம் .


குறிப்பாக சாதிய வன்மத்துக்கு எப்படி பலியாகிறார்கள் என்பதன் கதைச் சித்தரிப்பும் பாத்திரங்களின் இயல்பான வாழ்வியலும் ,காட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாய் பின்னப் பட்டு கதை வளர் முரண்களில் சாதியக் கட்டுமானத்தின் வன்மம் காலம் காலமாய் தாயிலிருந்து மகள் மகளில் இருந்து தொடரும் பரம்பரை காட்டு மிராண்டித் தனமாக சிதைக்கப் படும் அவலம் மாடத்தி வரை நீள்கிறது.


தமிழ் நாட்டு கிராமத் தெய்வங்களின் உருவாக்கங்கள் இத்தகய ஒரு பின் புலத்தில் பெண் தெய்வமாக்கப் பட்டு அவள் புனிதங்களின் கடவுள் என்பதை மாடத்தி உடைத்து நம் முன் கொண்டு வருகிறாள்.


தமிழ் சினிமா பேச வேண்டிய எவ்வளவோ விடயங்கள் இருக்கின்றன என்பதை லீனா இந்த திரைபடத்தின் மூலம் உணர வைத்திருக்கிறார் 


பெண் மொழியாய் மாடத்தி நம் முன் உயர்ந்து நிற்கிறாள்.


இதில் பங்கு கொண்ட நடிக,நடிகையர்கள் இயல்பாகவே பாத்திரங்களாக உலா வருகின்றனர்


வாணியாக வருகின்ற செம்மலர் அன்னம் அந்த பாத்திரத்திற்கு ஊயிரோட்டமான உடல்  மொழியில் பதகழிப்பு படம் முழுவதும் நம்மை பதட்டமடைய வைக்கிறது ஏதோ நடக்கப் போகிறது என்பதை எதிர்வு கூறிக் கொண்டே இருக்கிறது.தன் மிகச் சிறந்த நடிப்பை வெளிப் படுத்தி முன்னிலைப் படுகிறார் அன்னம்.


யோசனாவாக வருகின்ற அச்மினார் ஹாசிம் மெல்ல மெல்ல வளர் பருவத்தின் மாற்றத்தை வெளிப்படுத்துவதில் இன்னமும் கொஞ்சம் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம் போலத் தெரிகிறது.


ஒளிப்பதிவும் இசையும் திரை மொழியில் நம்மை ஒன்றிப்பதில் வெற்றி கண்டிருக்கின்றன என்றால் மிகையில்லை.


மாடத்தி மனதில் கனத்துக் கிடக்கிறாள்